Last Updated:Feb 26, 2026 10:54 AM IST
நல்லகண்ணு ஐயாவின் இறுதிக்குரல் தாமிரபரணி பாதுகாப்பு, ஒரு அரசியல் கோரிக்கையாக அல்ல, அது ஒரு சமூக பொறுப்பாகும். அவரது கனவு நிறைவேறும்போது தான் அவருக்கு உண்மையான அஞ்சலி செலுத்தியதாகும்.

தமிழகத்தின் மூத்த அரசியல் தலைவரும், எளிமையின் அடையாளமுமான நல்லகண்ணு ஐயாவின் மறைவு ஒட்டுமொத்த தமிழகத்தையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 100 ஆண்டுகளை கடந்தும் மக்கள் நலனுக்காகவே வாழ்ந்த அந்த மகா மனிதருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், ஒரு முக்கிய கோரிக்கையை முன்வைக்கிறார் சமூக ஆர்வலர் முத்தாலங்குறிச்சி காமராசு. இது குறித்து அவர் கூறுகையில், "நல்லகண்ணு ஐயா வெறும் அரசியல் தலைவர் மட்டுமல்ல, அவர் ஒரு நல்ல மாமனிதர். அவரது சேவையைப் பாராட்டி தமிழக முதலமைச்சர், அரசு மருத்துவமனை ஒன்றிற்கு அவரது பெயரை சூட்டி கௌரவித்தார். தனது வாழ்நாள் முழுவதும் தாமிரபரணி ஆற்றின் பாதுகாப்பு மற்றும் தூய்மைக்காக போராடியவர் அவர்.
நல்லகண்ணு ஐயா உடல்நிலை சரியில்லாமல் இருந்தபோது, சென்னை வாழ் நெல்லை மக்கள் சங்கத்தின் தலைவர் சைமன், 'அயோத்தி' திரைப்பட இயக்குனர் மந்திரமூர்த்தி மற்றும் காமராசு செல்வம் ஆகியோர் அவரை சந்திக்க சென்றிருந்தனர். ஐயாவின் மருமகன் ஐயப்பன் அவர்களை அழைத்து சென்றார். அப்போது, தாமிரபரணி ஆறு தொடர்பாக நெல்லை எம்.பி. ராபர்ட் புரூஸ் நாடாளுமன்றத்தில் எழுப்பிய கேள்வி குறித்தும், அதற்கு மத்திய அரசு அளித்த பதில் குறித்தும் ஐயாவிடம் விவாதிக்கப்பட்டது.
"தமிழக அரசு ஒரு வரைவு திட்டத்தை (Draft Project) சமர்ப்பித்தால், தாமிரபரணி ஆற்றை பராமரிக்கவும் மேம்படுத்தவும் நிதி வழங்க தயாராக இருப்பதாக" மத்திய அரசு நாடாளுமன்றத்தில் எழுத்துப்பூர்வமாக தெரிவித்திருந்தது. நீதிமன்றத்திலும் இது தொடர்பான தகவல்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த தகவலை கேட்டவுடன், உடல்நலம் குன்றியிருந்த நிலையிலும் நல்லகண்ணு ஐயா மிகுந்த உற்சாகமடைந்தார். 1988-ம் ஆண்டு தாமிரபரணி ஆறு எப்படி ஓடியது என்ற புகைப்படத்தை காண்பித்து, ஆற்றின் பழைய நிலையை மீட்டெடுக்க வேண்டியதன் அவசியத்தை பற்றி ஆர்வமாக பேசினார்.
உடனடியாக இது குறித்து முதலமைச்சருக்கு கடிதம் எழுத ஐயா விரும்பினார். எந்த ஒரு செயலையும் கட்சி அலுவலகம் மூலமாகவே செய்யும் வழக்கம் கொண்ட அவர், தனது மருமகனை அழைத்து கட்சி அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்க சொன்னார். ஆனால், அந்த சமயம் விடுமுறை நாட்கள் என்பதாலும், கட்சி நிர்வாகிகள் வெளியூரில் இருந்ததாலும் கடிதம் அனுப்புவதில் தாமதம் ஏற்பட்டது. அதற்குள் ஐயாவின் உடல்நிலை மேலும் மோசமடைந்து, இன்று அவர் நம்மை விட்டு பிரிந்துவிட்டார்.
நல்லகண்ணு ஐயாவுக்கு மெரினாவிலோ அல்லது ஸ்ரீவைகுண்டத்திலோ நினைவு சின்னங்கள் எழுப்பப்படலாம். ஆனால், அவரது ஆன்மா சாந்தியடைய வேண்டுமானால், அவர் கடைசியாக விரும்பிய அந்த 'தாமிரபரணி வரைவு திட்டத்தை' தமிழக அரசு உடனடியாக மத்திய அரசிடம் சமர்ப்பிக்க வேண்டும். தாமிரபரணி ஆற்றை பாதுகாப்பதே நாம் அந்த மாமனிதருக்கு செய்யும் உண்மையான அஞ்சலியாக இருக்கும்" என தெரிவித்தார்.

நல்லகண்ணு ஐயாவின் கடைசி ஆசை: தாமிரபரணி பாதுகாப்பு திட்டத்திற்காக ஒலித்த இறுதிக்குரல் !
நல்லகண்ணு ஐயாவின் கடைசி ஆசை தாமிரபரணி பாதுகாப்பு திட்டம் அரசியல் கோரிக்கையாக அல்ல
அவரது கனவு நிறைவேறும்போது தான் நல்லகண்ணு ஐயாவுக்கு உண்மையான அஞ்சலி செலுத்தியதாகும்
தாமிரபரணி பாதுகாப்பு திட்டத்தை தமிழக அரசு உடனடியாக மத்திய அரசிடம் சமர்ப்பிக்க வேண்டும்
.png)







English (US) ·