தேனி அருகே காணாமல் போன நவீன் குமார் என்ற இளைஞர், நண்பருடன் ஏற்பட்ட தகராறில் கொலை செய்யப்பட்டு ஆற்றில் வீசப்பட்டது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. பல மணி நேர தேடுதலுக்குப் பிறகு, தீயணைப்புத் துறையினர் அவரது உடலை ஆற்றில் இருந்து மீட்டனர்.
தேனி அருகே உப்புகோட்டை பகுதியைச் சேர்ந்த அழகர்சாமி - ஜெயலட்சுமி தம்பதியினரின் மகன் நவீன் குமார் (25) செல்போன் கடையில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் கடந்த 6ம் தேதி நண்பருடன் வெளியே சென்ற நவீன் குமார் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் பல்வேறு இடங்களிலும் தேடிப் பார்த்துள்ளனர். இதனையடுத்து வீரபாண்டி காவல் நிலையத்தில் நவீன் குமாரின் தாயார் கடந்த 8ம் தேதி தனது மகன் காணவில்லை என புகார் அளித்துள்ளார்
புகார் அளித்து ஐந்து நாட்கள் கடந்த நிலையிலும் தனது மகனை கண்டுபிடிக்க போலீசார் உரிய நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் காட்டியதாகவும் குடும்பத்தினர் வேதனை தெரிவித்தனர். இந்நிலையில் நவீன் குமாரை அழைத்துச் சென்ற நபரை விசாரித்த போலீசார் மது போதையில் தகராறு ஏற்பட்டு நவீன் குமாரை கொலை செய்து ஆற்றில் வீசியது போலீஸ் விசாரணையில் அதிர்ச்சி தகவல் தெரியவந்தது. இதன் அடிப்படையில் நவீன் குமாரின் உடலை கண்டுபிடிப்பதற்காக தீயணைப்புத் துறையினரின் உதவியுடன் போலீசார் ஆற்றில் தேடத் தொடங்கினர்
இந்த தகவல் நவீன் குமாரின் பெற்றோர் மற்றும் உறவினர்களுக்கு தெரிந்ததும் ஆத்திரமடைந்த பொதுமக்கள் போலீசார் உடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் நவீன் குமார் உடலை கண்டுபிடித்து அவரை கொலை செய்த நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டு வந்தனர். இதனையடுத்து தேனி டிஎஸ்பி முத்துக்குமார் போராட்டத்தில் ஈடுபட்ட உறவினர்களுடன் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி உடலை கண்டுபிடித்து கொலை செய்த நபர் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தது எடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். பின்னர் ஆற்றில் கொலை செய்யப்பட்டு வீசப்பட்ட நவீன் குமாரின் உடலை தேடும் பணியில் தீயணைப்புத் துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர்
சுமார் 4 மணி நேர தேடுதலுக்கு பின் உப்புக்கோட்டை கருப்புசாமி கோயில் அருகே உள்ள ஆற்றின் ஓரத்தில் உடலை போலீசார் கண்டுபிடித்தனர். இதனையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக உடல் தேனி அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டது. உடலைக் கண்ட பொதுமக்கள் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். இதனால் உப்புக்கோட்டை கிராமத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.