சென்னை, ஜூலை 23 ‘‘ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் பலர் கைது செய்யப்பட்டது ஜனநாயகத்துக்கு எதிரானது. நம் மக்களின் உணர்வுகளையும், மாணவர்களின் உணர்வு களையும் ஒன்றிய அரசு மதித்தே ஆக வேண்டும். அதன் வெளிப்பாடாக, நீட் தேர்வு அறவே அகற்றப்பட வேண்டும் என முதலமைச்சர் ஜோசப் விஜய் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், ‘‘நீட் தேர்வு குளறுபடிகளை எதிர்த்து டில்லியில் நடைபெற்ற இளைஞர்கள் போராட்டத்துக்கு ஆதரவாகக் களமிறங்கிய மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் பலர் கைது செய்யப்பட்டது, ஜனநாயகத்துக்கு எதிரானது. ஒன்றிய அரசின் இந்தச் செயல்பாடுகள் கண்டிக்கத்தக்கவை.
நேற்று (21.7.2026) நடைபெற்ற விரும்பத்தகாத சம்பவத்துக்குக் கண்டனம் தெரிவித்து எதிர்க்கட்சிகள் சார்பில் நாடாளுமன்ற வளாகத்தில் இன்று (22.7.2026) நடைபெறும் போராட்டத்துக்கு தமிழக வெற்றிக் கழகம் தனது முழு ஆதரவைத் தெரிவித்துக்கொள்கிறது.
நீட் தேர்வைப் பொறுத்தவரை நீட் தேர்வு முறை அறவே அகற்றப்பட வேண்டும் என்பதே தவெகவின் சமரசமற்ற நிலைப்பாடு. மாணவர்களை மட்டுமல்லாது, அவர்களது குடும்பங்களையும் வெகுவாகப் பாதிக்கும் நீட் தேர்வு முறையை வைத்து வாக்கு அரசியல் செய்வதற்காக, பொய்யான வாக்குறுதிகளை நாம் ஒருபோதும் அளிக்க மாட்டோம்.
மாநில அரசுகளுக்கு அதிகாரம்!
நீட் தேர்வு போன்றவை ஒழிக்கப்பட வேண்டுமெனில், முதலில் கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும். அது மட்டுமே ஒரே நிரந்தரத் தீர்வாக இருக்க முடியும். ஒருவேளை, அதில் ஏதேனும் சட்ட நடைமுறைச் சிக்கல்கள் இருக்குமெனில், அவற்றை நிவர்த்தி செய்யும் வரை, இடைக்காலத் தீர்வாக, சிறப்பு ஒத்திசைவுப் பட்டியல் (Special Concurrent list) உருவாக்கி, அதன் மூலம் மாநில அரசுகளுக்கு அதிகாரம் வழங்க வேண்டும்.
அதன் வாயிலாகக் கல்வி மற்றும் மருத்துவக் கல்வி உள்ளிட்ட விஷயங்களில் மாநிலங்களுக்கு முழு அதிகாரம் கிடைக்க வழிவகை செய்யப்பட வேண்டும். இதுதான் நிரந்தரத் தீர்வு மற்றும் இடைக்காலத் தீர்வு நோக்கிய நம்முடைய பார்வை. இதை, கட்சி தொடங்கியபோதே, தவெக சார்பாக நடைபெற்ற கல்வி விருது வழங்கும் விழாவிலேயே ஆழமாக வலியுறுத்தி இருக்கிறோம்.
நம் மக்களின் உணர்வுகளையும் மாணவர்களின் உணர்வுகளை யும் ஒன்றிய அரசு மதித்தே ஆக வேண்டும். அதன் வெளிப்பாடாக, நீட் தேர்வு அறவே அகற்றப்பட வேண்டும். இந்தச் சிக்கலுக்கு இது மட்டுமே ஒரே தீர்வு என்பதை மீண்டும் வலியுறுத்துகிறோம்” என்று அவர் தெரிவித்துள்ளார்.
.png)
1 hour ago
13







English (US) ·