வாடகைக்கு பதிலாக மனைவி, 13 வயது மகளைப் பாலியல் வன்கொடுமைக்கு அனுமதித்த தந்தை; குஜராத்தில் அதிர்ச்சி

53 minutes ago 8

குஜராத் மாநிலம் மொர்பி என்ற இடத்தில் வசித்து வந்தவர் நரேந்திரா(பெயர் மாற்றப்பட்டுள்ளது). 45 வயதாகும் நரேந்திரா தனது மனைவி, மகளுடன் வாடகை வீடு ஒன்றில் வசித்து வந்தார்.

வீட்டிற்கு மாதம் ரூ.2 ஆயிரம் கொடுக்க வேண்டியிருந்தது. ஆனால் நரேந்திராவின் தொழில் சரியாக அமையவில்லை. இதனால் அவரால் சரியாக வாடகை கொடுக்க முடியவில்லை.

ஒவ்வொரு மாதமும் வாடகை அதிகரித்துக்கொண்டே சென்றது. இதனால் வீட்டின் உரிமையாளர் தொடர்ந்து வாடகையைக் கொடுக்கும்படி நிர்ப்பந்தம் செய்து வந்தார்.

ஒரு கட்டத்தில் வாடகைக்குப் பதில் தனது மனைவியைப் பாலியல் வன்கொடுமை செய்ய வீட்டு உரிமையாளரை நரேந்திரா அனுமதித்தார். வீட்டு உரிமையாளர் நரேந்திராவின் மனைவியைப் பாலியல் வன்கொடுமை செய்ததோடு, அவரின் 13 வயது மகளையும் பாலியல் வன்கொடுமை செய்தார்.

வீட்டு உரிமையாளர் மட்டுமல்லாமல் அவர் தனது உறவினர் ஒருவரையும் தன்னுடன் நரேந்திராவின் வீட்டிற்கு அழைத்து வந்தார். ஒரே நேரத்தில் நரேந்திராவின் மகளை வீட்டு உரிமையாளரும், நரேந்திராவின் மனைவியை வீட்டு உரிமையாளரின் உறவினரும் பாலியல் வன்கொடுமை செய்தனர்.

இது குறித்து நரேந்திராவின் மனைவி தனது தாயாரிடம் புகார் செய்தார். அதன் அடிப்படையில் நரேந்திராவின் மாமியார் இது குறித்து போலீஸில் புகார் செய்தார். போலீஸார் நரேந்திராவையும், வீட்டு உரிமையாளரையும் கைது செய்துள்ளனர்.

வீட்டு உரிமையாளரின் உறவினர் தலைமறைவாகிவிட்டார். அவரை போலீஸார் தேடி வருகின்றனர். கணவனே தனது மனைவி மற்றும் 13 வயதேயான மகளைப் பாலியல் வன்கொடுமை செய்ய அனுமதித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

Read Entire Article