Jana Nayagan: `இன்னும் சினிமா பண்ணலையாங்கிற கேள்வி அவ்ளோ வலி தரும்; இப்ப.!' - நடிகர் அருண்

1 hour ago 6

`ஜனநாயகனைக் கொண்டாடி வருகிறார்கள்' தமிழக முதல்வர் விஜய்யின் ரசிகர்கள். சில அமைச்சர்கள் 'இனி திரையில் அவரைப் பார்க்க முடியாதே' எனக் கண் கலங்கி அழுத வீடியோக்கள், விமர்சனங்களையும் ட்ரோல்களையும் ஒருசேர சந்தித்து வருகின்றன.

இந்தச் சூழலில் இந்தப் படத்தில் நடித்த சீரியல் நடிகர் அருணிடம் பேசினோம்.

அருண் காட்சிகள் படத்தில் இடம் பிடித்து முகம் பதிவாகி இருப்பதால் இரண்டு நாட்களாக அவருக்கு ஏகப்பட்ட போன் கால்கள், பாராட்டுகளாம்.

விவசாய வேலைகளில் நடிகர் அருண்

விவசாய வேலைகளில் நடிகர் அருண்

''டிவியில ரொம்ப வருஷம் இருந்தாலும் சினிமா பக்கம் வராமலே இருந்துட்டேன். சிரீயல்லயே நேரம் சரியா இருந்ததும் ஒரு காரணம். ஆனா முதல் சினிமா வாய்ப்பா தளபதி படம் க்ளிக் ஆன அந்த நிமிடம் இப்ப நினைச்சாக் கூட ஜிலீர்னு இருக்கு.

எப்போ ஷூட்டிங் ஆரம்பிக்கும், எப்ப அவரைப் பார்ப்போம்னு ரொம்ப எதிர்பார்ப்பா இருந்தேன், அந்த நாட்களும் வந்தன. என்னை நானே கிள்ளிப் பார்த்துகிட்டே ஷூட்டிங் போய் வந்தேன்.

அவர் எங்கிட்ட பேசிய வார்த்தைகளும் பதிலுக்கு நான் பேசிய வார்த்தைகளும் மனசுல ரெக்கார்டு பண்ணி வச்ச மாதிரி அப்படியே இருக்கு.

எனக்கு முதல் படம்கிறதால முக்கியமான தருணம். அவருக்கோ அரசியல் என்ட்ரி, கடைசிப் படம்னு எதிர்ப்பு ரொம்பவே எகிறி இருந்தது. போதாக்குறைக்கு தேர்தலுக்கு முன்பே வர வேண்டிய படத்துக்கு சிக்கல மேல சிக்கலை சிலர் உண்டாக்க, டைட்டில் கார்டுல முதலமைச்சர்னு போட்டே வந்திடுச்சு.

தமிழ்நாட்டின் முதலமைச்சருடன் சேர்ந்து நடிச்சிட்டேன். அதுவும் அவருடன் டயலாக்கெல்லாம் பேசியிருக்கேன்ங்கிறதை நினைக்கிற போதே ஏதாவது உயரமான இடத்துல இருந்து உரக்கக் கத்தணும் போல இருக்கு.

சினிமாவுக்காக கால் நூறாண்டு காத்திருந்திருக்கேன். பலர் பல தடவை சினிமா வாய்ப்பு வரலையானு கேட்டிருக்காங்க.. சினிமா பண்ணலையானு கேப்பாங்க. சிலர் அக்கறையோட கேப்பாங்க. சிலர் உன்னையெல்லாம் யார் அங்க கூப்பிடப் போறாங்கங்கிற டோன்ல கேப்பாங்க. அவ்வளவு வலி தரும். ஆனா இந்த ஒரு படம் போதும். வலி பறந்து போயிடுச்சு. வெற்றி கொண்டானால் வெயிட்டான அறிமுகம் கிடைச்சிருக்கு. அதுக்காக அந்த ஆண்டவனுக்கும் இப்ப ஆள்றவருக்கும் என் நன்றியைத் தெரிவிச்சிக்கிறேன்' என உற்சாகம் பொங்கப் பேசினார் மனித‌ர்.

Read Entire Article