தூய்மைப் பணியாளர்களுக்கு முக்கால உணவளிக்கும் விரிவாக்கத் திட்டத்தை தொடங்கி வைத்து அவர்களுடன் இணைந்து உண்டு மகிழ்ந்தார். - படம்: விடுதலை
சென்னை: தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (பிப்ரவரி 9) திருவள்ளூர் அருகே உள்ள போலிவாக்கத்தில் மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்களுக்கான விரிவாக்கம் செய்யப்பட்ட மூன்று வேளை உணவு வழங்கும் திட்டத்தை முறைப்படி தொடங்கி வைத்தார்.
இந்த உன்னதமான திட்டத்தின் வாயிலாக மாநிலம் முழுவதும் உள்ள சுமார் 1.29 லட்சம் தூய்மைப் பணியாளர்கள் இனி நாள்தோறும் பயன் பெறுவர்.
பணியாளர்களுக்கு உரிய நேரத்திற்குள் தரமான உணவை அளிக்கும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்ட சிறப்பு உணவு வாகனச் சேவையை முதல்வர் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.
அதனைத்தொடர்ந்து, தூய்மைப் பணியாளர்களின் குடும்ப நலனைக் கருத்தில்கொண்டு கல்வி உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் அவர் வழங்கினார்.
நிகழ்வின் சிறப்பம்சமாக, முதல்வர் தூய்மைப் பணியாளர்களுக்கு உணவினைப் பரிமாறியதோடு, அவர்களுடன் இணைந்து அமர்ந்து உணவு உண்டு மகிழ்ந்தார். பின்னர் அவர்களுடன் கலந்துரையாடி குழுப் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.
இந்த விழாவில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, சிறுபான்மையினர் நலம், வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் சா.மு.நாசர், மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப், சட்டப்பேரவை உறுப்பினர்கள் வி.ஜி. ராஜேந்திரன், கிருஷ்ணசாமி, டி.ஜே.கோவிந்தராஜன், சுதர்சனம், மாவட்ட வருவாய் அலுவலர் சுரேஷ், ஊரக வளர்ச்சி திட்ட இயக்குநர் வை. ஜெயக்குமார், கூட்டுறவுத்துறை இணைப்பதிவாளர் ஜெயஸிரி, நகர்மன்ற தலைவர் உதயமலர் பாண்டியன், ஆணையாளர் தாமோதரன், நகர் மன்ற துணைத்தலைவர் சி.சு.ரவிச்சந்திரன் உள்ளிட்ட அரசு உயர் அலுவலர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் திரளாகப் பங்கேற்றனர்.
.png)






English (US) ·