பெண்ணின் கண்ணியத்தைப் பாதுகாக்கும் புகலிடம் வீடு: வீட்டை இடித்தவர்களுக்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

1 hour ago 10

மதுரை, மே 9- மதுரை மாவட்டம் கோவிலாங்குளத்தைச் சேர்ந்த ஒரு பெண், தனது நிலத்தில் வீடு கட்டி வசித்து வந்தார். பக்கத்து நில உரிமையாளரான ஜேசன் தமிழ்செல்வன் என்பவர், அந்த வீடு தனது நிலத்தில் இருப்பதாகக் கூறி, சட்டவிரோதமாக ஜேசிபி இயந்திரம் மூலம் வீட்டை இடித்துள்ளார். இது தொடர்பாகப் பாதிக்கப்பட்ட பெண் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிபதி எல்.விக்டோரியா கவுரி மிக முக்கியமான தீர்ப்பை வழங்கியுள்ளார்.

வீடு என்பது வெறும் கட்டடம் அல்ல: “ஒரு வீடு என்பது வெறும் செங்கல் மற்றும் சாந்தால் ஆனது மட்டுமல்ல; அது ஒரு பெண்ணின் கண்ணியத்தைப் பாதுகாக்கும் கடைசிப் புகலிடம்.”

செல்வாக்கு படைத்தவர்கள் சட்டத்தைக் கையில் எடுத்துக்கொண்டு ஒரு பெண்ணின் வீட்டை இடிப்பது வெறும் சிவில் குற்றம் மட்டுமல்ல, அது அரசியலமைப்புச் சட்டத்திற்கே ஏற்பட்ட காயம்.

வீடு இடிக்கப்படும்போது காவல் துறையினர் வேடிக்கை பார்த்தது, அவர்கள் தங்கள் அரசியலமைப் புச் சட்டக் கடமையில் தோற்று விட்டதைக் காட்டுகிறது.

“வலிமை படைத்தவர்கள் எப்படி நடத்தப்படுகிறார்கள் என்பதில் ஜனநாயகம் இல்லை; மாறாக, எளிய மக்கள் எப்படிப் பாதுகாக்கப் படுகிறார்கள் என்பதில் தான் உண்மையான ஜனநாயகம் உள்ளது.”

வீட்டை இடித்தவர்களே, அதே இடத்தில் மூன்று நாட்களுக்குள் மீண்டும் வீட்டைத் தரமான முறை யில் கட்டிக் கொடுக்க வேண்டும்.

பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்காக, சம்பந்தப்பட்ட மூன்று பேரும் தலா ரூ. 50,000 (மொத்தம் ரூ. 1.50 லட்சம்) இழப்பீடாக வழங்க வேண்டும்.

வீட்டை மீண்டும் கட்டும் பணிகளை மதுரை மாவட்ட ஆட்சியர் நேரில் கண்காணித்து, அந்தப் பெண்ணுக்குத் தேவையான பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். இச்சம்பவம் குறித்துப் பதிவு செய் யப்பட்ட வழக்கின் விசாரணையை 4 வாரங்களுக்குள் முடித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.

“கண்ணியம் என்பது சலுகை அல்ல, அது ஒவ்வொருவரின் உரிமை. அதைச் சிதைக்க முயலும் எந்தச் செயலுக்கும் நீதிமன்றம் கடுமையான பதிலடி கொடுக்கும்.” என்று நீதிபதி எல்.விக்டோரியா கவுரி கருத்து தெரிவித்துள்ளார்.

Read Entire Article