Last Updated:Mar 01, 2026 8:38 PM IST
தூத்துக்குடியில் சுமித்ரா தகாத உறவில் இருந்ததாகக் கருதி தம்பி முத்துராஜா அரிவாளால் கொலை செய்தது, வசந்த் உடன் தப்பியோடியது, போலீசார் இருவரையும் கைது செய்தனர்.

தூத்துக்குடியில் தகாத உறவில் இருந்த அக்காவை உடன்பிறந்த தம்பியே, அரிவாளால் வெட்டி துடிதுடிக்க கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம், செய்துங்கநல்லூர் ரயில்வே கேட் பகுதியைச் சேர்ந்தவர் ராஜா. இவரது மகள் சண்முகத்தாய் என்கிற சுமித்ரா. 35 வயதான இவர் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த ஒரு ஆண்டாக தனியாக வசித்து வந்தார். இந்த நிலையில் சுமித்ரா சில நபர்களுடன் தகாத உறவில் இருப்பதாக அவரது தம்பியான புளியங்குளத்தைச் சேர்ந்த முத்துராஜாவுக்கு தெரியவந்தது. இதுதொடர்பாக அவர் தனது அக்காவைக் கண்டித்துள்ளார். இதனால் அவர்களுக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
ஒருக்கட்டத்தில் குடும்பத்திற்குப் பெரும் அவமானம் ஏற்படுவதாகக் கருதிய முத்துராஜா, தனது அக்காவைக் கொலை செய்யத் திட்டமிட்டுள்ளார். அதன்படி சம்பவத்தன்று இரவு முத்துராஜா தனது நண்பரான வசந்துடன் பைக்கில் அக்கா சுமித்ராவின் வீட்டிற்குச் சென்றுள்ளார். வீட்டின் வாசலில் வசந்த் காவலுக்கு நிற்க, உள்ளே சென்ற முத்துராஜா சுமித்ராவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரமடைந்தவர் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் அக்காவை சரமாரியாக வெட்டி உள்ளார்.
இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த சுமித்ரா, சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். பின்னர் முத்துராஜாவும், வசந்தும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த செய்துங்கநல்லூர் காவல்நிலைய போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சுமித்ராவின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தலைமறைவாக இருந்த முத்துராஜா மற்றும் வசந்த் ஆகிய 2 பேரையும் சில மணி நேரங்களிலேயே மடக்கிப் பிடித்துக் கைது செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். தூத்துக்குடியில் தகாத உறவில் இருந்த அக்காவை உடன்பிறந்த தம்பியே, அரிவாளால் வெட்டி துடிதுடிக்க கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
.png)








English (US) ·