அமெரிக்காவுக்கு எதிரான போட்டியை எந்த சிக்கலும் இல்லாமல் வெல்ல வேண்டும் என்பதே இந்தியாவின் திட்டமாக இருந்திருக்கும். இந்தியாவின் எண்ணத்திற்கு மாறாக செயல்பட்டு போட்டியில் சுவாரஸ்யத்தை கூட்டியிருக்கிறது அமெரிக்கா.
Published:1 min agoUpdated:1 min ago

டி20 உலகக்கோப்பையை வெற்றியுடன் தொடங்கியிருக்கிறது இந்திய அணி. அமெரிக்காவுக்கு எதிரான ஆட்டமென்றாலும் போட்டி இந்தியா vs இந்தியா என்பதைப் போன்றே இருந்தது. அமெரிக்க அணியில் அத்தனை இந்தியர்கள். பலருக்கும் மும்பைதான் சொந்த ஊர். வான்கடேவில்தான் கிரிக்கெட்டே பயின்றிருக்கிறார்கள். அதனால்தானா என்னவோ இந்திய அணியை அத்தனை எளிதாக வெல்ல விடவில்லை. இயன்றளவுக்கு சவால் அளித்தார்கள்.

Ind vs USA
இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமாரின் அட்டகாசமான இன்னிங்ஸ் இந்திய அணிக்கு வெற்றியை தேடிக் கொடுத்திருக்கிறது.
டாஸை அமெரிக்க கேப்டன் மோனாங் படேல்தான் வென்றிருந்தார். முதலில் பந்துவீசப்போவதாக அறிவித்தார். பிட்ச் கொஞ்சம் மெதுவானதாக தெரிந்ததாலும், போகப் போக காற்றில் ஈரப்பதத்தின் தாக்கம் இருக்கும் என்பதாலும் இந்த முடிவை எடுத்திருந்தார். இது மிகச்சரியான திட்டமாகவே இருந்தது. முதலில் பேட் செய்த இந்திய அணி 15 ஓவர்களுக்கு திணறவே செய்தது. 'இது 180 ரன்களை எடுப்பதற்கான பிட்ச் இல்லை. இது 140 ரன்களுக்கான பிட்ச். அதை உணர்ந்துதான் கடைசி வரை நின்று ஆடினேன்' என்றார். சூர்யாவின் இந்த புரிதல் இந்திய அணியின் பல பேட்டர்களுக்கும் இல்லை.

Ishan Kishan
இரண்டாவது ஓவரிலயே அபிஷேக் சர்மா அலிகானின் பந்தில் பெரிய ஷாட்டுக்கு முயன்று கேட்ச் ஆனார். கிட்டத்தட்ட பவர்ப்ளே முடியும் வரை இந்திய அணி இந்த பிட்ச் குறித்து சரியாக புரிந்துகொண்டதை போல தெரியவில்லை. எல்லா பேட்டர்களிடமும் ஒருவித வேகமும் அவசரமும் தெரிந்தது.
குறிப்பாக, 6 வது ஓவரில் சாக்விக் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார். இஷான் கிஷான், திலக் வர்மா, சிவம் துபே என எல்லாமே முக்கியமான விக்கெட்டுகள். நல்ல லைன் & லெந்தில் வேகத்தை முழுமையாக குறைத்தும் க்ராஸ் சீமாகவும் சாக்விக் வீசிய பந்துகளை இவர்களால் சரியாக கனெக்ட்டே செய்ய முடியவில்லை. அடுத்தடுத்து கேட்ச் கொடுத்து அவுட் ஆகினர். இந்த ஒரு ஓவர் அடுத்த 45 நிமிடங்களுக்கு போட்டி அமெரிக்காவின் கையில் இருக்க காரணமாக அமைந்தது
6 வது ஓவரில்தான் சூர்யகுமார் உள்ளே வந்தார். பவர்ப்ளே முடிகையில் இந்திய அணியின் ஸ்கோர் 46-4. ரிங்கு சிங் நம்பர் 6 இல் வந்தார். ஹர்மீத் சிங், மோசின் என ஸ்பின்னர்கள் கைக்கு பந்து சென்றது. பிட்ச் மெதுவாக இருந்ததால் இருவராலுமே பந்தை சரியாக கனெக்ட் செய்ய முடியவில்லை. சூர்யாவால் அவரின் வழக்கமான 360* ஷாட்களையும் ஆட முடியவில்லை. ஒரு கட்டத்தில் 22 பந்துகளில் 21 ரன்கள் எனும் நிலையில் சூர்யா இருந்தார். ரிங்கு சிங், ஹர்திக் பாண்ட்யா ஆகியோரும் ஸ்பின்னர்கள் மோசின் மற்றும் ஹர்மித்தின் ஸ்பின்னில் பெரிய ஷாட்டுக்கு முயன்று அவுட் ஆகினர். ஒரு கட்டத்தில் இந்திய 77-6 என்ற நிலையில் இருந்தது.

SKY
.
'டி20 உலகக்கோப்பையின் மிகக் குறைந்த ஸ்கோரை இந்திய அணி கடந்துவிட்டது' என்று ஹர்ஷாவும், 'இந்தியாவின் டெயில் எண்டர்களிடம் கிரிக்கெட் பேட் இருக்கிறதா என்றே தெரியவில்லை. வருண் சக்கரவர்த்தியெல்லாம் 33 போட்டிகளில் 2 ரன்களை மட்டுமே எடுத்திருக்கிறார்' என்று கவாஸ்கரும் கமெண்ட்ரியில் கிலி ஏற்றிக் கொண்டிருந்தனர். மேட்ச் அப்செட்டை நோக்கி செல்லும் தோற்றம் உண்டானது.
ஆனால், அதுவரை கட்டுக்கோப்பாக செய்த அத்தனையையும் கடைசி 5 ஓவர்களில் அமெரிக்க அணி கோட்டைவிட்டது. நீண்ட நேரம் க்ரீஸில் இருந்தது சூர்யாவுக்கு தெம்பை கொடுத்திருந்தது. நிதானமாக பந்தை கடைசி வரை பார்த்து டைம் செய்தார். சிக்சர்கள் பறக்க தொடங்கின. நேத்ராவால்கரை குறிவைத்து அடித்தார். அவர் வீசிய 16 மற்றும் 20 வது ஓவர்களில் தலா 21 ரன்களை அடித்தார். சூர்யாவின் ருத்ரதாண்டவம் 140 யை கடக்கவே சிரமப்படும் என நினைத்த இந்திய அணியை 160+ க்கு எடுத்துச் சென்றது. சூர்யா 49 பந்துகளில் 84 ரன்களை எடுத்திருந்தார்.

India
அமெரிக்காவுக்கு 162 ரன்கள் டார்கெட். நிதானமாக ஆடினால் எட்டக்கூடிய டார்கெட்தான் என்பதால் இந்திய அணியின் மீதே பிரஷர் இருந்தது.
ஆனால், பவர்ப்ளேயிலேயே இந்திய அணி ஆட்டத்தை கட்டுக்குள் கொண்டு வந்தது. சிராஜூம் அர்ஷ்தீப் சிங்கும் டைட்டான லைன் & லெந்தில் வீசி முதல் மூன்று விக்கெட்டுகளையும் வீழ்த்தியிருந்தனர். கேப்டன் மோனாங் படேல், கோஸ், முக்காமலா என முக்கிய பேட்டர்கள் காலி. இதன்பிறகு கூட்டணி சேர்ந்த மிலிந்த் குமார், சஞ்சய் கிருஷ்ணமூர்த்தி இருவரும்தான் இந்திய அணிக்கு கொஞ்சம் அழுத்தம் கொடுத்தனர். பார்ட்னர்ஷிப்தான் முக்கியம் என்று முடிவு செய்து நின்று ஆடினர்.
வருண் சக்கரவர்த்தி மற்றும் அக்சர் படேல் விரித்த வலைகளில் சிக்காமல் திறம்பட ஸ்ட்ரைக்கை ரொட்டேட் செய்தனர். இருவரும் இணைந்து 58 ரன்களை சேர்த்தனர். இந்த கூட்டணி இன்னும் சில ஓவர்களுக்கு நின்றிருந்தால் போட்டி இன்னும் சுவாரஸ்யமாக போயிருக்கும். 12வது ஓவரில் வருணின் பந்தில் மிலிந்த் மிக அஜாக்கிரதையாக ஸ்டம்பிங் ஆனார். இந்த ஸ்டம்பிங் அமெரிக்க அணியின் அடுத்தடுத்த விக்கெட்டுகளுக்கு வித்திட்டது. அக்சர் படேலும் 16 வது ஓவரில் கிருஷ்ணமூர்த்தியையும் ஹர்மித்தையும் அடுத்தடுத்து வீழ்த்தினார். சுபம் என்கிற பேட்டர் மட்டும் கடைசி வரை நின்று சில சிக்சர்களை பறக்கவிட்டு தோல்வியின் தூரத்தை குறைத்துக் கொடுத்தார்.

Axar
இந்திய அணி 29 ரன்கள் வித்தியாசத்தில் வென்றிருக்கிறது. சூர்யா 'ஆட்டநாயகன்'. 'என்னோட சொந்த ஊரு சொந்த மைதானம். எப்படி ஆடணும்னு எனக்கு தெரியும்' என கெத்தாகவும் பேசியிருந்தார். அமெரிக்காவுக்கு எதிரான போட்டியை எந்த சிக்கலும் இல்லாமல் வெல்ல வேண்டும் என்பதே இந்தியாவின் திட்டமாக இருந்திருக்கும். இந்தியாவின் எண்ணத்திற்கு மாறாக செயல்பட்டு போட்டியில் சுவாரஸ்யத்தை கூட்டியிருக்கிறது அமெரிக்கா. இந்தத் தொடரில் எதிர்பாரா ட்விஸ்ட்டுகளை சிறிய அணிகள் கொடுத்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.
.png)






English (US) ·