“திமுக தோழமை இயக்க உறுப்பினர்கள் ஆதரவோடு அமைந்துள்ள அரசுக்கு வாழ்த்துகள்” - உதயநிதி

15 hours ago 14

திமுக தோழமை இயக்க சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவோடு அமைந்துள்ள அரசுக்கு வாழ்த்துகள் என எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

17 ஆவது சட்டப்பேரவை கூட்டத்தொடரின் இரண்டாம் நாளான இன்று சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர், துணை சபாநாயகர் ரவி சங்கர் போட்டியின்றி தேர்வாகினர். இதில், சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகரை, அவை முன்னவர் செங்கோட்டையன் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கையைப் பிடித்து அழைத்துச் சென்று இருக்கையில் அமர வைத்தனர்.

பேரவையில் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகரை வாழ்த்தி, எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:-

"பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார், தமிழ்நாட்டின் தலைமகன் பேரறிஞர் அண்ணா, நவீனத் தமிழ்நாட்டின் சிற்பி முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர், இந்தியாவுக்கே வழிகாட்டிய திராவிட மாடல் ஆட்சியைத் தந்த திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என எங்களுடைய தலைவர்களை எல்லாம் வணங்கி என்னுடைய இந்த உரையைத் தொடங்குகிறேன்.

முதலில் என்னை இரண்டாவது முறையாகத் தேர்ந்தெடுத்து இந்தச் சட்டமன்றத்திற்கு அனுப்பிய சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதி மக்களுக்கு என்னுடைய நன்றியை நான் இங்கே தெரிவித்துக் கொள்கிறேன்.

அதேபோல எங்கள் தலைவர் தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழகத்தின் கூட்டணிக்கு 1 கோடியே 54 லட்சத்து 82 ஆயிரத்து 782 வாக்குகளைத் தந்த தமிழ்நாட்டு மக்களுக்கு என்னுடைய நன்றியை நான் தெரிவித்துக் கொள்கிறேன்.

அதேபோல் எங்களுடைய கூட்டணி சட்டமன்ற உறுப்பினர்களின் வெற்றிக்காக உழைத்த திராவிட முன்னேற்றக் கழகத்தின் அனைத்து நிர்வாகிகளுக்கும், முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞரின் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகளுக்கும், தோழமை இயக்கத் தலைவர்களுக்கும், தொண்டர்களுக்கும் என்னுடைய நன்றியை நான் தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்த அவையில் என் கூட நின்று எனக்கு வழிகாட்டக்கூடிய எதிர்க்கட்சித் துணைத் தலைவர் அண்ணன் கே.என்.நேருவுக்கும், எங்களுடைய கொறடா அண்ணன் வேலுவுக்கும், துணை கொறடா அண்ணன் கோவி.செழியன், செயலாளர் அண்ணன் தங்கம் தென்னரசு, பொருளாளர் அண்ணன் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆகியோருக்கும், கழக சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

சட்டமன்றத்தில் நேற்று நாம் அத்தனை பேரும் பதவிப் பிரமாணம் செய்துகொண்டோம். அதன் பின்பு இன்று முதல் நடவடிக்கையாகப் பேரவைத் தலைவரை இன்றைக்குத் தேர்ந்தெடுத்திருக்கிறோம். வரலாற்றுச் சிறப்புமிக்க இந்தச் சட்டப் பேரவையில் மாண்புமிகு பேரவைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கக்கூடிய உங்களுக்கும், துணைத் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டிருக்கக்கூடிய ரவிசங்கருக்கும் எங்கள் தலைவர் சார்பாகவும், கழக சட்டமன்ற உறுப்பினர்கள் சார்பாகவும் மீண்டும் என்னுடைய வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

பேரவைத் தலைவரே! இங்கே ஏற்கனவே எல்லோரும் குறிப்பிட்டதைப் போல நீங்கள் எப்பொழுதுமே சிரித்த முகத்திற்குச் சொந்தக்காரர் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அதுமட்டுமல்ல எல்லோரிடமும் மிகுந்த அன்போடு பழகக்கூடியவர் என்று பலர் சொல்லி நான் கேள்விப்பட்டிருக்கிறேன்.

இதே சட்டப் பேரவையில் 1980-ம் ஆண்டுத் தேர்தலிலும் 2011 சட்டமன்றத் தேர்தலிலும் நீங்கள் வெற்றி பெற்று ஒரு சிறந்த சட்டமன்ற உறுப்பினராகப் பணியாற்றி இருக்கிறீர்கள். எனவே பேரவையின் மரபுகளும் விதிகளும் உங்களுக்குப் புதியது கிடையாது.

நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட மூன்று முறையும் ஆளுங்கட்சி உறுப்பினராகச் சட்டமன்றத்திற்குள் வந்திருக்கிறீர்கள். இந்த முறை எதிர்க்கட்சிகளையும் அரவணைத்துச் செயல்படுகின்ற ஒரு பேரவைத் தலைவராக நீங்கள் பொறுப்பேற்று இருக்கிறீர்கள். அந்தப் பொறுப்பில் மிகச் சிறப்பாக நடுநிலைமையோடு செயல்படுவீர்கள் என்பதுதான் எங்கள் அத்தனை பேருடைய எதிர்பார்ப்பு.

அதேபோல ஒரு எளிய பின்னணியில் இருந்து வந்து முதன்முறையாகச் சட்டமன்ற உறுப்பினராகப் பொறுப்பேற்று இருக்கக்கூடிய, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கக்கூடிய ரவிசங்கர் பேரவையின் துணைத் தலைவராக உங்களுக்கு உறுதுணையாக இருந்து இந்த அவையை வழிநடத்துவார் என்று நாங்கள் அத்தனை பேரும் நம்புகிறோம்.

அரசியல் நாகரிகம் இந்தப் பேரவையிலும் தொடர வேண்டும்

பேரவைத் தலைவரே நம்முடைய முதலமைச்சர் நேற்று எங்களுடைய தலைவருடைய வீடுகளுக்கும் அனைத்துக் கட்சித் தலைவர்களின் வீடுகளுக்கும் சென்று வாழ்த்துகள் பெற்றுக்கொண்டு சென்றார். அந்த அரசியல் நாகரிகம் இந்தப் பேரவையிலும் தொடர வேண்டும் என்பதுதான் எங்களின் எண்ணம், எதிர்பார்ப்பு.

ஏற்கனவே நான் சொல்லி இருந்தாலும் மறுபடியும் சொல்ல விரும்புகிறேன். திராவிட முன்னேற்றக் கழகம் இந்தச் சட்டப் பேரவையில் எதிரி கட்சியாக இல்லாமல் ஒரு ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாக நிச்சயம் செயல்படும். எங்கள் தலைவர் அவர்கள் சொன்ன மாதிரி திராவிட முன்னேற்றக் கழகம் என்றைக்குமே ஒரு ஆக்க சக்திதான்.

பேரவைத் தலைவரே! இந்தப் பேரவைக்கென்று ஒரு மிகப்பெரிய வரலாறு இருக்கிறது. இன்றைக்கு இந்தியாவில் பண்பாட்டு ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் தமிழ்நாடு சிறப்பாக முன்னேறி இருக்கிறது என்றால் இந்தப் பேரவையில் நடந்த விவாதங்கள், எடுக்கப்பட்ட முடிவுகள், இயற்றப்பட்ட சட்டங்கள், நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் இவையெல்லாம்தான் காரணம்.

பிற மாநிலங்களுக்கெல்லாம் ஒரு எடுத்துக்காட்டாக, வழிகாட்டக்கூடிய வகையில் செயல்பட்டு இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்த சட்டமன்றப் பேரவை இந்தத் தமிழ்நாட்டு சட்டமன்றப் பேரவை. அப்படிப்பட்ட இந்தப் பேரவையில் ஆரோக்கியமான ஆக்கப்பூர்வமான விவாதங்களுக்கு இடம் கொடுத்து ஜனநாயக மாண்புகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து பேரவைத் தலைவர் அவர்கள் என்றைக்கும் நடுநிலைமையோடு செயல்பட வேண்டும் என்று நாங்கள் அனைவரும் விரும்புகிறோம்.

நாம் இங்கே ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என்று எதிரெதிர் வரிசையில் உட்கார்ந்து இருந்தாலும் தமிழ்நாட்டின் வளர்ச்சி என்று வரும் பொழுது நாம் அனைவரும் ஒரே வரிசையில் முன் வரிசையில் நின்று உழைக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.அதைத்தான் தமிழ்நாட்டு மக்களும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள், விரும்புகிறார்கள். திராவிட முன்னேற்றக் கழகமும் அதைத்தான் விரும்புகிறது.

எங்களுடைய தலைவர் கடந்த ஐந்து ஆண்டுகளில் அடிக்கடி சொல்கின்ற ஒரு வார்த்தை, "இது எனது அரசு அல்ல நமது அரசு" என்று எங்களுடைய தலைவர் அடிக்கடி சொல்வார். அதை நிரூபித்தும் காட்டியிருக்கிறார். சென்ற திராவிட மாடல் அரசு என்பது வாக்களித்த மக்களுக்கு மட்டும் இல்லாமல் வாக்களிக்காத மக்களுக்குமான அரசாகத்தான் செயல்பட்டு வந்தது. ஆகவே இந்தப் புதிய அரசும் அனைவருக்குமான அரசாக, உங்களுக்கு வாக்களிக்காத மக்களுக்குமான அரசாகச் செயல்பட வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.

நானும் முதல்வரும் ஒரே கல்லூரியில் படித்த மாணவர்கள்

இந்த நேரத்தில் இன்னொரு விஷயத்தையும் இங்கே நினைவுபடுத்த விரும்புகிறேன். பேரவைத் தலைவரும் முதலமைச்சரும் இன்றைக்கு எதிர்க்கட்சித் தலைவராக இருக்கின்ற நானும் ஒரே கல்லூரியில் படித்த பழைய மாணவர்கள். ஒரே கல்லூரியில் நாம் படித்திருந்தாலும் அரசாங்கத்தை நடத்துவதில் தி.மு.க தான் சீனியர் பேட்ச், அது உங்களுக்குத் தெரியும். 1967-யே ஆட்சிக்கு வந்தது தி.மு.க. நாங்கள் தான் சீனியர்ஸ். அந்த அடிப்படையில் எங்களின் அறிவையும் அனுபவத்தையும் நாங்கள் பகிர்ந்துகொள்ளத் தயாராக இருக்கிறோம். அதை ஏற்றுக்கெள்ள நீங்களும் தயாராக இருங்கள். ஏனென்றால் நமக்கு எப்போதுமே தமிழ்நாட்டு மாநிலத்தின் நலன்தான் மிக மிக முக்கியம்.

பேரவைத் தலைவரே! நீங்கள் போட்டியின்றித் தேர்வாகி இருக்கிறீர்கள். முதலமைச்சரும் எதிர்க்கட்சித் தலைவரான நானும் அவை முன்னவரும் உங்களை இந்த இருக்கையில், அமர வைத்திருக்கிறோம். இன்றைக்கு உங்கள் கையைப் பிடித்து அழைத்துக்கொண்டு வந்து உட்கார வைத்திருக்கிறோம். இனி எங்கள் இரண்டு தரப்பையும் நீங்கள் தான் கையைப் பிடித்து அரவணைத்து கோபம் இல்லாமல், கோபப்படாமல் - நீங்கள் கோபப்பட மாட்டீர்கள் என்று தெரியும் - உங்களைக் கோபப்படுத்துகின்ற மாதிரி எந்தச் செயலையும் நாங்கள் செய்ய மாட்டோம். இரண்டு தரப்பையும் நீங்கள் வழிநடத்த வேண்டும்.

சட்டமன்ற ஜனநாயகத்தில் ஆளுங்கட்சி காதுகளாகவும் எதிர்க்கட்சி குரலாகவும் இருக்க வேண்டும். அதில் தான் இந்த அவையின் பெருமை நிச்சயம் அடங்கி இருக்கிறது. பொதுவாக இதற்கு முந்தைய சட்டமன்றப் பேரவையை எடுத்துக் கொண்டால் ஆளுங்கட்சி வரிசையில் அதிக உறுப்பினர்களும் எதிர்க்கட்சி வரிசையில் அதைவிடக் குறைவான உறுப்பினர்களும் இருப்பார்கள். ஆனால் இந்த முறை கிட்டத்தட்ட ஆளுங்கட்சிக்கு இணையான எதிர்க்கட்சி வரிசை வலிமையாக இன்றைக்கு அமைந்திருக்கிறது. அதுதான் இந்தப் பேரவையின் இன்னொரு கூடுதல் சிறப்பு.

இதன் மூலமாக தமிழ்நாட்டு மக்கள் ஒரு முக்கியமான செய்தியை நமக்குச் சொல்லியிருக்கிறார்கள். அது என்னவென்றால், எதிர்க்கட்சி வரிசை மிக மிக வலிமையாக இருந்து இந்த அரசை, புதிய அரசை வழிநடத்த வேண்டும், ஆக்கப்பூர்வமான விமர்சனங்களை முன்வைக்க வேண்டும் என்று மக்கள் நமக்குச் சொல்லியிருக்கிறார்கள் என்று நான் நம்புகிறேன். ஆகவே மக்களுடைய எண்ணத்தைப் பிரதிபலிக்கின்ற மாதிரி எங்களுடைய பணிகள் நிச்சயம் இருக்கும்.

மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்து

பேரவைத் தலைவரே! இந்த அரசு பொறுப்பேற்ற நிகழ்ச்சியில் நடந்த ஒரு நிகழ்வை இங்கே நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். ஏற்கனவே சுட்டிக்காட்டி இருக்கிறார்கள். அந்த நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்பட்டிருக்கிறது. இது தமிழ்நாட்டு மக்கள் மத்தியில் மிகப்பெரிய ஒரு கோபத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியிருக்கிறது.

அதை எதிர்க்கட்சிகள் எல்லோரும் விமர்சித்திருக்கிறோம். அதற்கு ஆளுங்கட்சியும் ஒரு விளக்கத்தைக் கொடுத்திருக்கிறார்கள், நானும் பார்த்தேன். எங்களது கருத்து என்னவென்றால், பா.ஜ.க ஆட்சிக்கு வந்திருக்கக்கூடிய மேற்குவங்க மாநிலத்தில் பதவி ஏற்பு நிகழ்ச்சியின் போது ‘வந்தே மாதரம்’ பாடல் பாடப்படவில்லை. ஆனால் இங்கே தமிழ்நாட்டில் அது பாடப்பட்டிருக்கிறது.

மேற்குவங்கத்தில் இன்றைக்கு யார் ஆளுநராகச் சென்று உட்கார்ந்து இருக்கிறார் என்று உங்கள் அத்தனை பேருக்கும் தெரியும். நான் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. அவர் இங்கே ஆளுநராக இருந்தபோது தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முன்பு தேசிய கீதம் பாட வேண்டும் என்று பேரவையின் மரபையே மாற்றச் சொன்னவர்தான் இன்றைக்கு மேற்குவங்கத்தில் ஆளுநராக இருக்கிறார். அதை நாங்கள் உறுதியாக, எங்களது தலைவர், அப்போதைய முதலமைச்சர் உறுதியாக மறுத்தார். அதனால் 2023-ம் ஆண்டு முதல் தொடர்ந்து மூன்று வருடம் அவர் பேரவையிலிருந்து வெளிநடப்பு செய்துவிட்டுச் சென்ற காட்சிகளை எல்லாம் நீங்களும் பார்த்திருப்பீர்கள்.

இதன் மூலமாக நாங்கள் சொல்ல வருவது, அடுத்து விரைவிலேயே இந்தப் பேரவையில் ஆளுநர் உரை நிகழ்த்தவிருக்கிறார். ஆகவே ஏற்கனவே உங்கள் அரசின் பதவியேற்பு விழாவில் நடந்த அந்தச் சம்பவம், அந்தத் தவறு மீண்டும் இந்தப் பேரவையில் நடப்பதற்கு நீங்கள் அனுமதிக்கக்கூடாது, நாங்களும் அனுமதிக்க மாட்டோம்.

பேரவையில் மட்டுமல்ல, தமிழ்நாட்டில் நடக்கக்கூடிய எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் சரி, அரசு நிகழ்ச்சியாக இருந்தாலும் சரி, எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் சரி, தமிழ்த்தாய் வாழ்த்து என்றைக்கும் இரண்டாவது இடத்திற்கு நாம் தள்ளிப்போக விடக்கூடாது. இந்த அரசு அதற்கு அனுமதிக்கக்கூடாது என்று நான் இங்கே கேட்டுக்கொள்கின்றேன். மிகவும் விழிப்போடு இருந்து நம்முடைய உரிமையை, மரபைப் பாதுகாக்க வேண்டும் என்று உங்களை எல்லாம் வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Read Entire Article