வட இந்தியாவில் தொழிலாளர் வர்க்கத்தின் போர்க்குணமிக்க எழுச்சி சம்பா என்.எச்.பி.சி திட்டத்தில் வெடித்த தொழிலாளர் கிளர்ச்சி

13 hours ago 14

சம்பா, மே 12- இமாச்சலப் பிரதேசத் தின் பனிச்சிகரங் களுக்கு இடையே உழைக்கும் வர்க்கத்தின் உரிமைப் போர் முன்னெப்போதும் இல்லாத வகையில் தீவிரமடைந்துள்ளது. சம்பா மாவட்டத்தின் சுரங்கனி பகுதியில் அமைந்துள்ள என்.எச்.பி.சி (NHPC) பைரா சியுல் (Baira Siul) நீர்மின் திட்டத் தொழி லாளர்கள், நிர்வாகத்தின் தன்னிச்சையான மற்றும் தொழிலாளர் விரோதப் போக்கு களுக்கு எதிராகச் சமரசமற்ற போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர்.

வடஇந்தியத் தொழிலாளர் எழுச்சித் தொடரின் இந்தப் பகுதியில், பொதுத்துறை நிறுவனங்களில் நிலவும் பாதுகாப்பற்ற சூழலைத் தோலுரிக்கும் இந்தப் போராட்டத்தைப் பார்ப்போம்.

சிஅய்டியு அமைப்பின் கீழ் இயங்கும் ‘பைரா சியுல்’ திட்டத் தொழிலாளர் சங்கத்தினர், கடந்த பன்னிரண்டு நாட் களாகத் தொடர் மறியல் மற்றும் வாயிற் கூட்டங்களை நடத்தி வருகின்றனர்.

58 வயதான துனி சந்த் (Duni Chand) என்ற தொழிலாளியை, சட்டப்பூர்வமான ஓய்வு வயதான 60-க்கு முன்னதாகவே கட்டாயமாகப் பணி நீக்கம் செய்த நிர்வாகத்தின் நட வடிக்கையே இந்தப் பெரும் கிளர்ச்சிக்கு வித்திட்டுள்ளது.

தொடரும் அநீதியும் – விடாத போராட்டமும்

தனியார்மயமாக்கல் மற்றும் ஒப்பந்த முறையிலான சுரண்டல்களுக்கு எதிராக இமாச்சலப் பிரதேசம் முழுவதும் ஒரு மாபெரும் போராட்ட அலை வீசி வருகிறது.

சிம்லாவின் தூய்மைப் பணியா ளர்கள் முதல் ராம்பூர் பால் உற்பத்தி யாளர்கள் வரை அனைவரும் வீதியில் இறங்கியுள்ள நிலையில், என்.எச்.பி.சி தொழிலாளர்களின் இந்தப் போராட்டம் ஒரு முக்கிய மைல்கல்லாகப் பார்க்கப் படுகிறது.

60 வயது வரை பணியாற்றும் உரிமை இருந்தும், துனி சந்த்தை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே நீக்கியது அப்பட்டமான சட்ட மீறல் என்று சங்கம் குற்றம்சாட்டியுள்ளது.

பலமுறை பேச்சுவார்த்தைகள் நடத்தியும், காணொலி கலந்துரையாடல் மூலம் விவாதித்தும் நிர்வாகம் வெறும் வெற்று வாக்குறுதி களை மட்டுமே அளித்து வருவதாகத் தொழிலாளர்கள் சாடுகின்றனர்.

சுரங்கனியில் தொடங்கிய இந்தப் போராட்டம் தற்போது திஸ்ஸா (Tissa) பகுதியில் உள்ள அணைப் பகுதிக்கும் பரவியுள்ளது.

கடுமையான மழையையும் பொருட்படுத்தாமல் 150-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் நாள்தோறும் போராட்டக்கள த்தில் உறுதியாக நின்று வருகின்றனர். வர்க்க உணர்வும் – மே தின முழக்கமும் சிஅய்டியு சங்கத்தின் பொதுச்செயலாளர் குஷால் தாக்கூர் மற்றும் மாவட்டத் தலைவர்கள் சுதேஷ் தாக்கூர், நரேந்திர விருத் ஆகியோர் இந்தப் போராட்டத்தை முன்னின்று நடத்தி வருகின்றனர்.

“இது தனிப்பட்ட ஒருவருக்கான போராட்டம் அல்ல; இது ஒட்டுமொத்த தொழிலாளர் வர்க்கத்தின் கண்ணியம் மற்றும் வேலை பாதுகாப்பிற்கான போர்” என்று அவர்கள் முழங்குகின்றனர். கடந்த மே 1 அன்று பன்னாட்டு தொழிலாளர் நாளை இந்தப் போராட்டக்களத்தி லேயே கொண்டாடிய தொழிலாளர்கள், சிகாகோ தியாகிகளுக்கும், பைரா சியுல் திட்டக் கட்டுமானத்தின் போது உயிர்நீத்த 147 தொழிலாளர்களுக்கும் வீரவணக்கம் செலுத்தினர். சமேரா-II மற்றும் சமேரா-III திட்டத் தொழிலாளர்களும், அங்கன்வாடி ஊழியர்களும் இப்போராட்டத்திற்குத் தங்களின் ஒருமைப்பாட்டைத் தெரிவித்துள்ளனர்.

சிஅய்டியு எச்சரிக்கை

சிஅய்டியு மாநிலத் தலைவர் விஜேந்தர் மெஹ்ரா நிர்வாகத்திற்கு விடுத்துள்ள எச்சரிக்கையில், “பொதுத்துறை நிறுவனங்களிலேயே (வேலைக்கு எடுத்தல் மற்றும் நினைத்தபோது நீக்குதல்)  ‘Hire and Fire’ கொள்கையைப் புகுத்துவது ஆபத்தானது.

துனி சந்த்தை உடனடியாக மீண்டும் பணியில் அமர்த்தாவிட்டால், என்.எச்.பி.சி-யின் அனைத்துத் திட்டங்களையும் முடக்கும் வகையில் போராட்டங்கள் தீவிரப்படுத்தப்படும்” என்று தெரி வித்துள்ளார்.

அடுத்தகட்ட நடவடிக்கை நிர்வாகம் தொடர்ந்து மவுனம் காத்தால், சாலை மறியல் மற்றும் முழுமையான வேலைநிறுத்தம் உள்ளிட்ட தீவிரமான போராட்டங்களில் ஈடுபடத் தொழிலாளர்கள் தயாராகி வருகின்றனர். நிர்வாகத்தின் பிடிவாதத்தால் திட்டப் பணிகள் பாதிக்கப்பட்டால், அதற்கு என்.எச்.பி.சி நிர்வாகமே முழுப் பொறுப்பேற்க வேண்டும் என்று சங்கம் அறிவித்துள்ளது.

அதிகார வர்க்கத்தின் ஆணவத்தையும், சட்டவிரோதப் போக்குகளையும் எதிர்த்து சம்பா மலைப் பள்ளத்தாக்குகளில் ஒலிக்கும் தொழிலாளர்களின் முழக்கம், இமாச்சலத்தின் மற்ற தொழிலாளர்களுக்கும் ஒரு பெரும் நம்பிக்கையை அளித்துள்ளது.

Read Entire Article