55.49 கோடியை எட்டிய யுபிஅய் பயனர்களின் எண்ணிக்கை!

5 hours ago 7

55.49 கோடியை எட்டிய
யுபிஅய் பயனர்களின் எண்ணிக்கை!

புதுடில்லி, ஜூலை 21- இந்தி யாவில் யுபிஅய் பயனர்களின் எண்ணிக்கை சுமார் 55.49 கோடியை எட்டியுள்ளதாக ஒன்றிய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் நொடிப் பொழுதில் டிஜிட்டல் முறையில் சாமானியர்கள் தொடங்கி அனைத்து தரப்பினரும் பணத்தை பெறவும், அனுப்பவும் உதவுகிறது யுபிஅய் பேமென்ட். இது வணிகர்கள், வாடிக்கையாளர்கள் என அனைவருக்கும் சாதகமானதாகவும் உள்ளது. நகரம் முதல் கிராமம் வரை அனைத்து இடங்களிலும் யுபிஅய் செயல்பாட்டில் உள்ளது. இதனால், ரொக்கத்தின் பயன்பாடு வெகுவாக குறைந்துள்ளது.

கூகுள் பே, போன் பே, பேடிஎம், அமேசான் பே, BHIM என பல்வேறு செயலிகளின் மூலம் இந்தியாவில் யுபிஅய் பரிவர்த்தனை மேற்கொள்ளப்படுகிறது. நாளுக்கு நாள் இதன் பயனர்கள் மற்றும் பரிவர்த்தனைகளின் எண்ணிக்கை கூடிக்கொண்டே வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சூழலில் நடப்பு ஆண்டின் ஜூன் மாத தகவலின் படி நாட்டில் யுபிஅய் பயனர்களின் எண்ணிக்கை சுமார் 55.49 கோடியை எட்டியுள்ளதாக ஒன்றிய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த தகவலை நாடாளுமன்றத்தில் எழுத்து பூர்வமாக ஒன்றிய இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி வெளியிட்டார். என்பிசிஅய் தரவுகளின் அடிப்படையில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், 2025-2026 நிதியாண்டில் யுபிஅய் வாயிலாக மேற்கொள்ளப்பட்ட பரிவர்த்தனைகளின் எண்ணிக்கை 24,161.69 கோடி என்றும், அதன் மதிப்பு ரூ.314.23 லட்சம் கோடி என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2024-2025 நிதியாண்டில் யுபிஅய் பரிவர்த்தனைகளின் எண்ணிக்கை 18,586.60 கோடியாகவும், அதன் மதிப்பு ரூ.260.56 லட்சம் கோடியாகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.

யுபிஅய் பரிவர்த்தனை மிகவும் பாதுகாப்பானதாகவும், வெளிப்படைத் தன்மையோடும் இருக்க காலத்துக்கு ஏற்ப பல்வேறு முன்முயற்சியை ஒன்றிய அரசு, ரிசர்வ் வங்கி மற்றும் என்பிசிஅய் மேற்கொண்டு வருவது குறிப்பிடத் தக்கது. மேலும், யுபிஅய் சேவை உலக முழுவதும் 13 நாடுகளில் (இந்தியாவையும் சேர்த்து) பயன்பாட்டில் உள்ளது. இவ்வாறு ஒன்றிய இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரியின் பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read Entire Article