Last Updated:May 13, 2026 4:37 PM IST
கரூர் கூட்ட நெரிசல் வழக்கை விசாரித்த ஐபிஎஸ் அஸ்ரா கார்க், தமிழ்நாடு அரசின் உளவுத்துறை ஐஜியாக நியமனம்.

முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் ஆட்சி அமைத்த பிறகு ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றங்கள் நடந்துவருகின்றன. அந்த வகையில், வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க், தற்போது உளவுத் துறை ஐஜியாக நியமிக்கப்பட்டு தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
தவெக தலைவர் விஜய், கரூரில் பிரச்சாரம் மேற்கொண்டபோது அங்கு ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பரிதாபமாக 41 பேர் பலியாகினர். இந்த வழக்கை முதலில் தமிழ்நாடு காவல்துறை விசாரித்து வந்தது. அதனைத் தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றம், வடக்கு மண்டல ஐ.ஜி.யான ஐபிஎஸ் அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்து விசாரணைக்கு உத்தரவிட்டது. இதன் பின்னர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு, சிபிஐ வசம் வழக்கு விசாரணை சென்றது.
இந்த வழக்கு விசாரணைக்காக தவெக தலைவர் விஜய், இரண்டு முறை டெல்லி சிபிஐ அலுவலகத்திற்குச் சென்றுவந்தார். தற்போது இந்த வழக்கு சிபிஐ விசாரணையில் இருந்துவருகிறது. இதற்கிடையில்தான் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் நடைபெற்று, அதில் தவெக 108 இடங்களில் வென்று தனி பெரும் கட்சியாக மாறியது.
இதனையடுத்து திமுக கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் தவெக ஆட்சி அமைத்து, முதலமைச்சராக ச. ஜோசப் விஜய் பதவி ஏற்றார். இந்நிலையில், கரூர் விவகாரத்தில் வழக்கை விசாரிக்க உயர் நீதிமன்றம் நியமித்த ஐபிஎஸ் அஸ்ரா கார்க்கை, தற்போது தமிழ்நாட்டின் உளவுத்துறை ஐஜியாக தமிழ்நாடு அரசு நியமித்து உத்தரவிட்டுள்ளது.
.png)







English (US) ·