9 ஆண்டுகள் தேக்கத்தில் இருந்த திட்டம் நிறைவேற்றம் – திருச்சியில் புதிய ESIC மண்டல துணை அலுவலகம் அமைப்பது உறுதி

3 hours ago 2

கடந்த ஒன்பது ஆண்டுகள் தேக்க நிலையில் இருந்த ESIC திருச்சி மண்டல துணை அலுவலகம் அமைக்கும் பணிக்கான எனது தொடர் முயற்சி வென்றுள்ளது.

எனது நாடாளுமன்றத் தொகுதி திருச்சியில் இ எஸ் ஐ சி மண்டல துணை அலுவலகம் அமைப்பது தொடர்பான எனது கோரிக்கையுடன் கடந்த 05.08.2025 அன்று ஒன்றியத் தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சர் மாண்புமிகு டாக்டர் மன்சுக் எல். மாண்டவியா அவர்களை, நாடாளுமன்றத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் சந்தித்தேன்.

அந்தச் சந்திப்பில், எனது திருச்சி நாடாளுமன்றத் தொகுதிக்கான இரு முக்கிய கோரிக்கைகளைக் கொண்ட மனுவை அமைச்சரிடம் வழங்கி, அவை குறித்து விரிவாக எடுத்துரைத்தேன்.அதில் ஒன்று, கடந்த 14.12.2016 அன்று நடைபெற்ற பணியாளர்களுக்கான மாநில காப்பீட்டுக் கழகத்தின் (ESIC) 206-வது கூட்டத்தில், சேலம் மண்டலத் துணை அலுவலகத்தைப் பிரித்து, திருச்சியில் அமைப்பதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டிருந்ததைச் சுட்டிக்காட்டி, ஒன்பது ஆண்டுகள் கடந்த பின்னரும் இதில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை என்பதை வேதனையுடன் தெரிவித்தேன்.

தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களும், ESI சட்டத்தின் கீழ் முழுமையாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், திருச்சி மக்களவைத் தொகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நான், திருச்சியின் புவியியல் முக்கியத்துவத்தை வலியுறுத்தினேன்.

தமிழ்நாட்டின் மையப் பகுதியில் அமைந்துள்ள திருச்சி, மாநிலத்தின் மூன்றாவது பெரிய நகரமாக விளங்குகிறது என்றும், இங்கு மண்டலத் துணை அலுவலகம் அமைப்பது, சுமார் 2.5 லட்சம் பணியாளர்கள் உள்ளிட்ட 10 லட்சம் பயனாளிகளின் தேவைகளைப் பூர்த்தி செய்யவும், 12,000 முதல் 15,000 தொழில் நிறுவனங்களுக்கு உரிய சேவைகளை வழங்கவும் அவசியமாகும் என்றும் குறிப்பிட்டேன்.

மேலும், டெல்டா பகுதியில் (அரியலூர், நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை, பெரம்பலூர்) புதிய கிளை அலுவலகங்கள் அனுமதிக்கப்பட்ட போதிலும், அவை செயல்படுத்தப்படவில்லை. இம்மாவட்டங்கள் திருச்சி மண்டலத் துணை அலுவலகத்தின் கீழ் வருவதால், திருச்சியில் மண்டலத் துணை அலுவலகம் அமைப்பது மிகவும் அவசியம் என்பதை வலியுறுத்தினேன்.

அதன்பின், 07.08.2025 அன்று, புதுடெல்லியில் உள்ள பன்ச்தீப் பவனில் அமைந்துள்ள பணியாளர்களின் மாநில காப்பீட்டுக் கழகத்தின் (Employees’ State Insurance Corporation – ESIC) இயக்குநர் (பொது) திரு. அசோக் குமார் சிங் IAS அவர்களை அவரது அலுவலகத்தில் சந்தித்து இக்கோரிக்கையை எடுத்துரைத்தேன்.

அதன்பின், 19.08.2025 அன்று ம் மாண்புமிகு ஒன்றியத் தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்புத் துறை இணை அமைச்சர் திருமதி சுஸ்ரீ ஷோபா கரந்த்லஜே அவர்களை அவரது அலுவலகத்தில் சந்தித்து,

மேற்கண்ட கோரிக்கைக்கான கடிதத்தை வழங்கி, அதன் அவசியம் குறித்து எடுத்துரைத்தேன்.

அப்போது இதே கோரிக்கையை அமைச்சரிடமும், ESIC இயக்குநரிடமும் வழங்கியுள்ளதையும், இதன் அவசியம் கருதி தங்களை சந்தித்து கோரிக்கை வைப்பதாகவும் தெரிவித்தேன்.

அமைச்சர், இணை அமைச்சர் மற்றும் இயக்குநர் ஆகிய மூவரும், இக்கோரிக்கைகளைப் பரிசீலித்து, விரைவில் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக உறுதியளித்தார்.

அதன் அடிப்படையில் நேற்று (13.10.2025) இதற்கான அறிவிப்பை வெளியிட்டு விரைவில் சேலம் மண்டலத்திலிருந்து பிரித்து திருச்சி மண்டலத்திற்கு துணை அலுவலகம் அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளதை அறிந்து மகிழ்ந்தேன்.

இந்த நல்ல் நேரத்தில் அமைச்சர், இணை அமைச்சர், இயக்கு நர் மற்றும் துறை சார்ந்த அனைத்து அதிகாரிகளுக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் என்று கூறினார் துரை வைகோ அவர்கள்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய….

https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision

Read Entire Article