Last Updated:Feb 16, 2026 3:54 PM IST
”நாளை டி.ஆர். பாலு மீது புதிதாக ஒரு அவதூறு வழக்கை தொடர இருக்கிறோம்" என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை வெளியிட்ட 'DMK ஃபைல்ஸ்' எனும் குற்றச்சாட்டுகளில், தனக்கு எதிராகப் பொய்யான கருத்துகள் தெரிவிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, அவர் மீது திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் அவதூறு வழக்குத் தொடர்ந்தார். இன்று இந்த வழக்கு விசாரணைக்காக டி.ஆர்.பாலு, அண்ணாமலை ஆகியோர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகினர். அப்போது, தனக்கு எதிராக அவதூறு வழக்கு தொடர்ந்த டி.ஆர்.பாலுவிடம் அண்ணாமலை தரப்பில் குறுக்கு விசாரணை நடத்தப்பட்டது.
வழக்கு விசாரணை முடிந்து வெளியேவந்த அண்ணாமலை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது; “என் மனைவியின் பெயரில் சொத்து வாங்கியிருப்பதாக புதிய அவதூறை அவர் சொல்லியுள்ளார். அப்போது, என் மனைவி எங்கே படித்தார், பணியாற்றுகிறாரா, எங்கு பணியாற்றுகிறார்? சொத்து வாங்கப்பட்டது எப்படி உள்ளிட்ட கேள்விகளை கேட்டேன். ஆனால் அதற்கு எந்தப் பதிலும் அவர் கூறவில்லை. எனவே நாளை டி.ஆர். பாலு மீது புதிதாக ஒரு அவதூறு வழக்கை தொடர இருக்கிறோம்.
கட்சி பொறுப்பாகவே நான் சென்னையில் குடியேறினேன். கட்சி சார்பாக என் நண்பர்கள் வழங்கிய பணத்தை நான் வாடகைக்காக கொடுத்தேன். இது எல்லாவற்றையும் நான் அவர் கூறிய அவதூறு வழக்கில் சுட்டிக்காட்ட போகிறேன்.
நான் வாங்கிய விவசாய நிலம் எப்படி வாங்கப்பட்டது என்பது பொது தளத்தில் உள்ளது. நேர்மையான அரசியல்வாதியாக இருக்க வேண்டும் என்று நினைக்கும் நான், கடினமான பாதையில் பயணித்து தான் ஆக வேண்டும்.
நடிகை திரிஷா குறித்து பாஜகவினுடைய அகில இந்திய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் கூறிய கருத்து கட்சியினுடைய கருத்தாக நான் பார்க்கிறேன். அவர் வருத்தம் தெரிவித்துள்ளார் அதற்கு மேல் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை.
.png)





English (US) ·