எண்ணங்களின் இருமுனை ஆற்றல்: வெற்றியின் ரகசியம்!

52 minutes ago 9

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர்

மனித வாழ்வின் உயர்விற்கும் தாழ்விற்கும் ஆணிவேராக விளங்குவது எண்ணங்களே. மனம் என்கிற “ஆறாவது அறிவு” ஒரு கருத்தைச் சிந்தித்து, அதைச் செயலாக்க முனைவதே எண்ணம் எனப்படும்.

உலகில் நடைபெறும் ஒவ்வொரு செயலும் மனித எண்ணத்தின் வெளிப்பாடே ஆகும். பொதுவாக எண்ணங்களை நேர்மறை (Positive) மற்றும் எதிர்மறை (Negative) என இரு துருவங்களாக வகைப்படுத்தினாலும், ஒன்றோடு ஒன்று இணைந்தால் மட்டுமே சக்தி வாய்ந்த ஆற்றல்கள் கிடைக்கப் பெற்று வெற்றி அடைகிறோம் என்பதை உணர்த்துவதே இக்கட்டுரையின் நோக்கம்.

 வெற்றியின் ரகசியம்!

1.    திருவள்ளுவர் காட்டும் மேலாண்மை நெறி

எண்ணங்களை எவ்வாறு கையாள வேண்டும் என்பதற்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தெய்வப்புலவர் திருவள்ளுவர் ஒரு தெளிவான வரையறையை வழங்கியுள்ளார்:

“எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்

    எண்ணுவம் என்பது இழுக்கு”

இதன் பொருள், ஒரு செயலைத் தொடங்கும் முன்பே அதன் எதிர்மறை விளைவுகளையும், அதனால் ஏற்படும் சவால்களையும் (Risk Analysis) தீர சிந்திக்க வேண்டும் என்பதாகும். இவ்வாறு சிந்தித்துத் தெளிவு பெற்ற பின் நோ்மறை எண்ணத்துடன் செயல்பட்டால் வெற்றி தன் வசமாகும். அதே வேளையில் செயலில் இறங்கிய பிறகு "நம்மால் முடியுமா?" எனச் சிந்திப்பது குற்றமாகும்.

அதாவது ஒரு தெளிவான சமூகத்தை உருவாக்க, செயலுக்கு முன் 'எதிர்மறைச் சிந்தனை' என்ற எச்சரிக்கையும், செயல்படுத்தும் போது 'நேர்மறை எண்ணம்' என்ற வேகமும் இருக்க வேண்டும்.

2.    இயற்கையின் நீதி: அணு மற்றும் மின்சாரம்

இயற்கையின் அடிப்படை விதிகள் அனைத்தும் எதிர் வினைகளின் அவசியத்தையே வலியுறுத்துகின்றன:

·         அணுவின் இயக்கம்: ஓர் அணுவின் நிலைத்தன்மைக்கு நேர் ஆற்றல் கொண்ட புரோட்டான்களும், அதைச் சுற்றி இயங்கும் எதிர் ஆற்றல் கொண்ட எலக்ட்ரான்களும் அவசியமாகும். எலக்ட்ரான்களின் இயக்கமே அணுவின் அசைவிற்கும் அதன் மின்புலத்திற்கும் அச்சாணியாக விளங்குகிறது.

·         காந்தத் துருவங்கள்: காந்தத்தின் வடதுருவமும் தென்துருவமும் ஒன்றையொன்று வெட்டும்போதுதான் மின்னூட்டம் (Charge) தூண்டப்படுகிறது. முரண்பட்ட இரு துருவங்களின் சந்திப்பே முன்னேற்றத்திற்கான ஆற்றலை உருவாக்குகிறது.

·         மின்சாரச் சுற்று: ஒரு மின்விளக்கு ஒளிர வேண்டுமானால் பாசிட்டிவ் (நோ்மறை) மற்றும் நெகட்டிவ் (எதிர்மறை) ஆகிய இரு முனைகளும் இணைய வேண்டும். எதிர் முனை (Negative wire) இல்லையென்றால் மின்சாரம் என்பது கேள்விக்குறியே.

 வெற்றியின் ரகசியம்!

3.  பொறியியல் மற்றும் தொழில்நுட்ப அறம் (Engineering Ethics)

இந்த விதிகள் நவீன தொழில்நுட்ப உலகிற்கும் மிக முக்கியமான வழிகாட்டியாக இருக்கிறது. அதாவது ஒரு புதிய கண்டுபிடிப்பு அல்லது பொறியியல் கட்டுமானம் உருவாக்கும்போது கிடைக்கப்பெறும் நன்மைகளை விட, அதனால் தமக்கும், சுற்றியுள்ள மக்களுக்கும் ஏற்படும் தீமைகளை முதலில் அலசி ஆராய்ந்து செயல்படுத்தவேண்டும்.

·         பாதிப்பு ஆய்வு (Impact Analysis): ஒரு புதிய மென்பொருளோ அல்லது ஒரு கட்டுமானமோ உருவாக்கப்பட்ட பின் ஏற்படுத்தும் தீமைகளைப் அதாவது அழிவுகளைப் பற்றி எண்ணுவது வீண். தொடக்கத்திலேயே அதன் விளைவுகளை (Environmental and Social Impacts) ஆராய்ந்து, அவற்றிற்குத் தீர்வு காண்பதே ஒரு சிறந்த ஆராய்ச்சியாளரின் பண்பு.

·         பாதுகாப்பு வடிகட்டி: ஒரு மருந்து அல்லது தொழில்நுட்பத்தின் பக்கவிளைவுகளை (Side effects) ஆராய்வதே எதிர்மறை ஆய்வு எனப்படும். இது அதனுடைய தரத்தினை உறுதி செய்யும். இங்கே எதிர்மறை ஆய்வு என்பது ஒரு "பாதுகாப்பு வடிகட்டி" (Safety Filter) எனப்படுகிறது.

4. பாதுகாப்பு நிறுவனங்களின் முன்னுதாரணம் (The Role of Guardians)

ஒவ்வொரு நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்யும் ராணுவம் மற்றும் காவல்துறை போன்ற அமைப்புகளின் செயல்பாடுகள், எதிர்மறை எண்ணங்களின் ஆக்கப்பூர்வமான பயன்பாட்டிற்குச் சான்றாகும். அவர்கள் இரவும் பகலும் எந்நேரத்திலும் "ஆபத்து நிகழலாம்" என்ற எதிர்மறையான எச்சரிக்கை உணர்வுடனேயே (Negative Analysis) ரோந்தினை மேற்கொள்கிறார்கள்.

இவ்வாறு எதிர்மறையான ஆபத்துகளை அவர்கள் முன்னெச்சரிக்கையாக கணிப்பதால்தான், நாட்டு மக்களுக்குப் பாதுகாப்பான ஒரு நேர்மறைச் சூழல் கிடைத்துக் கொண்டிருக்கிறது என்பது கவனிக்கத்தக்கது.

 வெற்றியின் ரகசியம்!

5. சமூகமும் எதிர்மறைச் சிந்தனை இன்மையும்

இன்றைய சமுதாயத்தில் நிலவும் வன்முறைப் போக்குகளுக்கு, ஒரு செயலின் 'பின்விளைவுகளை' ஆராயும் எதிர்மறைச் சிந்தனை இல்லாமல் போனதே முக்கியக் காரணமாகும்.

·         மனிதாபிமானச் சிதைவு: முன்னொரு காலத்தில் கைகலப்பு நேர்ந்தால் கூடி நின்று தடுத்த மக்கள், இன்று அதன் காரணங்களை அறியாமலேயே வன்முறையில் ஈடுபடுவதைக் காண்கிறோம்.

·         பதிவு கலாச்சாரம்: வன்முறையைத் தடுப்பதை விடுத்து, அதைத் தன் கைபேசியில் 'கின்னஸ்' சாதனைக்காகவும், சமூக ஊடக 'ரீல்ஸ்' காட்சிகளுக்காகவும் பதிவு செய்பவர்களின் வேதனைக்குரிய செயல் பெருகிவிட்டது.

·         தவறான நேர்மறை பிம்பம்: "என்னால் முடியும்", "செய்து காட்டுவேன்" என்ற பெயரில் பின்விளைவுகளைச் சிந்திக்காமல் செய்யப்படும் 'அட்ராசிட்டி'கள் (Atrocity) சமூகத்தில் கொலை, கொள்ளை மற்றும் பாலியல் குற்றங்கள் பெருக வழிவகுக்கின்றன.

தமக்கு இது போன்ற ஒரு நிலை நேர்ந்தால் அதன் பின்விளைவுகள் எத்தகையதாக இருக்கும் என்கிற அந்த ஆரோக்கியமான எதிர்மறைச் சிந்தனை (Constructive Fear) இல்லாததே இத்தகைய அநாகரிகச் செயல்களுக்கு மூலகாரணம்.

6. எண்ணமும் செயலும்

முன்பெல்லாம் ஒரு செயல் என்பது உடல் உழைப்பு சார்ந்ததாகவோ அல்லது ஒரு குறிப்பிட்ட வேலை (Physical Work) சார்ந்ததாகவோ மட்டுமே பார்க்கப்பட்டது. ஆனால், இன்றைய டிஜிட்டல் யுகத்தில் "தகவல் பரிமாற்றம்" (Information Sharing) என்பதே மிகப்பெரிய செயலாக உருவெடுத்துள்ளது.

 வெற்றியின் ரகசியம்!

·               வார்த்தை ஒரு 'வினை' (Word as an Action): இயற்பியலில் ஒரு பொருளின் மீது விசை (Force) செலுத்தப்படும்போது வேலை (Work) நடப்பதாகக் கொள்கிறோம். இன்றைய காலத்தில் ஒரு "வார்த்தை" அல்லது ஒரு "தகவல்" என்பது அந்த விசைக்கு இணையானது. சமூக ஊடகத்தில் பகிரப்படும் ஒரு வார்த்தை தகவல், பல கோடி மக்களின் மனநிலையை மாற்றும் வல்லமை கொண்டது. எனவே, ஒரு 'ஷேர்' (Share) அல்லது 'ஃபார்வர்டு' (Forward) செய்வது என்பது வெறும் பொழுதுபோக்கு அல்ல; அது ஒரு தீவிரமான செயல்.

·               டிஜிட்டல் எதிர்வினை (Digital Reaction): நியூட்டனின் மூன்றாம் விதியான ஒவ்வொரு வினைக்கும் அதற்குச் சமமான எதிர்வினை உண்டு என்பது மிகச்சரியாகப் பொருந்தும்.

ஒரு தவறான தகவலையோ அல்லது வன்முறையைத் தூண்டும் ஒரு வார்த்தையையோ நீங்கள் சமூக ஊடகச் சுவற்றில் எறியும்போது, அது நீங்கள் எறிந்த வேகத்தை விடப் பல மடங்கு வேகத்தில் எதிர்வினையாகத் (Reaction) திரும்பி வருகிறது.

இத்தகைய எதிர்வினை ஒரு கலவரமாகவோ, ஒருவரின் மன உளைச்சலாகவோ அல்லது சட்ட ரீதியான தண்டனையாகவோ மாற்றம் அடையும் என்பது கவனிக்கத்தக்கது.

·   பொறுப்பற்ற சிந்தனை (Irresponsible Perception): "சும்மா ஒரு வார்த்தை தகவலைத் தானே அனுப்பினேன், இதில் என்ன வேலை இருக்கிறது?" என்ற பொறுப்பற்ற எண்ணமே இன்று பலவிதமான குற்றங்களுக்குக் காரணமாகிறது.

ஒரு தகவலைப் பரப்புவதற்கு முன், "இதனால் தமக்கும் குடும்பத்திற்கும் மற்றும் சமூகத்திற்கும் என்ன தீமை விளையும்?" என்ற எதிர்மறை சிந்தனையினை ஒருவன் மேற்கொள்ளவேண்டும். இவ்வாறு சிந்திக்க தவறும்போது, அந்தத் தகவல் ஒரு நச்சுக் காற்றாகப் பரவ வாய்ப்புள்ளது என்பதனை ஒவ்வொருவரும் உணரவேண்டும்.

முடிவுரை

நேர்மறை எண்ணங்கள் வெற்றிகரமாகச் செயல்பட, எதிர்மறை எண்ணங்கள் ஒரு பாதுகாப்பு அரணாகவும், இயக்கு சக்தியாகவும் திகழ்கின்றன. அணு, மின்சாரம், காந்தம் மற்றும் பொறியியல் என அனைத்துத் துறைகளிலும் 'நெகட்டிவ்' என்பது எப்படி ஒரு முக்கியப் பங்கினை வகிக்கிறதோ, அப்படியே வாழ்விலும் ஆரோக்கியமான எதிர்மறைச் சிந்தனைகள் (பின்விளைவுகளைப் பற்றிய விழிப்புணர்வு) ஒரு மனிதனை அறநெறியில் நடக்க வைக்கும் அடித்தளமாக அமைகிறது.

எதற்கெடுத்தாலும் இடம், பொருள், ஏவல் பாராமல் “என்னால் முடியும்”, “செய்து காட்டுவேன்” என்பதனை கைவிட்டு இவ்விரு ஆற்றல்களையும் இணைத்துப் பயன்படுத்துவோமேயானால், நம்முடைய எதிர்காலத் தலைமுறையினர் வன்முறையற்ற, பாதுகாப்பான மற்றும் ஆரோக்கியமான சமுதாயத்தில் வாழ்வது திண்ணம்.

எண்ணங்கள் என்பது வெறும் பயணமல்ல; அது விளைவுகளின் தீவிரம். இந்த உண்மையை உணர்ந்து செயல்படுவதே மனிதனின் அடையாளம்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

My vikatan

My vikatanMy vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

Read Entire Article