'நான் முடித்து வைத்த 8-வது போராக இஸ்ரேல் - காசா போர் இருக்கும்' - இன்று காலை (இந்திய நேரப்படி), அமெரிக்காவில் இருந்து இஸ்ரேலுக்கு சென்றுகொண்டிருந்தபோது, விமானத்தில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் சொன்ன வார்த்தைகள் இவை.
2023-ம் ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி தொடங்கிய இஸ்ரேல் - காசா போர் கடந்த 7-ம் தேதியோடு இரண்டு ஆண்டுகளை நிறைவு செய்தது.
இந்தப் போரினால் காசா மக்கள் தாக்குதலால் மட்டுமல்ல... பசியினாலும் உயிரிழந்தனர்.
காசா சுகாதாரத் துறை அமைச்சகத்தின்படி, இந்தப் போர் தொடங்கியதில் இருந்து தாக்குதலால் கிட்டத்தட்ட 66,000 காசா மக்கள் உயிரிழந்திருக்கின்றனர்.
இதில் குழந்தைகளும் அடங்குவர். 160 குழந்தைகள் உட்பட 360-க்கும் மேற்பட்ட காசா மக்கள் பசியால் உயிரிழந்திருக்கின்றனர்.
இந்தக் கோரப் போர் இப்போது மெல்ல மெல்ல முடிவை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறது.
காசா போர்
நெதன்யாகுவை திட்டிய ட்ரம்ப்
இரண்டு வருடங்களாக, காசா மீது தொடர்ந்து வான்வழித் தாக்குதல்களை நடத்தி வந்த இஸ்ரேல், கடந்த மாதம் தரைவழித் தாக்குதலையும் தொடங்கியது.
அடுத்ததாக, காசாவிற்குச் செல்லும் மனிதநேய உதவிகளையும் தொடர்ந்து இஸ்ரேல் தடுத்து வந்தது. இந்தக் கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகமாக, உலக நாடுகள் இஸ்ரேலுக்குக் கடும் எதிர்ப்புகளையும், கண்டனங்களையும் பதிவு செய்தன.
இதற்குச் சிறந்த உதாரணம், கடந்த 27-ம் தேதி நெதன்யாகு, ஐ.நா பொதுசபையில் உரையாற்றியபோது, அந்த உரையை பல உலக நாடுகள் புறக்கணித்துவிட்டு வெளியேறின.
இன்னொரு பக்கம், அமெரிக்க அதிபராக பொறுப்பேற்றதிலிருந்து ட்ரம்ப் பெரிதாக நெதன்யாகுவை சாடியதில்லை.
ட்ரம்ப் தொடர்ந்து இஸ்ரேலுக்கு ஆதரவாகவே பேசிவந்தார்... ஹமாஸை கடுமையாக எதிர்த்தும், எச்சரித்தும் வந்தார்.
இஸ்ரேலின் தாக்குதல் கொடூரங்கள் தொடர்ந்துகொண்டே போகையில், அது ட்ரம்பிற்கு நெருக்கடியை உண்டாக்கியது. இதனால், அமெரிக்க அதிகாரிகளின் அளவிலான கூட்டத்தில், நெதன்யாகுவைக் கெட்ட வார்த்தையால் ட்ரம்ப் திட்டியதாக தகவல்கள் வெளியாகின.
ட்ரம்ப் - நெதன்யாகு
ஒப்புக்கொண்ட நெதன்யாகு
உலக நாடுகளின் எதிர்ப்புகள், ட்ரம்பின் அதிருப்தியைத் தாண்டி இஸ்ரேல் மக்களுக்கும் இந்தத் தொடர் போரின் மீது ஒருவித வெறுப்பு வந்துவிட்டது.
இதையெல்லாம் பெரும் நெருக்கடியாக மாற, ஐ.நா பொதுசபைக்காக அமெரிக்கா சென்றிருந்த நெதன்யாகு, ட்ரம்பை சந்தித்து அவர் பரிந்துரைத்த 20 அமைதிக்கான அம்சங்களை ஒப்புக்கொண்டார்.
இது கடந்த 29-ம் தேதி நடந்தது. இந்த அம்சங்களை உடனே ஒப்புக்கொள்ள வேண்டும் என்று ஹமாஸிற்கு ட்ரம்ப் தரப்பில் இருந்தும், உலக நாடுகளின் தரப்பில் இருந்தும் நெருக்கடிகள் தரப்பட்டன.
உலக நாடுகளின் அழுத்தம், மக்களின் தொடர் மரணங்களின் காரணமாக, ஹமாஸும் கடந்த 3-ம் தேதி, ட்ரம்ப் பரிந்துரைத்த சில அம்சங்களை ஏற்றுக்கொண்டது. மற்றவற்றிற்கு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று கூறியது.
எகிப்தில் பேச்சுவார்த்தை
இதையடுத்து, கடந்த வாரம், எகிப்தில் இஸ்ரேல், காசா பேச்சுவார்த்தை நடந்தது. அங்கே முதல்கட்ட அமைதி ஒப்பந்தத்தை இரு நாடுகளும் ஒப்புக்கொண்டுவிட்டன என்று ட்ரம்ப் அறிவித்தார்.
அதன் படி, முதலாவதாக, இரு தரப்பினரும் பணயக் கைதிகளை விடுவிப்பார்கள். இஸ்ரேல் காசாவில் இருக்கும் தனது படையை திரும்பப் பெறும் என்றும் ட்ரம்ப் அறிவித்தார்.
இதனையடுத்து, இன்று காசா தாங்கள் பிடித்து வைத்திருக்கும் 20 இஸ்ரேல் பணயக் கைதிகளையும் விடுவித்தது.
இஸ்ரேல் தாங்கள் பிடித்து வைத்திருக்கும் 2,000 பணயக் கைதிகளை கொஞ்சம் கொஞ்சமாக விடுவித்து வருகிறது.
ட்ரம்ப் இஸ்ரேல் பயணம்
ட்ரம்ப் இஸ்ரேல் பயணம்
இந்த நிலையில் தான், இன்று எகிப்தில் ட்ரம்ப் தலைமையில் இஸ்ரேல் - காசா போர் நிறுத்தத்திற்கான பேச்சுவார்த்தை நடக்க உள்ளது. இந்தப் பேச்சுவார்த்தையில் 30 நாடுகள் கலந்துகொள்ள உள்ளன.
இந்தியா சார்பில், வெளியுறவுத்துறை இணையமைச்சர் கீர்த்தி வர்தன் சிங் கலந்துகொள்கிறார்.
இந்தப் பயணத்திற்கு கிளம்பிய ட்ரம்ப், பணயக் கைதிகளின் விடுதலையையொட்டி, இஸ்ரேலுக்கும் சென்றிருந்தார்.
அவருக்கு இஸ்ரேல் பாராளுமன்றத்தில் 'ஸ்டான்டிங் ஓவேஷன்' கொடுக்கப்பட்டது. நெதன்யாகு ட்ரம்பை சிறந்த நண்பர் என்று குறிப்பிட்டார்.
அமைதி பேச்சுவார்த்தைக்காக ட்ரம்ப் அமெரிக்காவில் இருந்து கிளம்பியதில் இருந்து, 'இஸ்ரேல் - காசா போர் முடிந்துவிட்டது' என்று தொடர்ந்து கூறி வருகிறார்.
இஸ்ரேல் - காசா போர் முடிவுக்கு வந்ததா?
இந்தக் கேள்வியைக் கேட்டால், 'இன்னும் முடியவில்லை' என்பதுதான் பதில். ஏற்கெனவே சொன்னதுபோல, ஹமாஸிற்கு ஒரு சில அம்சங்களில் மட்டுமே சம்மதம் உள்ளது.
அவர்கள் மீதியை பேச்சுவார்த்தையில் பேசித் தெளிவு செய்ய வேண்டும் என்று கூறிவிட்டனர்.
இன்று நடக்கும் பேச்சுவார்த்தையில்தான், ஹமாஸ் ஒத்துக்கொள்கிறதா என்பது தெரியவரும்.
அடுத்ததாக, இஸ்ரேல் இந்த அம்சங்களை ஒப்புக்கொண்டதுபோல, அதைக் கட்டாயம் பின்பற்றவும் செய்ய வேண்டும். இப்போதே கியூபாவில் இது குறித்து சந்தேகம் எழுப்பி போராட்டங்கள் நடக்கின்றன.
ட்ரம்ப்
இது ட்ரம்பின் வெற்றி மட்டுமா?
ஒருவேளை, இந்தப் போர் வெற்றிகரமாக, முடிவை எட்டினால், ட்ரம்ப் கூறுவதுபோல, இது அவர் நிறுத்திய போராக இருக்கலாம். ஆனால், அவர் மட்டும் நிறுத்திய போராக இருக்காது.
இதற்காக பல உலக நாடுகள் கடும் நெருக்கடியைத் தந்துவந்தன. இந்த நெருக்கடியை அதிகரிப்பதுபோல, பாலஸ்தீனத்தை நாடாக அங்கீகரிக்கத் தொடங்கின.
உலக நாடுகளையும், அதன் அரசாங்கங்களையும் தாண்டி, பல நாடுகளின் மக்களும் இதற்காகப் போராட்டம் நடத்தினர். அதையும் நாம் கட்டாயம் அங்கீகரித்தே ஆக வேண்டும்.