ஜாதகம் பார்த்து அவர்களுக்கான பலனை நோட்டில் எழுதிக்கொடுத்து, இது நடக்கவில்லை என்றால் வந்து கேளுங்கள் என சவால் விடுவாராம்.
Published:Just NowUpdated:Just Now

தமிழக முதல்வரின் சிறப்பு அரசியல் செயலாளர் என்கிற பதவிக்கு த.வெ.க-வின் செய்தி தொடர்பாளரும், முதல்வர் விஜய் அவர்களின் ஆஸ்தான ஜோதிடருமான ரிக்கி ராதன் பண்டிட் வெற்றிவேல் நியமனம் செய்யப்படுவதாக தமிழக அரசின் முதன்மை செயலாளர் அறிவித்துள்ளார்.
இந்த நியமனம் பலருக்கு ஆச்சர்யத்தை கொடுத்திருக்கிறது. அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளவர்களுகே இதுவரை துறைகள் ஒதுக்கீடு நடக்கவில்லை, துறைக்கான அதிகாரிகள் நியமனமும் இன்னும் நடக்கவில்லை. ஆனால், இவ்வளவு முன்னுரிமை கொடுத்து எதற்காக இந்த நியமனம் நடந்தது என்கிற கேள்வி எல்லோரிடமும் எழுந்துள்ளது.
அதே நேரம் 'விஜய் முதல்வராக வருவார், அவருக்கான ஜாதக அமைப்பு பலமாக உள்ளது' கடந்த சில மாதங்களாக தொடர்ந்து சொல்லி வந்தவர் ராதன் பண்டிட். அதோடு, “விஜய் அவர்களுக்கு ஆன்மீக ரீதியான அனைத்து ஆலோசனைகளை கடந்த சில ஆண்டுகளாக சொல்லிவந்தவர் ராதன் பண்டிட். அவரின் ஆலோசனைபடியும் விஜய் ஒவ்வொரு மூவ்வையும் செய்துவந்தார். அது இப்போது ஒர்க் அவுட்டாகிவிட்டதால் அவருக்கு பிரதிபலனாக அரசு பதவி வழங்கியிருக்கிறார்” என்கிறார்கள் த.வெ.கவினர்.

ரிக்கி ராதன் பண்டிட் வெற்றிவேல்
சரி, அரசு பதவி வழங்கும் அளவுக்கு ராதன் பண்டிட் முக்கியதும் பெற்றது எப்படி? எங்கிருந்து இவரது பயணம் ஆரம்பித்தது என்கிற விசாரணையில் நாம் இறங்கினோம். பல சுவாரசியமான பக்கங்களை கொண்டதாக உள்ளது வெற்றிவேல் என்னும் ராதன் பண்டிட் கதை.
“ரிக்கி ராதன் பண்டிட் என்று வட இந்திய பாணியில் இவருடைய பெயர் இருந்தாலும் இவரது உண்மையான பெயர் வெற்றிவேல் என்பதே. திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி தான் இவருடைய சொந்த ஊர். முப்பது ஆண்டுகளுக்கு முன்பாக அந்த பகுதியில் சிறிய ஜோதிடராக இவருடைய பயணம் ஆரம்பித்துள்ளது.
ஜாதகம் பார்த்து அவர்களுக்கான பலனை நோட்டில் எழுதிக்கொடுத்து, இது நடக்கவில்லை என்றால் வந்து கேளுங்கள் என சவால் விடுவாராம். ஆரம்பத்தில் இவருடைய ஜோதிடம் பெரிய அளவில் எல்லாம் பேசு பொருளாக இல்லை. 96-ல் ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க படு தோல்வியடைந்து போது, அ.தி.மு.க வினர் பலரும் கடும் மன உளைச்சலில் இருந்தனர்.
அப்படி அ.தி.மு.க வில் இருந்த அந்த பகுதியை சேர்ந்த ஒரு வி.ஐ.பி-க்கு ஜோதிடம் பார்க்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. அப்போது, அவருக்கு சொன்ன பலன்களும், அ.தி.மு.க-வுக்கு பிரகாசமான எதிர்காலம் உள்ளது என்று அவர் சொன்னதை அந்த வி.ஐ.பி அப்போது அ.தி.மு.கவில் இருந்த ஈரோடு முத்துசாமியிடம் சொல்லியுள்ளார். அதன்பிறகு முத்துசாமி மேலும் சில அ.தி.மு.க பிரமுகர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார். அந்த தொடர்பை கெட்டியாக பிடித்துக்கொண்ட வெற்றிவேல் ஒரு கட்டத்தில் போயஸ் கார்டனுக்குள் கால் வைக்கும் வாய்ப்பு வந்தது.
ஜோதிடத்தின் மீது அதீத நம்பிக்கை கொண்ட ஜெயலலிதா, சசிகலா இருவரின் ஜாதகத்தையும் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்த தொடர்பை கெட்டியாக பிடித்துக்கொண்டார். ஒரு 2001-ல் ஜெயலலிதா மீண்டும் ஆட்சிக்கு வரவே, போயஸ் கார்டனின் ஆஸ்தான ஜோதிடராக கார்டனில் வளம் வந்தார். இவர் மீதான அபார நம்பிக்கையால், இவரை நம்பி பல முதலீடுகளையும், அ.தி.மு.க தரப்பு செய்தது. அதனால் பல்வேறு அமைச்சர்கள்,அதிகாரிகள் தொடர்பும் இவருக்கு கிடைத்தது.

இந்நிலையில் சசிகலா தரப்பு இவரிடம் சில விவரங்களை ஜோதிட ரீதியாக கேட்டுள்ளார். அ.தி.மு.க வின் அடுத்த தலைமை குறித்த இவர் சொன்ன சில தகவல்கள் சசிகலாவுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது. அதோடு வேறு சில புகார்களும் கார்டன் கதவை தட்டியது. சசிகலாவும் மீது இவர் கடும் டென்சனாக இவருக்கான கதவு கார்டனில் மூடப்பட்டது.
அந்த வருத்ததில் தமிழ்நாடே வேண்டாம் என டெல்லிக்கு பயணப்பட்டார். அப்போது தான் இவர் தனது பெயரை ராதன் பண்டிட் என மாற்றம் செய்தார். இவர் குடும்பத்தாருக்கும் பெயர் மாற்றங்கள் நடந்தது. புதிய பெயரில் பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்களை எடுத்தார். ஏற்கனவே அ.தி.மு.க வில் இருந்த தொடர்பை வைத்து டெல்லி பா.ஜ.க பிரமுகர்களுக்கு ஜோதிடம் பார்க்க ஆரம்பித்தார்.
ஒரு கட்டத்தில் அன்றைய பா.ஜ.கவின் முக்கிய தலைவர்களாக இருந்த அத்வானி, முரளி மனோகர் ஜோஷி போன்றவர்களுக்கு ஜோதிடராக உருவானார். சரத் பவார் குடும்பத்திற்கும் இவரே ஆஸ்தான ஜோதிடராக இருந்தார். ஆனால், அங்கு உருவான சில சங்கடமான சூழ்நிலைகளால், அங்கும் அவரால் பணிகளை தொடர முடியவில்லை.
அங்கிருந்து சிங்கப்பூர் பயணப்பட்டார். அங்கு, ஜோதிட நிறுவனத்தையும் துவங்கினார். அப்போது தனது பெயருடன் ரிக்கியை இணைத்துக்கொண்டார். சிங்கப்பூர் தொழில் அதிபர்கள் பலரது தொடர்பும் கிடைத்தது. பொருளாத ரீதியாகவும் பலம் பெற்றார். அங்கிருந்து தமிழகத்தில் இருந்த பல வி.ஐ.பிக்களுக்கு ஆன்லைன் வழியாக ஜோதிடம் பார்க்க ஆரம்பித்தார். ஒருகட்டத்தில் தி.மு.க தலைவர் ஸ்டாலின் மனைவி துர்காவை சந்திக்கவும் முயன்றார். அது முடியாமல் போகவே தமிழகத்தில் தனக்கான இடத்தை பிடிக்கும் வேகத்தில் இறங்கினார்.
அப்போதுதான் விஜய் அரசியலுக்கு வரும் யோசனையில் இருப்பதாக தெரியவே, அவரை சந்தித்தார். 2020-ம் ஆண்டு கால கட்டத்தில் விஜய்க்கு இவருக்கும் ஏற்பட்ட தொடர்பு இப்போது அரசியல் பதவி வரை கொண்டுவந்துள்ளது ” என்கிறார் ரிக்கி ராதன் பண்டிட்டுக்கு நெருக்கமானவர்கள்.
இப்போது முதல்வரின் அரசியல் ஆலோசகர் என்கிற பதவி இவருக்கு வழங்கப்பட்டுள்ளது. அரசு வாகனம், தலைமை செயலகத்தில் அறை உள்ளிட்ட வசதிகளும் இவருக்கு செய்து தர உள்ளனர். அதோடு முதல்வருடன் முக்கியமான விவகாரங்களில் ஆலோசனை நடத்தும் குழுவிலும் இவரும் இருப்பார். முப்பது ஆண்டு கால போராட்டத்திற்கு பிறகு தனது கனவை நிறைவேற்றியிருக்கிறார் ரிக்கி ராதன் பண்டிட் வெற்றிவேல்!.
.png)





English (US) ·