Exclusive | “அதிமுக – திமுக சேர்ந்து ஆட்சி… எடப்பாடி பழனிசாமி முதலமைச்சர் பேச்சு நடந்தது…” – உடைத்துப் பேசிய திருமாவளவன்

37 minutes ago 17

தேர்தலுக்குப் பிந்தைய ஆதரவை எப்படிப் பார்ப்பது?

தவெகவுக்குத் தேவையான எண்ணிக்கை என்பது 11. திமுக கூட்டணியில், 13 உறுப்பினர்கள் மொத்தம் இருந்தனர். இதில், காங்கிரஸ் உடனடியாக வெளியேறியது. நான் காங்கிரஸ் கலந்து ஆலோசிக்கும் என எதிர்பார்த்தேன். ஆனால், அது நடக்கவில்லை. பிறகு இடதுசாரிகளுடனான தோழமை மற்றும் முந்தையகால செயல்பாடுகளால், அவர்களது முடிவை ஒட்டி என் முடிவு என நானாக அறிவித்தேன்.

விசிக ஏன் காலம் தாழ்த்தியது எனும் விமர்சனம் தொடர்ச்சியாக இருந்துவருகிறதே?

நாம் எந்த முடிவெடுத்தாலும் சேர்ந்து முடிவெடுப்போம். அந்த முடிவு எதுவாக இருந்தாலும், மரியாதை நிமித்தமாக இவ்வளவுநாள் பயணித்துவரும் திமுக தலைவரிடம் தெரிவித்துவிட்டு, வெளியே சொல்லலாம் என நான் இடதுசாரிகளிடம் தெரிவித்தேன். அதுமட்டுமின்றி காமன் மினிமம் ப்ரோக்ராம் விஜய்க்கு முன்வைப்போம் என இடதுசாரிகளிடம் கோரிக்கை வைத்தேன். அதன் பிறகு அவர்களது கூட்டம் கூடியது. அது 4 மணிக்கு முடியும் என்பதால், நாங்கள் 5 மணிக்கு வைத்து பிறகு அது 6 மணி என்றானது.

இதற்கிடையில், இடதுசாரிகளின் மாநிலச் செயலாளர்கள் தொலைபேசியில் தொடர்புகொண்டு தவெகவுக்கு ஆதரவு தருவதாகச் சொன்னார்கள். முன்னதாக 5ஆம் தேதி மாலை திமுக கூட்டணி கட்சியினர், திமுக தலைவரை நேரில் சந்தித்தோம். அப்போது அவர், இது மக்கள் அளித்த தீர்ப்பு. எனவே அவர் ஆட்சி அமைப்பதை நாம் யாரும் இடையூறு செய்யக்கூடாது. அனைவரும் ஒற்றுமையாக இருந்து செயல்படுவோம் எனவும் தெரிவித்தார்.

7ஆம் தேதி தனித்தனியாக மு.க.ஸ்டாலினிடம் இருந்து அழைப்பு வந்தது. நாங்கள் சென்று சேர்ந்து சந்தித்தபோது, அதிமுக – திமுக சேர்ந்தால், ஆட்சி அமைக்கக்கூடிய சூழல் இருக்கிறது. எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சராக்கலாம் என்ன சொல்கிறீர்கள் எனக் கேட்டார்கள். நான், இது திமுகவுக்கே பெரிய கேள்விக்குறியாகிவிடும். உங்கள் எதிர்காலமே சூனியமாகிவிடும். இது நல்ல முயற்சி இல்லை என நான் சொல்லிவிட்டேன். இடதுசாரிகளும் கிட்டத்தட்ட அதனையே சொல்லியுள்ளனர்.

பிறகு அது தொடர்பாக எந்தப் பேச்சும் எங்களிடம் வரவில்லை. 8ஆம் தேதி நான் அவரைச் சந்தித்தபோது, இடதுசாரிகளைத் தொடர்ந்து நீங்களும் தவெகவை ஆதரிப்பது என முடிவு செய்துள்ளீர்கள். அதனைச் செய்யுங்கள் என ஸ்டாலின் தெரிவித்துவிட்டார். அவர் அங்கிருந்து சென்றபிறகு, இந்த விவகாரத்தில் தற்போது வேறு ஒரு பேச்சு எழுந்துள்ளது. திருமாவளவனை பொதுவாக முதலமைச்சராகவும், இபிஎஸ் உள்ளிட்டோர் துணை முதலமைச்சராகவும் ஏற்பதற்கு அதிமுக தரப்பில் இருந்து பேச்சுகள் எழுந்துள்ளன எனத் தெரிவித்தனர். மேலும், அப்படியாக ஒன்று நடந்தால், நாங்கள் வெளியில் இருந்து உங்களை ஆதரிப்போம் எனத் தெரிவித்தனர். இதுவெல்லாம் தமிழ்நாட்டில் நடக்குமா எனக் கூறிவிட்டு சிரித்துவிட்டு வந்துவிட்டேன்.

ஏன் எங்கள் முடிவு காலதாமதமானது என்பதைச் சொல்கிறேன். வேளச்சேரியில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, நான் 9ஆம் தேதி முடிவை அறிவிக்கிறேன் எனத் தெரிவித்துவிட்டேன். இதற்கிடையில், எங்கள் கட்சியினருடனான ஆலோசனையில் என்ன நடந்தது என்பதையும் பார்க்க வேண்டும். இடதுசாரிகள் கருத்தை வழிமொழிகிறோம் சரி. ஆனால், அவர்கள் அமைச்சரவையில் இடம் இல்லை என்பதை முடிவெடுத்தால், அதனையே நாம் எடுக்க வேண்டுமா என்பதுகுறித்து ஆலோசனைக் கூட்டத்தில் பேசப்பட்டது. நிர்வாகிகள் பலரும், அமைச்சரவையில் இடம் பெற வேண்டும் என்பதை வலியுறுத்தினர்.

8ஆம் தேதி மாலையே ஆதரவு கடிதம் தயார் செய்து, ரவிக்குமாருக்கு வந்துவிட்டது. வன்னி அரசு வெளியே இருந்தார். அங்கு இருந்து சென்னை வர 9ஆம் தேதி காலை தாமதமானது. நானும் அவரை என்னைச் சந்திப்பதற்கு முன்பாக பொதுச் செயலாளர்களைப் பார்த்துவிட்டு வரச் சொன்னேன். அதனால், 12.45 மணி போல் தான் என்னை வந்து சந்தித்தார்கள். அங்கு வைத்து அமைச்சரவையில் இடம் பெறுவதா வேண்டாமா என்பதை ஆலோசித்தோம்.

ஆதரவு தருவதென்றால், அமைச்சரவையில் இடம் பெற வேண்டும். அதில் நீங்களே செல்ல வேண்டும் எனவும் அவர்கள் தெரிவித்தனர். தவெக தரப்பில் இருந்து இதனை விரும்புகிறார்கள் எனவும், திருச்சி கிழக்கில் போட்டியிடவும் விரும்புவதாக என்னிடம் பேசினர். பிறகு விஜய்யும் என்னை தொலைப்பேசியில் தொடர்புகொண்டு அழைப்புவிடுத்து, நீங்கள் விரும்பியதுபோல் இருக்கலாம் என்றார். பிறகு ஆலோசனை முடித்துவிட்டு, 3 மணிக்கு ஆதவுக்கு தகவல் கொடுத்துவரச் சொல்லி அவரிடம் கடிதம் கொடுக்க 4 மணி ஆனது.

இதற்கிடையில் சிலர் என்னைத் தொடர்புகொண்டனர். ஆனால், அதிகாரபூர்வமான தொடர்பு எனச் சொல்லமுடியாது. அவர்கள் 9ஆம் தேதி பிற்பகல் 2 மணிக்கு என்னைத் தொடர்புகொண்ட போது, என்னை முதலமைச்சராக முன்வைத்து பேசினர். ஆனால், நான் எங்கள் முடிவை தெரிவித்துவிட்டேன். முதலமைச்சரா அல்லது துணை முதலமைச்சரா என்பதில் தாமதம் என்பது தவறான கருத்து. ஆனால், ஆதவிடம் ஆதரவு கடிதம் கொடுத்துவிட்டு, மாலை 4 மணிக்கு புறப்பட்டு செய்தியாளர்களைச் சந்திக்க அலுவலகம் வருகிறேன். சுமார் 4.45 மணிக்கு எனக்கு ஒரு தரப்பில் இருந்து முக்கிய நபர் போன் செய்து, ’அனைத்தும் முடிந்துவிட்டது. ஆதரவு கடிதம் கொடுத்திருந்தாலும், செய்தியாளர்களைச் சந்திக்காதீர்கள். உங்களை முதலமைச்சராக அறிவிக்கப்போகிறேன்’ எனச் சொன்னார்கள். நான் வேண்டாம் நாங்கள் ஆதரவு கடிதம் கொடுத்துவிட்டோம். செய்தியாளர்களைச் சந்திக்கிறேன் என்று தெரிவித்துவிட்டேன்” எனத் தெரிவித்தார்.

Read Entire Article