சென்னை: தனியாக வசித்த முதியவர் கொலை; துணிக்கடை ஊழியரிடம் விசாரணை; என்ன நடந்தது?

2 hours ago 18

முதியவரைக் கொலை செய்த குற்றத்துக்காக துணிக்கடையில் வேலை செய்த இளைஞரைப் பிடித்து போலீஸார் விசாரித்து வருகிறார்கள்.

Published:Just NowUpdated:Just Now

கொலை

கொலை ( சித்தரிப்புப் படம் )

சென்னை புரசைவாக்கம், அரசப்பா தெருவில் வசித்து வந்தவர் பாலகிருஷ்ணன் (61). இவர், அண்ணாநகரில் உள்ள துணிக்கடையில் வேலை செய்து வந்தார். இவரின் மனைவி உஷா. 2024-ம் ஆண்டு உடல்நலம் சரியில்லாமல் உஷா இறந்துவிட்டார்.

இந்தத் தம்பதியினருக்கு குழந்தை இல்லாததால் பாலகிருஷ்ணன், தனியாக வசித்து வந்தார். இந்நிலையில்தான் இவரைப் பார்க்க அவரின் அண்ணன் மகன் விக்னேஷ் என்பவர் வந்திருக்கிறார். அப்போது பாலகிருஷ்ணனின் பெட்ரூம் வெளிப்பக்கமாகப் பூட்டப்பட்ட நிலையில் கதவுக்குக் கீழே ரத்தம் வடிந்துகொண்டிருந்தது. அதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த விக்னேஷ், வேப்பேரி காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவித்தார்.

கொலை

கொலை

சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார், அக்கம்பக்கத்தினரின் உதவியோடு பெட்ரூம் கதவை உடைத்து உள்ளே சென்றனர். அப்போது பாலகிருஷ்ணன், ரத்த வெள்ளத்தில் சடலமாகக் கிடந்தார். உடனே அவரின் சடலத்தைக் கைப்பற்றிய போலீஸார், பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அதைத் தொடர்ந்து பாலகிருஷ்ணனின் அண்ணன் மகன் விக்னேஷிடம் விசாரித்தனர். அப்போது அவர், தன்னுடைய பெரியப்பா, செல்போனுக்கு கவர் வாங்கி வரும்படி கூறியிருந்தார். அதை வாங்கிவிட்டு பெரியப்பாவுக்கு போன் செய்தபோது அவர் அழைப்பை ஏற்கவில்லை. அதனால்தான் நேரில் சென்று பார்க்க வந்தேன்.

அப்போதுதான் அவரின் அறையிலிருந்து ரத்தம் கதவுக்குக் கீழ் வழியாக வடிந்திருந்ததைப் பார்த்தேன் என்று கூறினார். இதையடுத்து போலீஸார் அந்தப் பகுதியில் உள்ள சி.சி.டி.வி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அப்போது பாலகிருஷ்ணன் வேலை செய்யும் துணிக்கடையில் வேலை செய்யும் மாததேவ் என்பவர் வந்து சென்ற காட்சி பதிவாகியிருந்தது.

உடனே மாததேவ்வைப் பிடித்து விசாரித்தபோது பாலகிருஷ்ணனைக் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். எதற்காக கொலை செய்தார் என்று மாததேவ்விடம் போலீஸார் விசாரித்து வருகிறார்கள்.

இதுகுறித்து வேப்பேரி போலீஸார் கூறுகையில், ``கொலை செய்யப்பட்ட முதியவர் பாலகிருஷ்ணன், கடந்த மூன்றாண்டுகளாக துணிக்கடையில் வேலை செய்து வந்திருக்கிறார். அதே கடையில் ஹவுஸ் கீப்பிங் வேலை செய்திருக்கிறார் மாததேவ். அதனால் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. பாலகிருஷ்ணன், தனியாக வசித்து வந்ததைத் தெரிந்துக்கொண்ட மாததேவ், அவரைக் கொலை செய்து பொருள்களைக் கொள்ளையடிக்கும் நோக்கத்தில் வந்திருக்கிறார். அதுதொடர்பாக விசாரித்து வருகிறோம்" என்றனர்.

Read Entire Article