நாங்கள் ‘நம்பர் ஒன்’ மாநிலமாக மாற்றி விட்டுத்தான், ஆட்சியை விட்டுச் சென்றிருக்கிறோம் நீங்கள் வெறும் ”இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்” ஆட்சியாக இல்லாமல், ”ரியல்” ஆட்சியாக நடத்துங்கள்! சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு

48 minutes ago 16

சென்னை, மே 13- நாங்கள் ‘நம்பர் ஒன்’ மாநிலமாக மாற்றி விட்டுத்தான், ஆட்சியை விட்டுச் சென்றிருக்கிறோம். உங்கள் ஆட்சியைப் பொருத்தவரைக்கும், வெறும் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் ஆட்சியாக இல்லாமல், ரியல் ஆட்சியாக நடத்துங்கள். அது மட்டும் தான் மக்களின் கோரிக்கை என இன்று (13.5.2026) சட்டமன்றத்தில் புதிதாக ஆட்சி பொறுப்பேற்றுள்ள முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக, அரசு மீதான பெரும்பான்மையை நிரூபிப்பதற்கான வாக்கெடுப்பு விவாதத்தில் பங்கேற்று பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசினார். அவை வருமாறு:

பேரவைத் தலைவர் அவர்களே, புதிதாக அமைந்திருக்கின்ற இந்த ஆட்சியின் மீது இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கப் போகிறது.

அதற்கு முன்பு வாக்கு எண்ணிக்கை தொடங்கி கடந்த 10 நாள்களாக ஒவ்வொரு நாளும் என்னென்ன நடந்திருக்கிறது என்பதை எதிர்க்கட்சியாக சில விமர்சனங்களோடு இங்கு வைக்க விரும்புகிறேன்.

முதலில் தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைக்க வேண்டும் என்று பெரும்பான்மையான மக்கள் உங்களுக்கு வாக்களிக்கவில்லை.

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் சுமார் 4 கோடியே 93 லட்சத்து 25 ஆயிரம் வாக்காளர்கள் வாக்களித்திருக்கிறார்கள். தற்போதைய ஆளுங்கட்சிக்கு வாக்களித்தவர்களின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா? 1 கோடியே 72 லட்சத்து 26 ஆயிரம் தான். மீதம் இருக்கின்ற சுமார் 3 கோடியே 21 லட்சம் பேரும், உங்கள் கட்சிக்கு எதிராக வாக்களித்திருக்கிறார்கள் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

அதாவது கிட்டத்தட்ட 65 சதவிகிதம் மக்களால் நிராகரிக்கப்பட்ட ஒரு ஆட்சியின் மேல் எங்களுக்கு மட்டுமல்ல, உங்களுக்கு வாக்களித்த மக்களுக்கும் கொஞ்சம் கொஞ்சமாக நம்பிக்கை குறைந்து வருகிறது.

அடுத்து மிக முக்கியமான ஒன்று மெஜாரிட்டிக்கான நம்பர்ஸ். நம் சட்டமன்றம் 234 உறுப்பினர்களைக் கொண்டது. மேஜிக்கல் நம்பர் என்று சொல்வார்கள். 118 உறுப்பினர்களைக் கொண்ட ஒரு கட்சியோ கூட்டணியோ தான் ஆட்சிக்கு வர முடியும். இப்போது நம்பிக்கை கூறுகின்ற உங்கள் கட்சிக்கு அந்த ‘நம்பர்ஸ்’ இருக்கிறதா என்று கேட்டால் இல்லை.

100 இடங்கள்தான் இருக்கிறது

108 இடங்கள் தான் இருக்கிறது. அதுவும் அந்த கட்சியின் தலைவர் முதலமைச்சர் அவர்கள் தன் வெற்றி குறித்த நம்பிக்கை இல்லாத காரணத்தினால் இரண்டு இடங்களில் போட்டியிட்டு, அதில் ஒரு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகியுள்ளார்.

அந்த தொகுதி மக்களை நேரில் சந்தித்தோ அல்லது ஒரு அறிக்கை மூலமாகவோ ஒரு நன்றியைக் கூட இன்னும் தெரிவிக்கவில்லை. அதுமட்டுமல்ல நேற்று (12.5.2026) உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் ஆளுங்கட்சியைச் சேர்ந்த திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதியின் உறுப்பினர் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளக் கூடாது என்று நீதிமன்றத்தில் சொல்லி இருக்கிறார்கள். அதனால் இப்பொழுது ஆளுங்கட்சிக்கு வெறும் 106 இடங்கள்தான் இருக்கிறது.

ஆனாலும் தேர்தலில், தனக்கு எதிராக எங்கள் தலைவர் அமைத்த கூட்டணியில் போட்டியிட்ட தலைவர்களை எல்லாம் இன்று சேர்த்துக் கொண்டு, பெரும்பான்மைக்கான கடிதத்தை, ஆளுநருக்கு கொடுத்து இன்றைக்கு இந்த ஆட்சி அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த ஆட்சிக்கு இன்றைக்கு ஆதரவு தெரிவித்து இருக்கக்கூடிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகளைச் சேர்ந்த மதிப்பிற்குரிய தலைவர்கள் எல்லாம், இந்த ஆட்சியை நாங்கள் ஆதரிக்கிறோம் என்பதற்கு சொன்ன காரணம், குடியரசு தலைவர் ஆட்சி அமைந்து விடக்கூடாது என்ற எண்ணத்தில், உங்களுக்கு வெளியில் இருந்து ஆதரவு தருகிறோம் என்று தெளிவாகச் சொல்லியிருக்கிறார்கள்.

குதிரை பேரத்தில்

அதே நேரத்தில் இன்னொன்றையும் சொன்னார்கள். இப்பொழுதும் எங்கள் தலைவர் தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழக கூட்டணியில் தொடர்வோம் என்று சொல்லி இருக்கிறார்கள். உங்களுக்கு ஆதரவு கொடுக்கும்போது, அவர்கள் சொன்ன இன்னொரு காரணமும் இருக்கு அதையும் நாம் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். மதச்சார்பற்ற ஆட்சி அமைய வேண்டும் என்று சொன்னார்கள். ஆனால் இப்பொழுது இங்கு என்ன நடந்திருக்கிறது?

உங்கள் கொள்கை எதிரி என்று சொன்ன பாஜக தலைமையிலான என் டி ஏ கூட்டணியில், போட்டியிட்ட ஒரு சட்டமன்ற உறுப்பினரை அந்தக் கட்சித் தலைவருக்கே தெரியாமல் இந்த ஆட்சிக்கு ஆதரவு தர வைத்திருந்தீர்கள். இப்போது நான் சொல்வது மிகவும் டீசண்டான வெர்ஷன்.

அந்தக் கட்சித் தலைவர் டி.டி.வி தினகரன் சொல்லும்போது என்ன தெரியுமா சொன்னார்? ஆட்சிக்கு வருவதற்கு முன்பே குதிரை பேரத்தில் ஈடுபடுகிறார்கள் என்று சொன்னார். நேற்று சொல்லி இருக்கிறார். ‘மாற்றம் மாற்றம் என்று சொன்னீர்கள். இது மாற்றமில்லை. துர்நாற்றம்’ என்று சொல்லி இருக்கிறார்.

புது சோபா செல்கிறது

அடுத்து அதே பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருக்கக்கூடிய பெரிய கட்சியான அதிமுக கிட்டத்தட்ட இரண்டாகப் பிளவு பட்டிருக்கிறது. பிளவுபட்ட ஒரு அணி உங்களுக்கு ஆதரவு தெரிவித்திருக்கிறார்கள். அடுத்து நடந்த இன்சிடென்ட் தான் ஒரு மிகப்பெரிய ட்விஸ்ட். பிளவு பட்ட குரூப்பில் இருக்கக்கூடிய ஒரு தலைவரின் வீட்டிற்கு ஒரு புது சோபா செல்கிறது. சோபா பின்னாடியே புது முதலமைச்சரும் செல்கிறார். புதுமையாக ஆட்சி நடத்துவீர்கள் என்று பார்த்தால், ‘புஷ்பா’ படம் போல் ஆட்சி நடத்துகிறீர்கள். தேர்தல் நேரத்தில் ஊழல் சக்தி என்று சொன்னீர்கள். ஆனால் இன்றைக்கு சோஷியல் மீடியாவில் மக்கள் உங்களைப் பார்த்து கேள்வி கேட்க ஆரம்பித்து விட்டார்கள்.

என்ன கேட்கிறார்கள் தெரியுமா. அந்த ஊழல் சக்தியோடு சேர்ந்து இருக்கின்ற ஆளுங்கட்சியை இப்போது என்ன சக்தி என்று கூறப்போகிறீர்கள்? க்ளீன் கவர்மெண்ட் என்று சொன்னீர்கள் இதுதான் உங்கள் கிளீன் கவர்மெண்ட்டின் லட்சணமா என்று மக்கள் கேட்க ஆரம்பித்து விட்டார்கள்.

இப்படி நீங்கள் கூவத்தூரையும் மிஞ்சுகின்ற அளவிற்கு, அடிக்கின்ற கூத்தைப் பார்க்கும்போது இந்த அரசு எத்தனை நாளைக்கு நீடிக்க போகிறது என்று மக்களுக்கு சந்தேகம் வர ஆரம்பித்துவிட்டது. முதல் கோணலே முற்றிலும் கோணல் என்பது மாதிரி உங்கள் நடவடிக்கைகள் எல்லாமே இன்றைக்கு எல்லை மீறி நடந்து கொண்டிருக்கிறது.

முற்றிலும் கோணல்

இப்படி சட்டமன்ற உறுப்பினர்களை எல்லாம் கடன் பெற்று நடத்துகின்ற முதலமைச்சர் தான் அளித்துள்ள போலி வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாது என்று தெரிந்தவுடன், முந்தைய அரசு அதாவது எங்களுடைய அரசு வளர்ச்சிக்காக பெற்ற கடன் குறித்து தவறான கருத்துக்களைத் தந்து, மக்களை இன்றைக்கு திசை திருப்ப முயற்சி செய்து கொண்டிருக்கிறார்.

பெரும்பான்மையும் இல்லாத, அரசியலில் அடிப்படை நேர்மையும் அல்லாத இந்த அரசு நல்லாட்சி தரும், தமிழ்நாட்டு மக்களின் உரிமைக்காக போராடும் இன்று மக்களுக்கு துணியும் நம்பிக்கை இல்லை. முக்கியமான ஒரு விஷயத்தை இங்கு பதிய வைக்க நான் விரும்புகிறேன்.

நாங்கள் வெளிநடப்பு

உங்களுக்கு ஓட்டு போட்ட மக்களே, நடப்பதை எல்லாம் பார்த்துவிட்டு ஒரு பெரிய தவறை செய்து விட்டோமே என்று இன்று வருத்தப்பட ஆரம்பித்து விட்டார்கள். மக்களின் அந்த உணர்வை வெளிப்படுத்தும் விதமாக இந்த ஓட்டெடுப்பில் கலந்து கொள்ளாமல் திராவிட முன்னேற்ற கழக உறுப்பினர்கள் நாங்கள் வெளிநடப்பு செய்யப் போகிறோம்.

நாங்கள் வெளிநடப்பு செய்தாலும், அதனால் பேரவையின் எண்ணிக்கை அளவு குறைந்து, நீங்கள் நிச்சயம் இந்த வாக்கெடுப்பில் வெற்றி பெறத்தான் போகிறீர்கள். அப்படி வெற்றி பெற்ற பிறகாவது மக்களின் நம்பிக்கையைக் காப்பாற்றுகின்ற வகையில் உங்களின் பணிகள் இருக்க வேண்டும்.

நீங்கள் தொடர வேண்டும்

எங்களின் தலைவர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள், கடந்த அய்ந்து ஆண்டாக, ஒவ்வொரு குடும்பத்துக்கும் பார்த்து பார்த்து திட்டங்களை நிறைவேற்றிக் கொடுத்தார். அந்தத் திட்டங்களை எல்லாம் நீங்கள் தொடர வேண்டும். தயவுசெய்து அதில் அரசியல் செய்ய வேண்டாம்.

ஏனென்றால் இந்த மாதம் 15 ஆம் தேதி கலைஞர் மகளிர் உரிமைத்தொகைக்காக ஒரு கோடியே 31 லட்சம் மகளிர் காத்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த ஆயிரம் ரூபாய் வருமா என்று காத்துக் கொண்டிருக்கிறார்கள். அதே மாதிரி புதுமைப்பெண் திட்டம், தமிழ்ப்புதல்வன் திட்டங்களில் கல்லூரிக்குச் செல்கின்ற மாணவர்களுக்கு மாதந்தோறும் வருகின்ற கல்வி ஊக்கத்தொகை, ஏழாம் தேதி கொடுத்திருக்க வேண்டும். இதுவரை வரவில்லை. அவர்களும் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இப்போது பள்ளி இல்லை என்றாலும் ஜூன் மாதம் பள்ளிகளைத் திறக்கப் போகிறார்கள். அப்போது காலை உணவு திட்டத்திற்காக பள்ளி மாணவர்கள் எல்லாம் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

காக்க வைத்து விடாதீர்கள்

இப்படி பல்வேறு திட்டங்கள் இருக்கிறது. நான் முதல்வன் திட்டம், தாயுமானவர், அன்பு கரங்கள் என்று பல்வேறு திட்டங்களின் பயனாளிகள் எல்லாம் ஆவலோடு இந்த அரசு என்ன செய்யப் போகிறது என்று காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

அதனால் நான் உங்களிடம் கேட்டுக் கொள்வது, முதலமைச்சர் அவர்கள் பதவியேற்ற போது தன் முதல் உரையில் அவகாசம் வேண்டும் என்று கேட்டீர்கள், நிச்சயம் அவகாசம் எடுத்துக் கொள்ளுங்கள். ஆனால் காத்துக் கொண்டிருக்கின்ற அனைவரையும் நீண்ட காலம் காக்க வைத்து விடாதீர்கள்.

அது மட்டுமல்ல தேர்தலுக்கு முன்பு பல கவர்ச்சியான வாக்குறுதிகளையும் நீங்கள் கொடுத்திருக்கிறீர்கள். மக்கள் அதையும் ஞாபகம் வைத்திருக்கிறார்கள்.

மகளிருக்கு மாதம் 2500 ரூபாய், ஆண்டுக்கு 6 சிலிண்டர், தங்கச் செயின், மோதிரம், பட்டுப் புடவை, வேலையில்லா இளைஞர்களுக்கு உதவித்தொகை என்று அந்தப் பட்டியலும் நீண்டு கொண்டிருக்கிறது.

அதில் ஒரு சில வாக்குறுதிகளையாவது முதல் கையெழுத்தில் நீங்கள் நிறைவேற்றுவீர்கள் என்று மக்கள் எதிர்பார்த்தார்கள். நீங்கள் வாக்குறுதிகளைச் சொல்லும் பொழுது நடைமுறைக்கு சாத்தியமானவற்றை மட்டும் தான் சொல்கிறேன் என்று எல்லா கூட்டத்திலும் திரும்பத் திரும்பச் சொல்லி இருக்கிறீர்கள். எனவே அதை விரைந்து செய்து காட்டுங்கள்.

திராவிட மாடல் ஆட்சி

இந்த நேரத்தில் எங்கள் ‘திராவிட மாடல்’ ஆட்சியைப் பற்றி ஒன்றை ஒன்று மட்டும் குறிப்பிட விரும்புகிறேன். நாங்கள் ஆட்சிக்கு வரும்போது 2021 கோவிட் பெருந்தொற்று காலம் இருந்தது. அப்போது மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சி எவ்வளவு தெரியுமா? வெறும் 0.7 சதவிகிதம். அந்த நிலைமையிலும் எங்கள் தலைவர் முதலமைச்சர் அவர்கள் முதல் கையெழுத்திலேயே மகளிர்க்கு விடியல் பயணம் திட்டத்தைக் கொடுத்தார். முதல் நாளே எல்லா குடும்பங்களுக்கும் 4000 ரூபாய் கரோனா நிவாரணத் தொகையை முதலமைச்சர் கொடுத்தார்.

ஆவின் பால் விலை குறைப்பு வரை, முதல் நாளே அய்ந்து கோப்புகளில் கையெழுத்திட்டார். ஒரே மாதத்தில் தேர்தல் அறிக்கையில் சொன்னது மாதிரி பெட்ரோல் விலையை லிட்டருக்கு மூன்று ரூபாய் குறைப்பதற்கான உத்தரவையும் எங்கள் முதலமைச்சர் போட்டார். இப்படி கடுமையாக உழைத்ததால் தான் அய்ந்தாண்டு முடிவில் இன்றைக்கு இந்தியாவிலேயே பொருளாதார வளர்ச்சியில் நம்பர் ஒன் மாநிலமாக தமிழ்நாட்டை எங்களுடைய தலைவர் மாற்றிக் காட்டியிருக்கிறார்.

நம்பர் ஒன் மாநிலமாக

நாங்கள் நம்பர் ஒன் மாநிலமாக மாற்றி விட்டுத்தான், ஆட்சியை விட்டுச் சென்றிருக்கிறோம். உங்கள் ஆட்சியைப் பொறுத்தவரைக்கும், வெறும் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் ஆட்சியாக இல்லாமல், ரியல் ஆட்சியாக நடத்துங்கள். அது மட்டும் தான் மக்களின் கோரிக்கை.

எங்களின் தலைவர், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களின் கட்டளையின்படி நீங்கள் ஆட்சியைத் தொடர, நாங்கள் தடையாக இருக்க விரும்பவில்லை. அந்த வகையில் பேரவையிலிருந்து நாங்கள் வெளிநடப்பு செய்கிறோம்.

இவ்வாறு சட்டமன்றத்தில் உரையாற்றினார் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின்.

Read Entire Article