மூன்றரை மணி நேரம் நீடித்த கோளாறு, கட்டமைப்புப் பிரச்சினையால் ஏற்பட்டது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
ஜோகூர் பாரு: மலேசியாவின் சுல்தான் இஸ்கந்தர் சுங்கத்துறை (பிஎஸ்ஐ) வழியாகச் சிங்கப்பூருக்கு வேலைக்கு வருவோரில் பலர், புதன்கிழமை (பிப்ரவரி 25) நீண்ட வரிசைகளில் காத்திருக்க வேண்டியிருந்தது.
தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, சோதனைச் சாவடியில் பேருந்துகளுக்கான பகுதியில், அனைத்துத் தானியக்க நுழைவாயில்களும் செயலிழந்தன.
அதிகாலை 3 மணிக்குத் தொடங்கிய அந்தக் கோளாறு, மூன்றரை மணி நேரம் நீடித்தது. கட்டமைப்புப் பிரச்சினையால் கோளாறு ஏற்பட்டதால், குடிநுழைவு முறை மட்டுமல்லாமல், மற்ற அமைப்புகளும் பாதிக்கப்பட்டன.
குடிநுழைவுத் துறை உடனடியாகக் கூடுதல் ஊழியர்களைப் பணியில் அமர்த்தியது. கட்டமைப்புச் சரிசெய்யப்பட்டதும், நிலைமை மீண்டும் வழக்கநிலைக்குத் திரும்பியது.
சோதனைச் சாவடியில் கட்டமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டபோது அந்தக் கோளாறு ஏற்பட்டதாக உள்துறை அமைச்சின் அதிகாரி ஒருவர் கூறினார். அந்தப் பணிகள் மார்ச் மாத நடுப்பகுதிவரை தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
“திட்டமிடப்பட்டிருந்த பராமரிப்புப் பணிகள் பற்றி அனைத்து அமைப்புகளிடமும் தெரிவிக்கப்பட்டது. இருப்பினும், அந்தப் பணிகள் கூட்டம் அதிகம் இல்லாத நேரத்தில் நள்ளிரவில் மேற்கொள்ளப்படவேண்டியிருந்தது. இருப்பினும், காலை 6.30 மணிவரை கோளாறு நீடித்ததால், ஏதோ நடந்திருக்கும்.
“அதிகாலை 4 மணிமுதல் காலை 7 மணிவரை உச்சநேரம். பத்தாயிரக்கணக்கானோர் வேலைக்காக சிங்கப்பூர் செல்வார்கள்,” என்று அதிகாரி கூறினார்.
இந்நிலையில், அத்தகைய பிரச்சினைகளைத் தவிர்க்க சோதனைச் சாவடியில் தகுந்த செயல்முறை பொருத்தப்படவேண்டும் என்று வேலைக்காகச் சிங்கப்பூருக்கு அன்றாடம் வரும் திரு ரொஸ்லி மாட் ஹசான், 42, கூறினார்.
.png)





English (US) ·