மனதுக்கும் சூரிய ஒளிக்கும் என்னத் தொடர்பு? விளக்கும் மருத்துவர்!
Published:Just NowUpdated:Just Now
சூரிய ஒளியால் உடலுக்கும் சருமத்துக்கும் கிடைக்கும் நன்மைகளைப் பற்றி பலரும் கூறி இருப்பதை நாம் கேட்டிருப்போம்.
ஆனால், சூரிய ஒளிக்கும் மனநலத்திற்கும் எவ்வளவு தூரம் தொடர்பு இருக்கிறது என்பதையும் பரபரப்பான வாழ்க்கைச் சூழலில் இயற்கை தரும் அற்புதமான சூரிய ஒளியை மறந்ததால் நாம் சந்திக்கும் மனநல பிரச்னைகளையும் பற்றிப் பேசுகிறார், திருநெல்வேலியைச் சேர்ந்த உளவியல் நிபுணர் ஸ்ரீநிதி.
மனதுக்கும் சூரிய ஒளிக்கும் என்னத் தொடர்பு?
தட்டி எழுப்பும் சூரிய ஒளி
"ஓர் உயிரினம் சுற்றுச்சூழுடன் ஒத்துப்போய் வாழ்வதற்கு அந்த உயிரினத்திற்குள் சில உடல்ரீதியான மாற்றங்கள் நிகழ வேண்டும்.
அந்த மாற்றங்கள் என்பது தானாகவே நிகழக்கூடியதாகவே (Rhythmic) அமைந்திருக்கிறது. 24 மணிநேரம் ரிதம் என்று கொல்லக்கூடிய சர்க்காடியன் ரிதம் (Circadian rhythm) ஒன்று நம் உடலில் செயல்படுகிறது.
இந்த ரிதம்தான் நம்முடைய மெட்டபாலிசம், உறக்கம், உடல் வெப்பம் போன்றவற்றை கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது.
இந்த ரிதத்திற்கும் நம் உணர்ச்சிகளுக்கும் நிறையவே தொடர்புகள் இருக்கின்றன. எப்படி என்றால், இந்த ரிதமை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் நம் மூளையின் ஹைப்போதலாமஸில் உள்ள ஒரு சிறுபகுதியான சுப்ராச்சியாஸ்மாடிக் நியூக்ளியஸ் (Suprachiasmatic Nucleus) நன்றாக செயல்படுவதுதான் முதலில் முக்கியம்.
இது நன்றாக செயல்படுவதற்கு வெளியில் இருந்து சில தூண்டுதல்கள் வேண்டும். அதில் ஒரு முக்கியமான தூண்டுதல் லைட் இண்டிகேட்டர் (light indicator). அதாவது, சூரியன்.
சூரிய ஒளி - ஒரு வரம்..!
அந்த நாள் முழுவதும் கொஞ்சம் டல்லாகவே இயங்கும்!
காலையில் சூரியன் உதயமாகும் பொழுதே நாமும் எழுந்து அந்த வெளிச்சத்தை நம் உடல் வாங்கும்போது, 'இது காலை நேரம்; நீ உற்சாகமாக வேண்டும்; வேலை செய்ய வேண்டும்' என்று நம்மை தட்டியெழுப்பும் சூரிய ஒளி.
இதுவே, நம் உடல் சூரிய ஒளியில் படாமல் இருக்கும்போது 'இன்னும் நமக்கு விடியவில்லை' என்றே நம் உடல் நினைத்துக்கொள்ளும். இதனால், அந்த நாள் முழுவதும் கொஞ்சம் டல்லாகவே இயங்கும்.
எதற்கெடுத்தாலும் எரிச்சல்... மனச்சோர்வு...
சூரியன் மறையும்போது நாம் இரவு உணவை முடித்துவிட்டு மெள்ள மெள்ள தூங்குவதற்காக தயாராக வேண்டும் என்று பலரும் கூறி கேட்டிருப்போம். அதற்கான முக்கிய காரணம் என்னவென்றால், நாம் நன்றாக தூங்க வேண்டும் என்பதற்காகவே சுரக்கக்கூடிய மெலட்டோனின் (melatonin) ஹார்மோன் இருட்டில்தான் சுரக்கும்.
அதாவது, சூரியன் மறைந்த பின் ஏற்படக்கூடிய இருட்டில்தான் சுரக்கும். ஆனால், நாம் அறையில் விளக்குகளை அணைக்காமல் வைத்திருந்தாலோ, அல்லது நள்ளிரவு வரை செல்போனை நோண்டிக்கொண்டே இருந்தாலோ மெலட்டோனின் ஹார்மோன் சரியாக சுரக்காது.
விளைவு, தூக்கமின்மை பிரச்னை வரும் அல்லது ஆழ்ந்த தூக்கம் வராது. இதனால், மறுநாள் எதற்கெடுத்தாலும் எரிச்சல், மனச்சோர்வு போன்றவை இருக்கும்.
உளவியல் நிபுணர் ஸ்ரீநிதி
பொதுவாக ஈக்வேட்டர்க்கு அருகில் (Near the equator) வாழும் மக்களுக்கு பகல் அதிக நேரம் நீடிக்கும். அதனால், அவர்களுக்கு நன்றாகவே சூரிய வெளிச்சம் கிடைக்கிறது. அதனால், அவர்களுடைய 24 மணி நேரம் சைக்கிளில் (Circadian rhythm) அவர்களுக்கு எந்த பாதிப்பும் வராது.
ஆனால், போல்ஸுக்கு அருகில் (Near the poles) வாழும் மக்களுக்கு சில மாதங்களுக்கு குளிர்காலமே நீடித்து இருக்கும். எனவே, இரவு நீடிக்கும்; பகல் சுருங்கிவிடும். இதனால் 'Seasonal affective disorder ' என்று சொல்லக்கூடிய ஒருவிதமான மனஅழுத்தம்கூட இவர்களுக்கு நேரிடலாம்.
ஆனால், நாம் இயற்கையாகவே சூரியஒளி நன்றாக கிடைக்கும் பகுதிகளில்தான் வாழ்கிறோம் என்பது ஒரு வரம். அதை எவ்வளவு தூரம் பயன்படுத்துகிறோமோ அந்தளவுக்கு மனநல பிரச்னைகளை தவிர்க்கலாம்.
குறைந்தபட்சம் 10 நிமிடம்!
சூரியன் எழும்போது நாமும் எழுந்து, அது மறையும்போது நாமும் தூங்குவது என்பது நம் உடல்நலத்துக்கு மட்டுமல்லாமல் மனநலத்துக்கும் மிகவும் உதவியாக இருக்கிறது.
இதனால், ஹேப்பி ஹார்மோன்ஸ் அதிகமாக சுரக்க ஆரம்பிக்கிறது. சூரியஒளியில் தினமும் குறைந்தபட்சம் 10 நிமிடங்களாக தொடர்ந்து நின்று வருவதினால் நம்முடைய ரிதம் செட் ஆக இது உதவுகிறது.
அது மட்டுமல்லாமல், மன அழுத்தம், எதிர்மறையான சிந்தனைகள் போன்றவை குறைகின்றன.
அலட்சியமாக நினைக்க மாட்டோம்!
நம் முன்னோர்கள் இயற்கையோடு இணைந்த வாழ்க்கையை வாழ்ந்ததால் சூரியஒளிக்கு என்று அவர்கள் மெனக்கெடாவிட்டாலும் அவர்களுக்கு அது கிடைத்தது.
ஆனால், இப்போது நாம் இருக்கும் பிஸியான வாழ்க்கையில் இதற்கென்று அதிகாலையில் கொஞ்சம் நேரம் ஒதுக்கியே ஆக வேண்டும்.
சூரிய ஒளியால் நமக்கு கிடைக்கும் ஆரோக்கியமான மனநலம் பற்றி நமக்குத் தெரிந்தால் நாம் சூரிய ஒளியை என்றுமே அலட்சியமாக நினைக்க மாட்டோம்'' என்கிறார் உளவியல் நிபுணர் ஸ்ரீநிதி.