குவந்தான் அனைத்துலக விமான நிலையத்தின் கற்பனை ஓவியம். - சித்திரிப்பு: ஸ்கைஸ்கிரேப்பர் சிட்டி
குவாந்தான்: குவாந்தான் அனைத்துலக விமான நிலையக் கட்டுமானப் பணிகள் 2031ஆம் ஆண்டில் தயார்நிலையில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாகப் பாகாங் மாநில முதலீட்டுக் குழுத் தலைவர் நிஸார் நஜிப் தெரிவித்துள்ளார்.
விமான நிலையக் கட்டமைப்பு, உத்திபூர்வ முதலீட்டாளர்களின் பங்களிப்பு போன்றவை தொடர்பிலான அம்சங்களை இறுதிசெய்யும் கட்டத்தில் இத்திட்டம் இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
கட்டுமானப் பணிகள், மத்திய அமைச்சின் அமைப்புகள் விதித்துள்ள செயல்பாடுகள் ரீதியான விதிமுறைகளைப் பின்பற்றவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மலேசிய சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம், போக்குவரத்து அமைச்சு உள்ளிட்ட அமைப்புகள் அந்த அமைப்புகளில் அடங்கும். குறிப்பாக பாதுகாப்பு, அனைத்துலக விமானச் செயல்பாடுகள் தொடர்பிலான விதிமுறைகளுக்கு இது பொருந்தும்.
“உண்மையான ஆற்றலைப் பொறுத்தே பணிகள் கவனமாகத் திட்டமிடப்பட்டு வருகின்றன; தரநிலைகளுக்கு ஏற்றவாறு நடந்துகொள்ளுதல், முதலீடு செய்வது எவ்வளவு தூரம் சாத்தியமாகிறது, வெளிப்படையான ஆட்சி முறை ஆகியவற்றுக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது,” என்று திரு நிஸார் சட்டமன்றத்தில் விவரித்தார். சட்டமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு அவர் பதிலளித்தார்.
துறையிலிருந்து வரும் நிதியைக் கொண்டு குவாந்தான் விமான நிலையத் திட்டம் நிறைவேற்றப்படும் என்றும் அதற்கு மத்திய, மாநில அரசாங்க நிதி பயன்படுத்தப்படாது என்றும் அவர் தெரிவித்தார்.
.png)





English (US) ·