சென்னை, மே 12- சென்னை ரயில் நிலையங்களில் சூரிய மின் உற்பத்தியை அதிகரிக்கும் வகையில், சூரிய மின்தகடுகள் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
சோலார் பேனல்கள்
தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்டம், சூரிய சக்தியை அதிகமாகப் பயன்படுத்துவதன் மூலம் சுற்றுச்சூழலுக்கு நல்லது செய்யும் வகையில் செயல்பட்டு வருகிறது. இந்த ஆண்டு அதாவது 2025-2026ஆம் ஆண்டில், பரங்கிமலை ரயில் நிலையம், ஆவடியில் உள்ள ரயில்வே பயிற்சி மய்யம், அந்த பயிற்சி மய்யத்தில் உள்ள ஆண்கள் விடுதி மற்றும் கிண்டி ரயில் நிலையம் ஆகிய 4 இடங்களில் புதிதாக சூரிய மின்தகடுகள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த 4 இடங்களிலும் சேர்த்து மொத்தம் 140 கிலோவாட் மின்சாரம் தயாரிக்கும் திறன் கொண்ட சூரிய மின்தகடுகள் நிறுவப்பட்டுள்ளன.
இதன் மூலம் ஆண்டுக்கு சுமார் 2,04,400 யூனிட் மின்சாரம் இலவசமாகக் கிடைக்கும். இதனால் ஆண்டுக்கு சுமார் 19 லட்சத்து 21 ஆயிரம் ரூபாய் மிச்சமாகும்.
இப்போது சென்னை கோட்டம் முழுவதும் உள்ள சூரிய மின்தகடுகளின் மொத்த மின் உற்பத்தி திறன் 2494.5 கிலோவாட்டை எட்டியுள்ளது. இந்த ஆண்டு மட்டும் சுமார் 2 கோடியே 31 லட்சத்து 5 ஆயிரத்து 954 யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இதனால் 1 கோடியே 43 லட்சம் ரூபாய் சேமிப்பு கிடைத்துள்ளது. ரயில் நிலையங்கள், அலுவலக கட்டடங்கள், பணிமனைகள், ஊழியர்கள் தங்கும் விடுதிகள், நடைமேடை மேற்கூரைகள் மற்றும் பயிற்சி மய்யங்கள் என பல்வேறு இடங்களில் இந்த சூரிய மின்தகடுகள் பொருத்தப்பட்டுள்ளன.
சென்னை சென்ட்ரல், மூர் மார்க்கெட், தாம்பரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், காட்பாடி, அரக்கோணம், திருவள்ளூர் உள்பட 20க்கும் மேற்பட்ட முக்கியமான இடங்களில் இந்த வசதி உள்ளது. மேலும், சென்னை ரயில்வே மேலாளர் அலுவலகம், மூர்மார்க்கெட் மற்றும் லைட்ஹவுஸ் ரயில் நிலையம் ஆகிய இடங்களில் காற்றாலைகளும் சூரிய மின்தகடுகளும் இணைந்த கலப்பு அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன. இதுவும் மின்சாரம் சேமிக்க உதவுகிறது. வரும் 2026-2027ஆம் ஆண்டில் 2600 கிலோவாட் சூரிய மின்சாரம் தயாரிக்க வேண்டும் என்று சென்னை கோட்டம் இலக்கு வைத்துள்ளது.
சூரிய சக்தியை அதிகமாகப் பயன்படுத்துவதன் மூலம் கார்பன் வாயு வெளியேற்றத்தைக் குறைக்கலாம், மின்சார செலவை மிச்சப்படுத்தலாம் மற்றும் வழக்கமான மின்சாரத்தை சார்ந்திருப்பதை குறைக்கலாம் என்ற நோக்கத்தில் சென்னை ரயில்வே கோட்டம் முழு மனதுடன் செயல்பட்டு வருகிறது. இது இந்திய ரயில்வேயின் பசுமை இந்தியா கனவை நனவாக்கும் முயற்சியின் ஒரு முக்கியமான பகுதியாக விளங்குகிறது.
.png)
14 hours ago
14





English (US) ·