NEET: "முதல்வர் திரைப்படங்களில் மட்டுமே ஜனநாயகவாதியா?" - தமிழக மாணவர்கள் கைதுக்கு சீமான் கண்டனம்

4 hours ago 3

"வடமாநில இளைஞர்கள் தங்களது கல்வி உரிமைக்காக டெல்லி வீதிகளில் நின்று போராடும் வேளையில், தமிழக இளைஞர்களை சினிமா திரையரங்குகளின் முன் வரிசையில் நிறுத்தி வைப்பது ஏற்றுக்கொள்ள முடியாத கொடுமையாகும்"- சீமான்

Published:45 mins agoUpdated:45 mins ago

நாதக தலைவர் சீமான்

நாதக தலைவர் சீமான்

தமிழகத்தில் வீதிக்கு இறங்கிப் போராட முயலும் மாணவர்கள் மற்றும் இளைஞர்களை காவல் துறையைக் கொண்டு தவெக அரசு ஒடுக்குவது கடுமையாகக் கண்டிக்கத்தக்கது என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

ஜனநாயகத்திற்குச் செய்யும் துரோகம்

இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், " நீட் தேர்வில் நடந்த முறைகேடுகள் மற்றும் குளறுபடிகளுக்கு எதிராக டெல்லியில் நடைபெற்ற பிரம்மாண்ட இளைஞர் போராட்டத்தின் தொடர்ச்சியாக, வடமாநிலங்களில் போராட்டங்கள் பரவி வரும் நிலையில், தமிழகத்தில் வீதிக்கு இறங்கிப் போராட முயலும் மாணவர்கள் மற்றும் இளைஞர்களை காவல் துறையைக் கொண்டு தவெக அரசு ஒடுக்குவது கடுமையாகக் கண்டிக்கத்தக்கது. நீட் தேர்வை எதிர்ப்பதாகக் கூறிக்கொண்டே, அதற்கு எதிராகத் தன்னிச்சையாகப் போராடும் இளைய தலைமுறையின் போராட்டத்தை ஒடுக்கும் மாநில அரசின் போக்கு, ஜனநாயகத்திற்குச் செய்யும் துரோகமாகும்.

சென்னையில் மாணவர்கள் போராட்டம்

சென்னையில் மாணவர்கள் போராட்டம்

திரைப்படங்களில் மட்டுமே ஜனநாயகவாதியா?

திரையில் தன்னை ஒரு 'ஜனநாயகன்' என்று காட்டிக்கொள்ளும் முதலமைச்சர் விஜய், களத்தில் காவல் துறை மூலம் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மீது அரசு வன்முறையை ஏவிவிட்டு, ஜனநாயகத்தைப் படுகொலை செய்வது நியாயமா? அவர் திரைப்படங்களில் மட்டுமே ஜனநாயகவாதியா?

வடமாநில இளைஞர்கள் தங்களது கல்வி உரிமைக்காக டெல்லி வீதிகளில் நின்று போராடும் வேளையில், தமிழக இளைஞர்களை சினிமா திரையரங்குகளின் முன் வரிசையில் நிறுத்தி வைப்பது ஏற்றுக்கொள்ள முடியாத கொடுமையாகும். ஒருபுறம், டெல்லியில் இளைஞர் போராட்டத்தை பாஜக அரசு ஒடுக்குவதைக் கண்டிப்பதாகக் கூறிக்கொண்டு, மறுபுறம் தமிழகத்தில் நீட் தேர்வுக்கு எதிரான இளைஞர் போராட்டங்களை நசுக்க முயல்வது தவெக அரசின் இரட்டை வேடம் அல்லவா?

என்னவொரு கூத்து!

பாஜகவை சித்தாந்த எதிரி என்று கூறிக்கொண்டே, ரகசியமாக அவர்களின் நலன்களுக்குச் சேவை செய்வது தவெக அரசின் மறைமுகச் சேவை அல்லவா? என்னவொரு கூத்து!

வடமாநிலங்களில் நடக்கும் போராட்டங்கள் நீட் தேர்வில் உள்ள முறைகேடுகளைக் கண்டிக்கும் அதே வேளையில், தமிழகத்தில் மட்டுமே நீட் அமைப்பே ஒரு மோசடி என்பதை வலியுறுத்திப் போராட்டங்கள் நடைபெறுகின்றன.

முந்தைய முறையை விடச் சிறந்தது என்று கூறி, தரமான மருத்துவர்களை உருவாக்குவது என்ற போர்வையில் கொண்டு வரப்பட்ட ஒரு அமைப்பில் இத்தனை முறைகேடுகளும், குழப்பங்களும், குளறுபடிகளும் நடக்கும்போது, இந்தத் தேர்வு முறையின் நோக்கம் தான் என்ன? கடந்த காலத்தில் இதே நீட் அமைப்பில் முறைகேடுகள் நடக்கவில்லை என்பதற்கு என்ன உத்தரவாதம் உள்ளது?

முதல்வர் விஜய் - பிரதமர் மோடி

முதல்வர் விஜய் - பிரதமர் மோடி

சமத்துவமற்றது...

எனவே, நீட் தேர்வில் நடந்த முறைகேடுகளை விசாரிப்பது மட்டுமின்றி, இந்த மோசடியான நீட் தேர்வு முறையை முழுமையாக ரத்து செய்வதே நாட்டின் சுகாதாரக் கட்டமைப்பைப் பாதுகாப்பதற்கான சிறந்த வாய்ப்பாகும். சீரான கற்றல் வாய்ப்புகளும் வசதிகளும் இல்லாத ஒரு நாட்டில், ஒரே மாதிரியான நுழைவுத் தேர்வை நடத்துவது இயல்பாகவே சமத்துவமற்றது. எனவே, சமத்துவத்திற்கு எதிரான நீட் தேர்வை நாம் தமிழர் கட்சி கடுமையாக எதிர்க்கிறது.

நீட் தேர்வு முற்றிலும் ஒழிக்கப்படட்டும்!

அரசியல் கட்சிகளும் இயக்கங்களும் நீட் தேர்வுக்கு எதிராகப் போராட்டங்களை முன்னெடுக்கும்போது, அவை பெரும்பாலும் அடையாள ஆர்ப்பாட்டங்களாகவே பார்க்கப்படுகின்றன. இருப்பினும், மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் வீதிக்கு இறங்கிப் போராடும்போது, அது ஒரு ஜனநாயகப் புரட்சியாக வெடித்து, ஆளும் வர்க்கத்தைப் பணிய வைத்து அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றச் செய்கிறது. இலக்கை நோக்கி உழைக்கும் இளைஞர் திரளின் அமைதியான போராட்டத்தை நான் முழுமையாக ஆதரிக்கிறேன், வரவேற்கிறேன். தமிழக இளைஞர்களின் அமைதியான போராட்டம் வெற்றி பெறட்டும்!

நீட் தேர்வு முற்றிலும் ஒழிக்கப்படட்டும்! அநீதிக்கு எதிராகப் போராட்ட குணத்துடன் போராடும் எனது சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் எனது வாழ்த்துகளும் அன்பும்!" என்று பதிவிட்டிருக்கிறார்.

Read Entire Article