Last Updated:May 12, 2026 9:21 AM IST
ADMK EPS | "தொடர் தோல்விகளை சந்தித்து வரும் அதிமுகவுக்கு புத்துயிர் கொடுக்க வேண்டிய கட்டாயம் உள்ளது" என்று அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் தெரிவித்துள்ளார்.

"தொடர் தோல்விகளை சந்தித்து வரும் அதிமுகவுக்கு புத்துயிர் கொடுக்க வேண்டிய கட்டாயம் உள்ளது" என்று அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் தெரிவித்துள்ளார்.
அதிமுக மீண்டும் இரண்டாக பிளவுபட்டுள்ளதாக கூறப்பட்டு வரும் நிலையில் முன்னாள் அமைச்சர்கள் சி.வி. சண்முகம், எஸ்பி வேலுமணி உள்ளிட்டோர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய சி.வி. சண்முகம், "நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி தோல்வி அடைந்திருக்கிறது. அதனை முழுமையாக ஒத்துக்கொள்கிறோம். இந்தக் கூட்டணி தோல்வி அடைந்திருக்கிறது. இன்றைக்கு அதிமுக என்ன செய்யப்போகிறது. இந்த இயக்கம் காப்பாற்றப்பட வேண்டும், நிலைநிறுத்தப்பட வேண்டும். எம்ஜிஆர், ஜெயலலிதா ஆட்சி மீண்டும் வேண்டும் என்ற நோக்கத்தில் அதிமுக எம்எல்ஏக்கள், நிர்வாகிகள் உள்ளனர். நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தவெக மற்றும் விஜய் ஆட்சிக்கு வாக்களித்துள்ளனர். இந்த மக்கள் தீர்ப்பை அதிமுக தலைவணங்கி ஏற்றுக்கொள்கிறது.
இந்த நிலையில் அதிமுக கலந்தாலோசிக்கையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சில யோசனைகளை முன்வைத்தார். இந்த இயக்கம் தோற்றுவிக்கப்பட்டது திமுகவை எதிர்த்துதான். எந்த திமுகவை எதிர்த்தோமோ அந்த திமுக ஆதரவோடு என்னை முதல்வராக தேர்ந்தெடுக்க ஒப்புக்கொண்டார்கள் என ஆலோசனையில் எடப்பாடி பழனிசாமி முன்மொழிந்தார். அதனை நாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. இன்னும் சொல்லப்போனால் நாங்கள் பேரதிர்ச்சிக்கு உள்ளானோம். திமுகவோடு இணைந்தால் அதிமுக இல்லாமல் போய்விடும், இது தவறு என்றோம். அதனை இபிஎஸ் ஏற்றுக்கொள்ள மறுத்தார்.
அதனால் பெரும்பான்மையான அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம். அதன்படி தேர்தலுக்கு முந்தைய கூட்டணி இப்போது இல்லை. மக்கள் தீர்ப்பை ஏற்று இன்று வெற்றிபெற்று முதலமைச்சராக உள்ள விஜய்யின் தவெக ஆட்சியை ஆதரிப்பது என்று முடிவெடுக்கப்பட்டது. அதன்படி, அதிமுக சட்டமன்ற குழுவின் தலைவராக எஸ்பி வேலுமணி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். கொறடாவாக விஜயபாஸ்கர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
அதிமுக தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறது. இதற்கு அவர் இவர் காரணம் என குறைகூற விரும்பவில்லை. தொடர் தோல்விகளை சந்தித்து வரும் அதிமுகவுக்கு புத்துயிர் கொடுக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. தோல்விக்கான காரணத்தை ஆராய வேண்டியுள்ளது. மேலும் அனைவரின் எதிர்காலத்தையும் கருத்தில் விரைவில் பொதுக்குழுவை கூட்ட வேண்டும் என பொதுச் செயலாளரிடம் கூறியுள்ளோம். கட்சியை மேம்படுத்த இபிஎஸ் விரைவில் அதிமுக பொதுக்குழுவை கூட்டுவார் என நம்புகிறோம்" என்று பேசினார்.
முன்னதாக, தமிழக சட்டப்பேரவை தேர்தலில் 47 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்று 3வது இடத்திற்கு அதிமுக தள்ளப்பட்டதால் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது சீனியர் நிர்வாகிகள் கடும் அதிருப்திக்குள்ளானதாக தகவல் பரவியது. இதன் காரணமாக எஸ்பி வேலுமணி, சிவி சண்முகம் தலைமையில் ஓர் அணியும், ஈபிஎஸ் தலைமையில் மற்றொரு அணியும் பிரிந்து மாறி மாறி பேச்சுவார்த்தை நடத்தின.
இதில், சிவி சண்முகம், எஸ்பி வேலுமணி தரப்பு தவெக ஆதரவு நிலைப்பாடு கொண்டிருந்ததாகவும், ஈபிஎஸ் தரப்போ அதற்கு ஒரு படி மேல் சென்று திமுக ஆதரவுடன் ஆட்சி அமைக்க திட்டமிட்டதாகவும் தகவல் பரவியது. ஆனால் இந்த தகவல்களை அதிமுக தலைவர்கள் தொடர்ந்து மறுத்து வந்தனர்.
இந்நிலையில், 17வது சட்டப்பேரவை கூட்டத் தொடர் நேற்று தொடங்கியது. இதில் ஈபிஎஸ் தலைமையில் ஒரு பிரிவும், எஸ்பி வேலுமணி தலைமையின் கீழ் மற்றொரு பிரிவுமாக அதிமுக எம்எல்ஏக்கள் சட்டமன்றத்திற்கு வந்தனர். அதிமுக சட்டமன்றக் குழு தலைவராக எடப்பாடி பழனிசாமியை ஆதரித்து ஓஎஸ் மணியன், மரகதம் குமரவேல், அக்ரி கிருஷ்ணமூர்த்தி, தளவாய் சுந்தரம், கேசி கருப்பணன் உள்பட 23 எம்.எல்.ஏக்கள் கொண்ட தற்காலிக சபாநாயகர் கருப்பையாவிடம் கடிதம் வழங்கினர்.
அதைத் தொடர்ந்து, சி.வி.சண்முகம் தலைமையில் தலைமை செயலகம் வந்த 24 எம்.எல்.ஏக்கள், சட்டமன்ற குழு தலைவராக எஸ்பி வேலுமணியும், கொறடாவாக சி விஜயபாஸ்கரையும் ஆதரித்து தற்காலிக சபாநாயகர் கருப்பையாவிடம் ஆதரவு கடிதங்களை வழங்கினர். இதன் மூலம் அதிமுக உடைந்ததாக அரசல் புரசலாக பரவிய தகவல் உறுதியானது. அதிமுகவில் பிளவு குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு லால்குடி எம்எல்ஏ லீமா ரோஸ் பதிலளிக்க மறுத்துவிட்டார். அதேநேரம் அதிமுகவில் எந்த குழப்பமும் இல்லை என மாநிலங்களவை எம்பி தனபால் தெரிவித்தார். மேலும் எடப்பாடி பழனிசாமி தான் பொதுச்செயலாளர் என்றும் அவர் உறுதிபட கூறினார்.
Location :
Chennai [Madras],Chennai,Tamil Nadu
"திமுக ஆதரவோடு ஈபிஎஸ் முதல்வராக முயற்சித்தார்... பேரதிர்ச்சி" - சி.வி. சண்முகம் பகிர்ந்த சம்பவம்! | ADMK
.png)





English (US) ·