கருப்பட்டியில் சர்க்கரை கலந்து மோசடி செய்த ஐவருக்கு ரூ.38 கோடி அபராதம்

3 hours ago 6

116899b2-e686-4161-bf03-411fe17910e9

கருப்பட்டியில் சர்க்கரையைக் கலந்து போலிக் கருப்பட்டி தயாரித்து, கடந்த ஆறு ஆண்டுகளாகப் பல கோடி ரூபாய் ஜிஎஸ்டி வரி ஏய்ப்பில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. - படம்: டிவி9தமிழ்நியூஸ்

தூத்துக்குடி: கருப்பட்டியில் சக்கரையைக் கலந்து விற்பனை செய்து, வரி ஏய்ப்பில் ஈடுபட்ட உடன்குடியைச் சேர்ந்த ஐந்து வணிகர்களுக்கு 38 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆறு ஆண்டுகளாக அவர்கள் அந்த மோசடியில் ஈடுபட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

உடன்குடி பகுதியில் தமிழ்நாட்டிலேயே அதிகளவில் சர்க்கரை மூட்டைகளை வணிகர்கள் கொள்முதல் செய்வதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில் அதிகாரிகள் அங்கு சோதனை நடத்தினர்.

கடந்த சில வாரங்களில் மட்டும் ரூ.5 கோடி மதிப்பிலான சர்க்கரை மூட்டைகளை அப்பகுதி வணிகர்கள் கொள்முதல் செய்ததும் பதநீரில் 60 முதல் 70 விழுக்காடுவரை சர்க்கரையைக் கலந்து கருப்பட்டி தயாரித்து, அதனை அசல் கருப்பட்டி என்று கூறி கடந்த ஆறு ஆண்டுகளாக விற்பனை செய்ததும் தெரியவந்தது.

சர்க்கரை கலந்து தயாரிக்கப்பட்ட கருப்பட்டிக்கு 18 விழுக்காடு ஜிஎஸ்டி செலுத்தாமல், 5 விழுக்காடு பொருள், சேவை வரி (ஜிஎஸ்டி) மட்டுமே செலுத்தி இதுவரை ரூ.6 கோடி ரூபாய் வரை வரி ஏய்ப்பில் வணிகர்கள் ஈடுபட்டது கண்டறியப்பட்டது.

பனை மரங்கள் அதிகளவில் உள்ள தமிழ்நாட்டில் தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி பகுதியில் தயாரிக்கப்படும் கருப்பட்டிக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. பனை மரத்தில் இருந்து கிடைக்கப்பெறும் பதநீரைக் காய்ச்சி கருப்பட்டி தயாரிக்கப்படுகிறது.

அங்கு பனைத்தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களை ஊக்குவிக்கும் வகையில், 2017ஆம் ஆண்டு பதநீரிலிருந்து தயாரிக்கப்பட்டு நேரடியாக விற்பனை செய்யப்படும் அசல் கருப்பட்டி, கற்கண்டு ஆகியவற்றிற்கு மத்திய அரசு ஜிஎஸ்டி வரிவிலக்கு அளித்தது. எனினும், அவற்றை வணீக ரீதியாக கடைகளில் விற்பனை செய்யும்போது 5 விழுக்காடு ஜிஎஸ்டி விதிக்கப்பட்டு வந்தது.

பதநீரில் 75 விழுக்காட்டுக்கும் அதிகமாகச் சர்க்கரை கலந்து தயாரிக்கப்படும் கருப்பட்டி, கற்கண்டு போன்றவற்றுக்கு 18 விழுக்காடு ஜிஎஸ்டி வரி விதிக்கப்படும்.

Read Entire Article