தமிழறிஞர் இ.சுந்தரமூர்த்தி மறைவு – தமிழர் தலைவர் இறுதி மரியாதை

47 minutes ago 7

சென்னை, மே 14- மறைந்த மேனாள் தமிழ்ப் பல்கலைக்கழக துணைவேந்தரும், தமிழறிஞருமான முனைவர் இ.சுந்தரமூர்த்தி (வயது 84) உடலுக்குத் தமிழர் தலைவர் மாலை வைத்து மரியாதை செலுத்தினார். உடன் கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் மற்றும் தோழர்கள் பங்கேற்றனர்.

முதுபெரும் தமிழறிஞரும் பேராசிரியருமான இ.சுந்தரமூர்த்தி, நேற்று (13.5.2026) காலமானார். கோவை மாவட்டம், வெள்ளலூரில் பிறந்தவர் இ.சுந்தரமூர்த்தி. இவர், மானிடவியல், கல்வெட்டுத் துறை படிப்புகளுடன், திருக்குறள் பரிமேலழகர் உரை குறித்து ஆய்வு செய்து, முனைவர் பட்டமும் பெற்றவர்.

தஞ்சை தமிழ் பல்கலை.யின் துணை வேந்தர், சென்னை பல்கலை. தமிழ்த் துறை மற்றும் பதிப்புத் துறைகளின் தலைவர், செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் துணைத் தலைவர் உள்ளிட்ட பொறுப்புகளை வகித்தவர்.

கடந்த 40 ஆண்டுகளாக தமிழ் இலக்கியம், இலக்கணம் குறித்து, 65 ஆய்வு நுால்களை எழுதினார். தமிழ்நாடு அரசின் திருவள்ளுவர் விருது உள்ளிட்டவற்றைப் பெற்றதுடன், செந்தமிழ் செல்வர், குறள் ஞாயிறு, தமிழ் மாமணி உள்ளிட்ட பட்டங்களையும் பெற்றவர். வயது மூப்பால் ஏற்பட்ட உடல்நலப் பாதிப்புக்காக, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில், நேற்று அதிகாலை மாரடைப்பால் காலமானார்.

பெருங்குடியில் அவரது இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த உடலுக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி, கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் ஆகியோர் இறுதி மரியாதை செலுத்தினர்.

இன்று காலை 10:00 மணிக்கு, சென்னை பெருங்குடி, திருமலை நகர் இணைப்பு, பாரதி தெரு 16ஆம் எண் வீட்டில் இறுதி நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

Read Entire Article