த.வெ.க. – காங். கூட்டணியை விமர்சித்த காங்கிரஸ் நிர்வாகி இடைநீக்கம்!

1 hour ago 10

சென்னை, மே 9- தேர்தலுக்குப் பின் தவெக – காங்கிரஸ் அமைத்துள்ள கூட்டணியை விமர்சித்த இளைஞர் காங்கிரஸ் மாநில செயலாளர் அலிம் அல்புஹாரி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். காங்கிரஸ் கட்சியின் அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் அலிம் அல்புஹாரி இடைநீக்கம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தவெக 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. எனினும் ஆட்சி அமைக்கத் தேவையான மெஜாரிட்டி அக்கட்சிக்கு இல்லை. இந்நிலையில், தவெக ஆட்சி அமைக்க ஆதரவு அளிப்பதாக காங்கிரஸ் கட்சி அறிவித்த நிலையில், அக்கட்சியின் மூத்த தலைவர்கள் விஜய்யை அவரது பனையூர் அலுவலகத்தில் சந்தித்து நேற்று (8.5.2026) வாழ்த்து தெரிவித்தனர்.

புதிதாக அமையும் தவெக அரசில் காங்கிரஸ் பங்கு பெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தேசிய அளவில் இந்தியா கூட்டணியில் காங்கிரஸ், திமுக இருக்கும் நிலையில், அடுத்து வரும் உள்ளாட்சி தொடங்கி மக்களவைத் தேர்தல் வரை தவெக உடனான கூட்டணி தொடரும் என்று காங்கிரஸ் அறிவித்துள்ளது.

தவெக கட்சிக்கு ஆதரவு அளிப்பது குறித்து காங்கிரஸ் வெளியிட்ட அறிக்கையில், மதவாத சக்திகளுக்கு ஆதரவாக செயல்படக் கூடாது என்ற நிபந்தனையுடன் ஆதரவு அளிப்பதாகத் தெரிவிக்கப் பட்டுள்ளது. இதனால், தமிழ்நாட்டில் திமுக உடனான காங்கிரஸ் கூட்டணி முடிவுக்கு வந்துள்ளது.

இந்தநிலையில் காங்கிரஸ் கட்சியின் இந்த செயலுக்கு, அக்கட்சியின் நிர்வாகிகள் சிலர் கண்டனம் தெரிவித்தனர். சந்தர்ப்பவாதத்திற்காக தவெக உடன் காங்கிரஸ் கூட்டணி அமைத்துள்ளதாக குற்றம்சாட்டி காங்கிரஸ் நிர்வாகிகள் கட்சியை விட்டு விலகியுள்ளனர்.

காங்கிரஸ் கட்சியின் தேசிய மாணவர் யூனியனின் செயலாளர் தயானந்த் கார்த்திக் மற்றும் AIPC நிர்வாகி பிரனேஷ் பாலாஜி ஆகியோர் தங்கள் விலகல் கடிதத்தை கட்சி தலைமைக்கு அனுப்பி யுள்ளனர். தவெக கூட்டணியில் இணைந்ததும் காங்கிரஸ் நிர்வாகிகளின் விலகல் அக்கட்சி தலைமைக்கு அதிர்ச்சியளித்துள்ளது.

இளைஞர் காங்கிரஸ் மாநில பொதுச்செயலாளர் அலிம் அல்புகாரி எதிர்ப்பு தெரிவித்தார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில், “கொள்கைப் பிடிப்பே அரசியல், சந்தர்ப்பவாதம் அல்ல. இதே சந்தர்ப்பவாதத்தை பாஜகவும் அதிமுகவும் செய்து வருகிறது. இப்போது நாம் அதை செய்யக்கூடாது” எனக் கூறியிருந்தார்.

இந்த பதிவில் ராகுல் காந்தி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, தமிழ்நாடு காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் மற்றும் இளைஞர் காங்கிரஸ் தேசிய தலைவர் உதய் பானு சிப் ஆகியோரை அலிம் அல்புகாரி டேக் செய்திருந்தார்.

அலிம் அல் புஹாரி, தவெக – காங்கிரஸ் கூட்டணியை விமர்சித்து, ஒன் இந்தியா தமிழ் யூடியூப் சேனலுக்கும் பேட்டி அளித்திருந்தார். அதில், “விஜய் எந்தக் கட்சியை தீய சக்தி என சொன்னாரோ அந்தக் கட்சியோடு சேர்ந்து நாங்கள் தேர்தலைச் சந்தித்து, அந்த தீய சக்தியின் ஆதரவு வாக்குகளை வாங்கி, அந்த தீய சக்தி கூட்டணி தலைமையை ஏற்று சட்டமன்ற உறுப்பினராகி, எங்களை தீயசக்தி எனச் சொன்ன விஜய் உடனே கூட்டணி சேர்ந்துள்ளது காங்கிரஸ்” எனக் கடுமையாக விமர்சித்திருந்தார்.

இந்நிலையில், இளைஞர் காங்கிரஸ் மாநில செயலாளர் அலிம் அல்புஹாரி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். காங்கிரஸ் கட்சியின் அனைத்துப் பொறுப்பு களில் இருந்தும் அலிம் அல்புஹாரி இடைநீக்கம் செய்யப்படுவதாக இளைஞர் காங்கிரஸ் தேசிய பொதுச் செயலாளர் முகமது ஷாகித் அறிவித்துள்ளார்.

Read Entire Article