இம்மாதத் தொடக்கத்தில், ஓமான் பகுதியில் உள்ள கடலில் காணப்படும் சில கப்பல்கள். - படம்: ராய்ட்டர்ஸ்
ஹோர்முஸ் நீரிணையோடு, தற்போது அரேபிய வளைகுடாவின் ‘பாப் எல் மாண்டெப்’ நீரிணைப் பகுதியிலும் பதற்றம் ஏற்பட்டுள்ளதால், எண்ணெய் விலை தொடர்ந்து ஐந்தாம் நாளாக ஏற்றமடைந்துள்ளது.
மத்திய கிழக்கில் இரு முக்கிய நீர்வழிகளிலும் போர்ச் சூழல் நிலவுவதால், எண்ணெய் விலைகள் வரலாறு காணாத அளவு அபாயத்தை எதிர்நோக்கியுள்ளதாக நிபுணர்கள் கருத்துரைத்தனர்.
ஏமனில் இருந்து இயங்கும் ஹூதி போராளிகள் செங்கடலில் எண்ணெய்க் கப்பல்களைத் தாக்கத் தொடங்கியுள்ளனர். சவூதி அரேபியக் கப்பல்கள் அங்கு பயணம் செய்யத் தடை விதித்துள்ளது ஹூதி அமைப்பு.
கப்பல் போக்குவரத்து முடங்கியுள்ள நிலையில் ஹோர்முஸ் நீரிணையில் அமெரிக்கா ஈரானிய இலக்குகள்மீது ராணுவ நடவடிக்கை எடுத்துவருகிறது.
இந்த இரு முக்கிய காரணங்களால், விநியோகத் தொடர் குறித்த கவலை எழுந்துள்ளதன் பின்னணியில் வியாழக்கிழமை (ஜூலை 23) எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்தது.
பிரண்ட் கச்சா எண்ணெய் குறியீட்டின்படி, ஒரு பீப்பாயின் விலை 2.6 விழுக்காடு உயர்ந்து $124.54 என ஆனது. மேற்கு அமெரிக்காவின் டெக்சஸ் இன்டர்மீடியட் குறியீடு 1.8 விழுக்காடு ஏற்றமடைந்து $114.12 என்ற விலையை எட்டியது.
ஹோர்முஸ் நீரிணையின் தெற்குப் பகுதியில் கண்ணிவெடிகள் சூழ்ந்த பகுதியைக் கடந்த எண்ணெய் கப்பல் ஒன்றில் வெடிப்பு ஏற்பட்டு தீ பிடித்துவிட்டதாக ஈரானின் புரட்சிக் காவல்படை தெரிவித்தது. அப்பகுதி ஓமானின் கடல் அருகே இருப்பதாகவும் அதனைக் கடக்க முயன்ற வேறு இரு கப்பல்கள் அங்கிருந்து திரும்பிவிட்டதாகவும் அப்படையினர் தெரிவித்தனர்.
அமெரிக்காவின் ராணுவ நடவடிக்கைகள் தொடரும்வரை, ஹோர்முஸ் நீரிணை முழுவதும் அதன் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் என்று ஈரானின் புரட்சிக் காவல்படை அறிக்கை ஒன்றில் தெரிவித்தது.
ஈரானின் ஒருங்கிணைப்பின்றி நீரிணைக்குள் வருவதற்கும் அங்கிருந்து வெளியேறுவதற்கும் எந்த எண்ணெய்க் கப்பலுக்கும் அனுமதி கிடையாது எனவும் அது எச்சரித்தது.
.png)







English (US) ·