NEET : 30 நிமிடத்தில் கைமாறிய வினாத்தாள்:ரூ.10 லட்சத்துக்கு வாங்கி ரூ.15 லட்சத்தில் விற்ற மாணவர்

1 hour ago 15

நாடு முழுவதும் மருத்துவ படிப்புக்காக நடத்தப்பட்ட நீட் நுழைவுத்தேர்வுக்கான வினாத்தாள் தேர்வுக்கு முன்பே கசிந்ததை தொடர்ந்து ஒட்டுமொத்த தேர்வும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் ஆண்டு முழுவதும் படித்த மாணவர்கள் மன அழுத்தத்திற்கு ஆளாகி இருக்கின்றனர். மற்றொருபுறம் மோசடி பேர்வழிகளிடம் பணம் கொடுத்து நீட் வினாத்தாள்களை வாங்கியவர்களும் அதிர்ச்சிக்குள்ளாகி இருக்கின்றனர். போலீஸார் மற்றும் சி.பி.ஐ அதிகாரிகளின் விசாரணையில் வினாத்தாளை கசியவிட்டது நாசிக்கை சேர்ந்த சுபம் கெய்ர்னார் என்ற மாணவர்தான் என்று தெரிய வந்துள்ளது. அவரை மகாராஷ்டிரா குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்து சி.பி.ஐ வசம் ஒப்படைத்து இருக்கின்றனர்.

சுபம் பி.ஏ.எம்.எஸ் எனப்படும் ஆயுர்வேத மருத்துவம் படித்து வருகிறார். சுபம் அந்த வினாத்தாளை புனேயை சேர்ந்த ஒருவரிடம் ரூ.10 லட்சத்திற்கு வாங்கி ஹரியானாவை சேர்ந்த ஒருவரிடம் ரூ.15 லட்சத்திற்கு விற்பனை செய்ததாக தெரிய வந்துள்ளது.

அதோடு ஆரம்பத்தில் நாசிக் அச்சகத்தில் இருந்து வினாத்தாள் கசிந்ததாக செய்தி வெளியானது. ஆனால் விசாரணையில் நாசிக்கில் அச்சிடப்படவில்லை என்றும், நாசிக்கில் இருந்து கூரியர் மூலம் நீட் வினாத்தாள் அனுப்பப்பட்டபோது வினாத்தாள் கசிந்ததாக தெரிய வந்துள்ளது. வினாத்தாள் கூரியருக்கு அனுப்பியபோது அது இருந்த பெட்டி 30 நிமிடத்திற்கு திறக்கப்பட்டு உள்ளே இருந்த வினாத்தாளை எடுத்து ஸ்கேனர் மூலம் ஸ்கேன் செய்து எடுத்துள்ளனர். மொபைல் மூலம் எடுத்தால் சரியாக தெரியாது என்பதால் ஸ்கேனர் மூலம் ஸ்கேன் செய்ததாக தெரிய வந்துள்ளது.

ஸ்கேன் செய்யப்பட்ட நகல் சுபமிற்கு டெலகிராம் மூலம் கிடைத்துள்ளது. அதனை சுபம் ஹரியானா பிரமுகருக்கு விற்பனை செய்துள்ளார். மோசடி வெளியானதும் சுபம் தனது அடையாளத்தை மறைப்பதற்காக மொட்டைபோட்டுக்கொண்டு திரிந்தார். அவர் கோயிலுக்கு சென்று கொண்டிருந்தபோது அவரை குற்றப்பிரிவு போலீஸார் மடக்கி பிடித்து கைது செய்தனர். நீட் வினாத்தாள் மோசடி தொடர்பாக இதுவரை 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் இந்த விவகாரத்தில் வெளியாகி வருகிறது.

Read Entire Article