சென்னை, மே 10 தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட 72 மணி நேரத்தில் தேர்தல் தொடர்பான புள்ளிவிவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி, தமிழ்நாட்டில் 86 சதவீத வாக்குகள் பதிவாகியிருப்பது தெரியவந்துள்ளது.
இதுதொடர்பாக இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு உள்ளிட்ட 5 மாநிலத் தேர்தல் தொடர்பான புள்ளிவிவரங்கள், தேர்தல் முடிவு வெளியிடப்பட்டுள்ளது.
தற்போது வெளியிடப்பட்ட புள்ளிவிவரத்தில் வேட்பாளர்கள், வாக்காளர்கள், பதிவான வாக்குகள், எண்ணப்பட்ட வாக்குகள், கட்சி வாரியாக மற்றும் வேட்பாளர் வாரியாக பதிவான வாக்குகள் என 14 வகையான தரவுகள் உள்ளன. இதை இசிஅய்நெட் செயலி மற்றும் இணையதளம் (https://www.eci.gov.in/statistical-reports) மூலம் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட 72 மணி நேரத் துக்குள் புள்ளிவிவர அறிக்கைகள் வெளியிடப்படுவது இதுவே முதல்முறை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தேர்தல் ஆணையம் வெளியிட்ட புள்ளி விவரங்களின்படி, தமிழ்நாட்டில் 5,74,11,793 வாக் காளர்கள் உள்ளனர். இதில் 4,93,89,958 பேர் வாக்களித்துள்ளனர். இதில், தபால் மூலம் மட்டும் 5,86,954 பேர் வாக்களித்த நிலையில், அவற்றில் 65,047 பேரின் தபால் வாக்குகள் நிராகரிக்கப்பட்டுள்ளன. சட்டப்பேரவைத் தேர்தலில் 4,023 வேட்பாளர்களில் 3,352 பேர் டெபாசிட் இழந்துள்ளனர். நோட்டாவுக்கு 1,99,805 பேர் வாக்களித்துள்ளனர். செல்லத்தக்கதாக 4.91 கோடி வாக்குகள் பதிவாகியுள்ளன. வெளிநாடுகளில் 2,730 வாக்காளர்கள் உள்ள நிலையில், 16 பேர் மட்டுமே வாக்களித்துள்ளனர். தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தம் பதிவான வாக்குகள் 86.03 சதவீதமாக உயர்ந்துள்ளது.
இந்தியாவின் முப்படைத் தலைவராக தமிழ் நாட்டைச் சேர்ந்தவர் நியமனம்
புதுடில்லி, மே 10 தற்போதைய தலைமை தளபதி அனில் சவுகானின் பதவிக்காலம் விரைவில் முடிவடைய உள்ளதால் ராஜா சுப்ரமணி நியமிக்கப்பட் டுள்ளார்.
இந்தியாவின் முப்படை தளபதியாக தமிழர் ஒருவர் நியமிக்கப்பட்டிருக்கிறார். நாட்டின் முப்படைகளின் புதிய தலைமை தளபதியாக தமிழ்நாட்டைச் சேர்ந்த லெப்டினன்ட் ஜெனரல் என்.எஸ். ராஜா சுப்ரமணியை நியமித்து ஒன்றிய அரசு அறிவித்திருக்கிறது.
தற்போதைய தலைமை தளபதி அனில் சவுகானின் பதவிக்காலம் விரைவில் முடிவடைய உள்ளதால் ராஜா சுப்ரமணி நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவர் முப்படை தலைமை தளபதியாக நியமிக்கப்படுவது இதுவே முதல்முறையாகும்.
யார் இவர்?
லெப்டினன்ட் ஜெனரல் ராஜா சுப்ரமணி இந்திய ராணுவத்தில் 37 ஆண்டுகளுக்கும் மேலாக மிகச்சிறந்த சேவையாற்றியவர். தேசிய பாதுகாப்பு கல்விக்கழகம் (என்டிஏ) மற்றும் இந்திய ராணுவ கல்விக்கழகத்தில் (அய்எம்ஏ) இளநிலைப் பட்டம் பெற்ற இவர், 1985 டிசம்பரில் கார்வால் ரைபிள்ஸ் படைப்பிரிவில் அதிகாரியாகத் தனது ராணுவப் பயணத்தைத் தொடங்கி இருக்கிறார். கல்வியில் சிறந்து விளங்கிய இவர், சென்னைப் பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பு ஆய்வில் எம்.பில் பட்டம் பெற்றதோடு, டில்லி மற்றும் லண்டனிலும் உயர்கல்வி பயின்றிருக்கிறார்.
மேலும், டில்லி தேசிய பாதுகாப்புக் கல்லூரியின் (என்டிசி) முன்னாள் மாணவரான இவர், ராணுவத்தில் பல்வேறு முக்கியப் பொறுப்புகளைத் திறம்பட வகித்திருக்கிறார். மத்திய கட்டளைப் பிரிவின் தலைமைத் தளபதியாகவும், ராணுவத் தலைமைத் துணைத் தளபதியாகவும் பணியாற்றியிருக்கிறார். தற்போது, தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலகத்தில் ராணுவ ஆலோசகராகத் தனது பங்களிப்பை வழங்கி வருகிறார். தனது பணிக்காக பல்வேறு விருதுகளையும் அவர் பெற்றிருக்கிறார்.
.png)
59 minutes ago
15






English (US) ·