சத்தியமூர்த்தி பவன் வளாகத்தில் உள்ள காமராஜரின் திருவுருவப் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார் ராகுல் காந்தி. - படம்: இந்து தமிழ் திசை
சென்னை: ஏறக்குறைய ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு தமிழகக் காங்கிரஸ் தலைமையகமான சத்தியமூர்த்தி பவனுக்கு வருகை தந்தார் அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ராகுல் காந்தி.
தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் பதவியேற்பு விழாவுக்காக அவர் சென்னை வந்திருந்தார்.
நேரு விளையாட்டரங்கில் நடைபெற்ற அந்த விழாவில் பங்கேற்ற பின்னர், அவர் சத்தியமூர்த்தி பவனுக்கு வருவார் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, காங்கிரஸ் தொண்டர்கள் அப்பகுதியில் குவிந்திருந்தனர்.
கடந்த ஒன்பது ஆண்டுகளில் தமிழகத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரப் பொதுக்கூட்டங்களில் கலந்துகொண்ட போதும் ஒருமுறைகூட சத்தியமூர்த்தி பவன் பக்கம் எட்டிப்பார்க்காத ராகுல் காந்தி, இம்முறை கட்சியினரை ஏமாற்றவில்லை.
அண்மைய தேர்தல் பிரசாரத்தின்போது தோழமைக் கட்சித் தலைவரான மு.க. ஸ்டாலினுடன் இணைந்து பிரசாரம் மேற்கொள்ளாத ராகுல், விஜய்யின் பதவியேற்பு நிகழ்வில் பங்கேற்றார்.
சத்தியமூர்த்தி பவன் வளாகத்தில் உள்ள காமராஜரின் திருவுருவப் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்திய பின்னர், தமிழகக் காங்கிரசின் முக்கியமான நிர்வாகிகளுடன் ராகுல் காந்தி ஆலோசனை மேற்கொண்டார்.
அப்போது தமிழகக் காங்கிரஸ் வளர்ச்சிக்கு கட்சித் தலைமை அனைத்துவிதமான ஒத்துழைப்பையும் வழக்கும் என அவர் உறுதியளித்தார். மேலும், தமிழகக் காங்கிரஸ் கட்சியை அடிமட்டம் வரை பலப்படுத்தத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுக்க வேண்டும் என்றும் அவர் நிர்வாகிகளிடம் வலியுறுத்தினார்.
.png)








English (US) ·