திமுக கூட்டணி: சோனியா மௌனம்... ராகுல் அமைதி... பிரியங்கா நிலைப்பாடு? - டெல்லியில் நடப்பது என்ன?

1 hour ago 14

கசப்பான நேரங்களில் தி.மு.க -வின் டெல்லி முகமாக இருப்பவர்கள், காங்கிரஸ் தலைமையை பேசி சரி கட்டுவார்கள்.. அப்படி தி.மு.க வின் டெல்லி முகமாக இருந்த டி.ஆர் பாலுவின் லாபியை ஒருகட்டத்தில் ராகுல் ரசிக்கவில்லை.

Published:Just NowUpdated:Just Now

காங்கிரஸ் - திமுக

காங்கிரஸ் - திமுக

காங்கிரஸ் தலைமையின் கனத்த மௌனம்

தமிழக காங்கிரஸ் கட்சியின் புதிய மாவட்ட தலைவர்கள் மற்றும் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் இன்று டெல்லியில் ராகுலை சந்தித்து பேச உள்ளார்கள். குறிப்பாக தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி எந்த கூட்டணியில் இருக்கும்? என்கிற கேள்விக்கான முடிவு இன்று டெல்லியில் தெரிந்துவிடும் என்கிறார்கள் தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள்.

அதே நேரம் டெல்லி காங்கிரஸ் தலைமையின் கனத்த மௌனமே இந்த கூட்டணி குழப்பத்திற்கு காரணம் என்கிற குற்றச்சாட்டும் உள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு என்ன? டெல்லி காங்கிரஸ் தலைமை என்னதான் நினைக்கிறது? என்கிற விசாரணையில் இறங்கினோம். இதுகுறித்து நம்மிடம் விரிவாக பேசினார் மூத்த காங்கிரஸ் நிர்வாகி ஒருவர் .

ஸ்டாலின், ராகுல் காந்தி

ஸ்டாலின், ராகுல் காந்தி

சோனியாவின் நம்பிக்கைக்குரிய நண்பர்

“காங்கிரஸ்- தி.மு.க இடையிலான கூட்டணி என்பது 2004-ம் ஆண்டு முதல் இப்போது வரை நீடித்து வருகிறது. அதில் 2014-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் மட்டும் காங்கிரஸ் கட்சி தனித்து நின்றது. அந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி அடைந்த தோல்வியும், அகில இந்திய அளவில் பா.ஜ.க வின் எழுச்சியும் காங்கிரஸ் கட்சியை மீண்டும் தி.மு.க பக்கம் கொண்டு வந்தது.

கருணாநிதி உயிரோடு இருந்த வரை சோனியாவின் நம்பிக்கைக்குரிய நண்பராகவே இருந்தார். அதனால் கூட்டணி முதல் சீட் சேரிங் வரை அனைத்தும் இரண்டு தலைவர்களும் பேசி முடிக்க கூடிய விஷயமாக இருந்தது.

இதனால் கூட்டணியில் எந்த சிக்கலும் எழாமல் இருந்தது. இன்னும் ஒரு படி மேலே சொல்ல வேண்டும் என்றால், 2ஜி வழக்கில் கனிமொழியை கைது செய்த போது கூட உடனடியாக காங்கிரஸ் கூட்டணியை விட்டு தி.மு.க வெளியே வரவில்லை. அதற்கு காரணம் கருணாநிதியின் சாணக்கிய தனம். இன்று காங்கிரஸ்- தி.மு.க இடையே கசப்பு உணர்வு மேலோங்க இரண்டு கட்சிகளின் தலைமைக்குள் சரியான புரிதல் இல்லாமல் போனது ஒரு காரணம்.

டி.ஆர் பாலுவின் லாபி

காங்கிரஸ் தலைமை பொறுப்பிலிருந்து சோனியா நகர்ந்த பிறகு, அந்த இடத்தை ராகுல் நிரப்பினார். அதே நேரம் தி.மு.க வின் தலைவர் பதவியை ஸ்டாலின் கையில் எடுத்தார்.

இந்த இருவருக்கும் ஆரம்பத்தில் இருந்த நெருக்கம் போக, போக கசக்க ஆரம்பித்தது. இதுபோன்ற கசப்பான நேரங்களில் தி.மு.க -வின் டெல்லி முகமாக இருப்பவர்கள், காங்கிரஸ் தலைமையை பேசி சரி கட்டுவார்கள்.. அப்படி தி.மு.க வின் டெல்லி முகமாக இருந்த டி.ஆர் பாலுவின் லாபியை ஒருகட்டத்தில் ராகுல் ரசிக்கவில்லை.

ராகுல் காந்தி, ஸ்டாலின்

ராகுல் காந்தி, ஸ்டாலின்

கசந்த தி.மு.க- காங்கிரஸ் உறவு

எனவே ஆளை மாற்ற வேண்டிய நெருக்கடி ஏற்பட்டது. மற்றொருபுறம் ராகுலுக்கு நெருக்கமான தமிழக காங்கிரஸ் தலைகள் தி.மு.க-வுக்கு எதிரான மன நிலையில் இருந்தார்கள். அவர்கள் தி.மு.க-வுக்கு எதிரான கருத்துக்களை ராகுலிடம் சொல்லி வந்தனர்.

இதன் நீட்சியே தி.மு.க- காங்கிரஸ் உறவு கசப்பாக மாற காரணமானது. ஒரு கட்டத்தில் தி.மு.க தலைமை மூலம் ராகுலை தொடர்பு கொள்ள முடியாத நிலைகூட உருவானது. இதை தொடர்ந்தே காங்கிரஸ் கட்சியை தன்வயப்படுத்த முதல்வர் முடிவெடுத்தார்.

பிகார் தேர்தலின் போது ராகுலுடன் இணைந்து பிரசாரம் மேற்கொள்ள பாட்னாவிற்கே சென்றார். அந்த சம்பவத்திற்கு பிறகும் ராகுலின் தி.மு.க மீதான பார்வை மாறவில்லை. இதற்கு தகுந்தாற்போல த.வெ.க தரப்பிலிருந்து காங்கிரஸ் கட்சிக்கு தூண்டில் போட ராகுலின் மனதினை கரைக்க ஆரம்பித்தனர் ஒரு சிலர்.

ராகுல் காந்தி,கனிமொழி

ராகுல் காந்தி,கனிமொழி

அதே நேரம் சோனியா மூலம் அடுத்த மூவ் எடுத்தது தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு சோனியாவை சந்தித்து பேசினார். அதனை தொடர்ந்து “தி.மு.க நமக்கு நம்பகமான கூட்டணி. அவர்களை விட்டு செல்ல வேண்டாம்” என்று ராகுலிடம் கூறியுள்ளார்.

இதனை தொடர்ந்து கனிமொழி ராகுல் சந்திப்பு நடந்தது. அப்போது சோனியாவின் கருத்தையும் முன் வைத்த ராகுல், கூட்டணியை விட்டு வெளியேறும் நிலை இல்லை. அதே நேரம் எங்கள் கோரிக்கையை நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். குழுவை முதலில் அமையுங்கள்” என்று சொல்லியுள்ளார்.

காங்கிரஸ் பக்கமிருந்து த.வெ.க ஆதரவு குரல்கள்

எல்லாம் சரியாகிவிடும் என்று தி.மு.க நினைத்து வந்த நிலையில் தான் மீண்டும் காங்கிரஸ் பக்கமிருந்து த.வெ.க ஆதரவு குரல்கள் எழுந்தது. தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை இந்த விவகாரத்தை அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் கார்கே கவனத்திற்கு கொண்டுசென்றவுடன், “கூட்டணி குறித்து இனி யாரும் எந்த கருத்தும் சொல்லக்கூடாது.

காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர்

காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர்

அதை தலைமை பார்த்துக்கொள்ளும்” என்று உத்தரவிட்டார். அதன்பிறகும் மாணிக்கம் தாகூர் உள்ளிட்ட சிலர் கருத்துக்களை தெரிவித்தனர். ராகுலின் பின்னணியிலேயே இந்த கருத்துகள் வெளியாவதால், கார்க்கேயும் என்ன செய்வது என்று புரியாமல் உள்ளார். மற்றொருபுறம் தி.மு.க-வுக்காக குரல் கொடுக்கும் சோனியாவும் உடல்நிலை காரணமாக மௌனமாக இருக்கிறார். ராகுல் தி.மு.க விசயத்தில் அமைதியாக இருக்கிறார்.

இப்போது த.வெ.க-வுடன் நெருக்கத்தை ஏற்படுத்த விரும்பும் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபாலும், அவருக்கு துணையாக பிரியங்கா காந்தியுமே தி.மு.க வுக்கு குடைச்சலாக மாறிவருகிறார்கள் ” என்று விவரிக்கிறார்கள் காங்கிரஸ் நிர்வாகிகள்.

முப்பது தொகுதி...

டெல்லியில் ராகுலை காங்கிரஸ் நிர்வாகிகள் சந்திப்பதற்கு முன்பே பாராளுமன்றத்தில் தி.மு.க எம்.பிக்களை சந்தித்துள்ளார் காங்கிரஸ் கமிட்டி தலைவர் கார்க்கே. அப்போது கூட்டணியில் எந்த சிக்கலும் இல்லை. நீங்கள் குழு அமைக்கும் வேலையை மட்டும் பாருங்கள்” என்று நம்பிக்கை கொடுத்துள்ளார்.

காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை

காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை

அதே நேரம் ராகுலை சந்திக்க உள்ள நிர்வாகிகள் முப்பது தொகுதிகளுக்கு குறைவாக நாம் தொகுதிகளை தி.மு.க-விடம் வாங்கிட கூடாது. அதே நேரம் தி.மு.க கூட்டணியையும் நாம் விடக்கூடாது” என்று சொல்ல உள்ளார்களாம். சோனியாவின் மௌனத்தில் ஆரம்பத்த இந்த குழப்பம் இப்போது ராகுலின் அமைதியால் அதிகரித்துள்ளது. கார்கேவின் முடிவும், பிரியங்காவின் திருப்தியுமே இந்த கூட்டணியை இறுதி செய்யும் என்கிறார்கள் காங்கிரஸ் தரப்பினர்.

Read Entire Article