CJP: `யார் அனுப்புறாங்கனு தெரியல; ஆனா குவியுது' - ஆன்லைன் ஆர்டர் மூலம் போராட்டகளத்தில் குவியும் உணவு

44 minutes ago 6

டெல்லியில் நடந்து வரும் மாணவர் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளவர்களுக்கு ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்யப்பட்ட உணவு வந்து குவிந்த வண்ணம் இருக்கிறது.

Published:Just NowUpdated:Just Now

ஆன்லைனில் வந்து குவிந்த உணவு

ஆன்லைனில் வந்து குவிந்த உணவு

டெல்லியில் நீட் தேர்வு மோசடி, கல்வி சீர்திருத்தம் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாணவர்கள் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி சார்பாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இப்போராட்டம் அதிக அளவில் மாணவர்கள் மத்தியில் அதிக அளவில் வரவேற்பை பெற்றுள்ளது. மாணவர்கள் நாடு முழுவதும் இருந்து டெல்லிக்கு வந்தவண்ணம் இருக்கின்றனர். நீட் தேர்வு மோசடிக்கு காரணமான மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வேண்டும் என்பது மாணவர்களின் பிரதான கோரிக்கையாகும்.

டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் பல ஆயிரம் மாணவர்கள் குவிந்துள்ளனர். இவர்கள் அனைவருக்கும் தேவையான சாப்பாடும், தண்ணீரும் வாகனங்களில் வந்து குவிந்து கொண்டிருக்கிறது. ஆனால் அதனை யார் அனுப்புகிறார்கள் என்ற மர்மம் நீடிக்கிறது.

 `யார் அனுப்புறாங்கனு தெரியல; ஆனா குவியுது' - ஆன்லைன் ஆர்டர் மூலம் போராட்டகளத்தில் குவியும் உணவு

வாகனங்களில் வந்து குவியும் சாப்பாட்டை இறக்கிக்கொண்டிருக்கும்போதே அடுத்த வாகனத்தில் சாப்பாடு அல்லது தண்ணீர் வந்து இறக்குவதற்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதேசமயம் போராட்டம் நடைபெறும் இடத்தின் ஒரு முனையில், தன்னார்வலர்கள் பருப்பு-சாதம் (தால்-சாவல்) பரிமாறிக் கொண்டிருந்தனர். சில மீட்டர் தொலைவில், மற்றொரு குழுவினர் ராஜ்மா-சாதம் வழங்கிக் கொண்டிருந்தனர்.

காலையிலேயே தேநீரும் சாண்ட்விச்சுகளும் வாகனங்களில் வந்து குவிகிறது. மாலை வேளையில் பர்கர்களும் வருகிறது. வாகனங்களில் வந்த குடிநீர் பாட்டில்கள் அடங்கிய பெட்டிகள் நடைபாதைகளில் வரிசையாக வைக்கப்பட்டிருந்தன. அடுத்த வேளை உணவைப் பற்றி யாருக்கும் எந்தக் கவலையும் இருப்பதாகத் தெரியவில்லை. ஆனால் அங்கு வந்து குவியும் உணவுகளுக்கு யார் பணம் கொடுக்கிறார்கள் என்ற மர்மம் மட்டும் விலகாமல் இருக்கிறது. போராட்ட களத்தில் இருக்கும் ஒவ்வொரு தன்னார்வலரும் அதையே சொல்கிறார்கள். அதாவது டெலிவரிகளுக்கு யார் பணம் கொடுத்தார்கள் என்பது குறித்தோ அல்லது எங்கிருந்து ஆர்டர் செய்யப்பட்டது என்பது குறித்தோ போராட்டக்காரர்கள் யாருக்கும் தெரிந்திருக்கவில்லை.

சண்டிகரைச் சேர்ந்த ரோஹித், கடந்த ஒரு வாரமாகத் தினமும் இந்தப் போராட்ட இடத்திற்கு வந்து உணவு டெலிவரி செய்ய வந்து கொண்டிருக்கிறார். அவர் இது குறித்து கூறுகையில்,'' 20-ஆம் தேதி நடந்த போராட்டத்திற்குப் பிறகு, மக்கள் பெருமளவில் உணவுப் பொருட்களை அனுப்பத் தொடங்கினர். உணவை அனுப்புபவர்கள் யாரும் தங்கள் பெயரை எங்களிடம் சொல்வதில்லை. உணவு எங்கிருந்து வருகிறது என்பது மட்டுமே எங்களுக்குத் தெரியும்.

நாக்பூர் மற்றும் மகாராஷ்டிராவிலிருந்து கூட மக்கள் உணவை அனுப்பி வருகின்றனர், குடிநீரும் விநியோகிக்கப்படுகிறது. போராட்டக்காரர்களோ அல்லது தன்னார்வலர்களோ எதையும் தாங்களாகவே ஆர்டர் செய்ய வேண்டிய நிலை ஏற்படவில்லை. அனைத்தும் பெருமளவில் வந்து கொண்டிருக்கின்றன, எதற்கும் பற்றாக்குறை இல்லை," என்று அவர் மேலும் கூறுகிறார். போராட்ட களத்தில் இருக்கும் தன்னார்வலர் ஒருவர் இது குறித்து கூறுகையில்,''எங்களிடம் போதுமான குடிநீர் உள்ளது. காலை முதல் இரவு வரை உணவுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

கடந்த மூன்று நாட்களாகத் தொடர்ந்து உணவுப் பொருட்கள் வந்து குவிந்து கொண்டிருக்கின்றன. போராட்டக் களம் முழுவதும் குறைந்தது 10 முதல் 12 உணவு விநியோக மையங்கள் உள்ளன. இந்தப் போராட்டம் குறித்து அதிகமானோர் அறிந்துகொள்ளத் தொடங்கியுள்ள நிலையில், நாடு முழுவதிலுமிருந்து ஆர்டர்கள் வருகின்றன.

 `யார் அனுப்புறாங்கனு தெரியல; ஆனா குவியுது' - ஆன்லைன் ஆர்டர் மூலம் போராட்டகளத்தில் குவியும் உணவு

சில சமயங்களில் மத்தியப் பிரதேசம், போபால், மகாராஷ்டிரா அல்லது சத்தீஸ்கர் போன்ற இடங்களிலிருந்து ஆர்டர்கள் வருகின்றன. ஆர்டர் செய்தவர் யார் என்பது எங்களுக்குத் தெரிவதில்லை.

டெலிவரி செய்பவருக்கோ அல்லது உணவக உரிமையாளருக்கோ மட்டுமே அது தெரியும். எங்களிடம் தேவையைவிட அதிக அளவில் உணவு இருக்கிறது'' என்றார். காக்ரோச் ஜனதா கட்சியின் போராட்டம் இரண்டாவது வாரத்தில் அடியெடுத்து வைத்துள்ள நிலையில், அதற்கான மிக வலுவான ஆதரவு நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் தொலைவில் உள்ள நகரங்களிலிருந்து வந்து கொண்டிருக்கிறது. போராட்டத்தில் கலந்து கொள்ள முடியாதவர்கள் இது போன்று உணவை ஆன்லைனில் ஆர்டர் செய்து போராட்டம் நடைபெறும் இடத்திற்கு அனுப்பி வைக்கின்றனர்.

கடந்த 20ம் தேதி அன்று நடத்தப்பட்ட ஒடுக்குமுறை நடவடிக்கைக்குப் பிறகுதான் இந்த ஆதரவு அலை வேகம் பிடித்ததாகப் பல போராட்டக்காரர்கள் கூறுகின்றனர். ஏனெனில், அப்போது நேரில் போராட்டத்தில் கலந்துகொள்ள முடியாதவர்கள், அதில் பங்கேற்பதற்கான மாற்று வழியைக் கண்டறிந்தனர்.

போராட்டத்தில் கலந்து கொண்டுள்ள மொகமத் பைசான் இது குறித்து கூறுகையில்,''இது போன்ற ஒரு மக்கள் ஆதரவை நான் இதற்கு முன்பு பார்த்ததில்லை. தொலைதூரப் பகுதிகளிலிருந்தும் மக்கள் தங்களால் இயன்ற வழிகளில் உதவிகளைச் செய்து வருகின்றனர். இது மிகுந்த மனநிறைவைத் தருகிறது. இன்று ஒட்டுமொத்த நாடே ஒன்றிணைந்து நிற்பது போன்ற உணர்வு ஏற்படுகிறது. இவ்வளவு பெரிய ஆதரவு கிடைக்கும் என்று நாங்கள் ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை," என்று அவர் கூறுகிறார்.

Read Entire Article