
சென்னை: மே 12 –
சட்டப்பேரவை அதிமுக குழுத் தலைவர் யார் என்பதில் பொதுச் செயலாளர் பழனிசாமி – முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இடையே கடும் போட்டி நிலவுவதால் இரு அணிகளாக அதிமுக பிரிந்துள்ளது. குழுத் தலைவர் பதவி கோரி இரு தரப்பினரும் தற்காலிக சட்டப்பேரவைத் தலைவரை தனித்தனியே சந்தித்து கடிதம் கொடுத்துள்ளனர்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக 108 இடங்களில் வெற்றி பெற்றது. ஆட்சி அமைக்க மேலும் 11 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவைப்பட்ட நிலையில், காங்கிரஸின் 5 எம்எல்ஏக்கள், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், ஐயூஎம்எல், விசிகவின் தலா 2 எம்எல்ஏக்கள் ஆதரவு அளித்தனர். இதைத் தொடர்ந்து, சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் 10-ம் தேதி நடைபெற்ற விழாவில் முதல்வராக தவெக தலைவர் விஜய் பொறுப்பேற்றார். சட்டப்பேரவையில் 13-ம் தேதிக்குள் பெரும்பான்மையை நிரூபிக்குமாறு ஆளுநர் அர்லேகர் உத்தரவிட்டுள்ளார்.
காங்கிரஸ் தவிர்த்து, தவெகவுக்கு ஆதரவு அளித்துள்ள மற்ற அனைத்து கட்சிகளும் திமுக கூட்டணியில் தொடர்வதாகவே அறிவித்துள்ளனர். இந்த சூழலில், அவர்களது ஆதரவுடன் ஆட்சியை தொடர்வது சிக்கலை ஏற்படுத்தக்கூடும் என்று முதல்வர் விஜய் கருதுவதாகவும், அதனால், அதிமுகவின் ஆதரவைப் பெற விரும்புவதாகவும் கூறப்படுகிறது. அதற்காக, அதிமுகவுக்கு 6 அமைச்சர் பதவி தர திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியானது.
இந்த வாய்ப்பை பெற அதிமுக எம்எல்ஏக்கள் சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி, சி.விஜயபாஸ்கர் உள்ளிட்ட முன்னாள் அமைச்சர்கள் ஆர்வமாக உள்ளனர். ஆனால், தவெகவுக்கு ஆதரவு அளிக்க பொதுச் செயலாளர் பழனிசாமி விரும்பவில்லை. அது கட்சி வளர்ச்சியை பாதிக்கும் என்று அவர் கருதுகிறார். இதனால், பழனிசாமி தலைமையிலும், சி.வி.சண்முகம் தலைமையிலும் அதிமுக எம்எல்ஏக்கள் இரு அணிகளாக பிரிந்துள்ளனர்.
இதற்கிடையே, பழனிசாமி சரியான கூட்டணியை அமைக்காததுதான் தேர்தல் தோல்விக்கு காரணம் என்பதால், பொதுச் செயலாளர் பதவியில் இருந்து அவர் விலக வேண்டும் என்றும் சி.வி.சண்முகம் தரப்பினர் வலியுறுத்தி வந்தனர். அதைத் தொடர்ந்து, சட்டப்பேரவை அதிமுக குழுத் தலைவர், துணைத் தலைவர், கொறடா பதவிகளையும் தங்கள் தரப்புக்கே தரவேண்டும் என்றும் வலியுறுத்தினர். இதை ஏற்க மறுத்த பழனிசாமி, தொண்டர்களின் ஆதரவு தனக்கு இருப்பதாக கூறி வருகிறார்.
.png)
17 hours ago
14






English (US) ·