“அரசையோ, அமைச்சர்களையோ விமர்சிப்பது பொது அமைதிக்கு எதிரான குற்றமாகாது..” சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம்

55 minutes ago 6

Last Updated:Jul 23, 2026 9:25 PM IST

பழனி கோயில் நில விவகாரத்தில் அமைச்சர் ரமேஷ் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பிய குற்றச்சாட்டில் வினோத் சூர்யகுமார் என்பவர் கைது செய்யப்பட்டார்.

கோப்பு படம்
கோப்பு படம்

அரசையோ, அமைச்சர்களையோ விமர்சிப்பது பொது அமைதிக்கு எதிரான குற்றமாகாது என சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

பழனி கோயில் நில விவகாரத்தில் அமைச்சர் ரமேஷ் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பிய குற்றச்சாட்டில் வினோத் சூர்யகுமார் என்பவர் கைது செய்யப்பட்டார். இவரது ஜாமின் மனு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.கார்த்திகேயன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, நிர்வாக முறைகேடுகளை வெளிச்சம் போட்டுக் காட்டுவதன் மூலம் பொது நலனுக்குப் பயன்படும் என்ற அடிப்படையிலேயே பதிவுகளை வெளியிட்டதாகவும், அமைச்சர் மீது தனிப்பட்ட விரோதமோ அல்லது பழிவாங்கும் உணர்வோ இல்லை எனவும் மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.  அதேசமயம், வினோத் சூர்யகுமாரை காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும் என்பதால் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என காவல் துறை தரப்பில் கோரப்பட்டது.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, ஜனநாயகத்தில் மாறுபட்ட கருத்துகளின் குரல்களும் மதிக்கப்பட வேண்டும் என அறிவுறுத்தினார். அரசையோ அல்லது அமைச்சர்களையோ வெறுமனே விமர்சிப்பது, பொது அமைதிக்கு எதிரான குற்றமாகாது எனக் கருத்து தெரிவித்த நீதிபதி, கோயில் நிலம் அமைச்சரின் உறவினருக்கு விற்கப்பட்டதாகக் குற்றம்சாட்டுவது சாதி, மத வெறுப்பை ஊக்குவிப்பதாகக் கூறமுடியாது என்றார்.

இதையடுத்து, வினோத் சூர்யகுமாரை நிபந்தனை ஜாமினில் விடுவிக்க உத்தரவிட்டார். இதனிடையே, முதலமைச்சர் விஜய்க்கு மிரட்டல் விடுக்கும் வகையில் பேசியதாகக் கைது செய்யப்பட்ட திமுக எம்.எல்.ஏ., மார்க்கண்டேயனின் ஜாமின் மனு குறித்து பதிலளிக்க காவல் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் வழக்கு விசாரணை 27ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

தமிழ் செய்திகள்/தமிழ்நாடு/

“அரசையோ, அமைச்சர்களையோ விமர்சிப்பது பொது அமைதிக்கு எதிரான குற்றமாகாது..” சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம்

Read Entire Article