Last Updated:Feb 08, 2026 9:37 AM IST
சிவகாசி மக்களின் தனித்துவமான ஆன்மிக பாரம்பரியமாக இவ்வழிபாடு விளங்குகிறது.

சிவகாசி பத்ரகாளியம்மன் கோவில்
சிவகாசியில் உலக நன்மைக்காக பத்ரகாளியம்மனுக்கு 300 பெண்கள் குடும்பத்துடன் பாரம்பரிய பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர்.
சிவகாசியில் பிரசித்தி பெற்ற பத்ரகாளியம்மன் கோவில் வளாகத்தில், உலக நன்மை, தொழில் வளம் மற்றும் சமூக ஒற்றுமை வேண்டி சுமார் 300 பெண்கள் தங்களது குடும்பத்தினருடன் இணைந்து சிறப்பு பொங்கல் வழிபாட்டில் ஈடுபட்டனர். நூற்றாண்டுகளாக தொடரும் இந்த பாரம்பரிய வழிபாடு, தை மாதத்தின் 3-ம் செவ்வாய்க்கிழமை ஒவ்வொரு ஆண்டும் ஒற்றுமையாக நடத்தப்பட்டு வருகிறது.
இதையொட்டி, அதிகாலை முதலே பெண்கள் பொங்கல் பானைகளை தலையில் சுமந்தபடி, மேள தாளத்துடன் சிவகாசி நகரின் முக்கிய வீதிகளின் வழியாக குடும்பத்தோடு ஊர்வலமாகச் சென்றனர். பக்தி பரவசத்துடன் நடைபெற்ற இந்த ஊர்வலம், பத்ரகாளியம்மன் கோவில் வளாகத்தை வந்தடைந்தது. பின்னர், வரிசையாக அமர்ந்து பொங்கல் பானைகளில் பொங்கல் வைத்து, குலவையிட்டு அம்மனை வணங்கி வழிபாடு செய்தனர். தொடர்ந்து கிடா வெட்டி, அம்மனுக்குப் படையலிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
உலக நன்மைக்காகவும், சிவகாசியின் பட்டாசு, அச்சு, தீப்பெட்டி உள்ளிட்ட தொழில்கள் மேலும் வளர்ச்சி பெறவும், சமூக ஒற்றுமை நிலைத்திருக்கவும் ஜாதி பேதமின்றி ஒன்றிணைந்து இவ்வழிபாட்டை நடத்தி வருவதாக பெண் பக்தர்கள் தெரிவித்தனர். தலைமுறை தலைமுறையாக அம்மன் மீது வைத்துள்ள ஆழ்ந்த நம்பிக்கையுடன் இந்த வழிபாடு தொடர்வதாகவும் அவர்கள் கூறினர்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
.png)







English (US) ·