"Constable போதும்; என்னை பதவியிறக்கம் செய்யுங்கள்" - Sub Inspector பதவியைத் திரும்பியளித்த காவலர்

6 hours ago 10

அனைவரும் தங்களுக்குப் பதவி உயர்வு கிடைக்கவேண்டும் என்று விரும்புவது வழக்கமான ஒன்றுதான். ஆனால் டெல்லியைச் சேர்ந்த ஒரு சப் இன்ஸ்பெக்டர் தனக்கு தனது பழைய கான்ஸ்டபிள் வேலையை மீண்டும் கொடுங்கள் என்று கேட்டு வாங்கி கான்ஸ்டபிளாக மாறி இருக்கிறார்.

டெல்லியில் சப் இன்ஸ்பெக்டராகப் பணியாற்றி வருபவர் மனீஷ். இவர் ஆரம்பத்தில் கான்ஸ்டபிளாகத்தான் பணியாற்றி வந்தார். மற்ற கான்ஸ்டபிள்களைப் போன்று இவரும் பதவி உயர்வுக்காக இலாகா மட்டத்தில் நடந்த தேர்வை எழுதினார்.

அத்தேர்வில் வெற்றி பெற்று சப் இன்ஸ்பெக்டராகவும் மாறிவிட்டார். ஆனால் சப் இன்ஸ்பெக்டராகி ஒரு சில மாதங்களில் அந்த வேலை மனீஷிக்குப் பிடிக்கவில்லை. கான்ஸ்டபிள் வேலை போன்று திருப்தியளிக்கவில்லை.

இதையடுத்து என்னை மீண்டும் கான்ஸ்டபிளாகப் பதவியிறக்கம் செய்யவேண்டும் என்று கோரி உயர் அதிகாரிகளுக்கு கடிதம் எழுதினார்.

அவர் தனது கடிதத்தில், "சார், நான் ஒரு கான்ஸ்டபிளாக நன்றாக இருந்தேன்.

தயவுசெய்து என்னை கான்ஸ்டபிளாக மாற்றவும். தேர்வில் தேர்ச்சி பெற்றதன் மூலம் நான் இந்த ரேங்கைப் பெற்றேன், ஆனால் நான் சப் இன்ஸ்பெக்டர் வேலையில் மகிழ்ச்சியாக இல்லை. எனது கான்ஸ்டபிள் வேலையில் மகிழ்ச்சியாக இருந்தேன்" என்று குறிப்பிட்டுள்ளார். அவரது கோரிக்கையைப் பார்த்த உயர் அதிகாரிகள் ஆச்சரியம் அடைந்தனர்.

ஆனாலும் அவரது கோரிக்கையை நிராகரிக்க முடியவில்லை. இதையடுத்து அவர் மீது எதாவது விசாரணைகள், வழக்குகள், சஸ்பெண்ட்கள், பண பிரச்னை என்று எதாவது சிக்கல் இருக்கிறதா என்று விசாரிக்கும்படி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டு இருந்தது. அதன் அடிப்படையில் கிடைத்த அறிக்கைகளின் அடிப்படையில் மனீஷுக்கு மீண்டும் கான்ஸ்டபிள் வேலையைத் திரும்ப கொடுத்து இருக்கிறது காவல்துறை.

Read Entire Article